News Update :
Home » » நடிகர்களில் ஒழுக்கமானவர்களே கிடையாது... அரசியலில்?

நடிகர்களில் ஒழுக்கமானவர்களே கிடையாது... அரசியலில்?

Penulis : karthik on Friday 27 January 2012 | 03:57


நடிகர்களில் ஒழுக்கமானவர்களே கிடையாது... என்று மீண்டுமொரு முறை புலம்பி தீர்த்து இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். அப்படியே அரசியல்வாதிகளின் ஒழுக்கம் (ஊழல், வன்முறை) மற்றும் மருத்துவர்களின் ஒழுக்கம் (​பேராசை) போன்றவற்றையும் கூறி இருக்கலாம். சேம் சைடு கோல் போட முடியாதே. ராமதாஸின் தம்பியையே சி.பி.ஐ கைது செய்துள்ளது - கொலை வழக்கில். அடுத்தவர்களின் ஒழுக்கம் பற்றி பேசுபவர்கள் - வன்முறை இல்லா ஆரோக்கியமான அரசியலுக்கு ஆரம்பமாக இருக்க வேண்டாமா.

பிறரை "புறம் பேசுவதும் மோசமான வியாதியே" என்பது மருத்துவர் அய்யாவுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே. சினிமா கலைஞர்களை பழித்து பேசுவதில் - இரண்டு விதமான அனுகூலங்கள் உள்ளன. ஒன்று, மீசையை முறுக்கி கொண்டு, "ஏன் எங்களை பழிக்கிறாய்" என்று சாதி கட்சியை போல எவரும் வன்முறையை கையில் எடுக்க போவதில்லை. இரண்டு செய்திகளில் அடிபட்டு கொண்டே இருக்கலாம். பிரபலமடைய ஒரு கேவலமான உத்தி இது என்று சொல்லலாம். இந்த இரண்டை தான் விரும்புகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

நமக்குள்ள ஒரே ஆச்சரியம். "எப்படி சலிப்பில்லாமல் மேடைக்கு மேடை இதையே பேசி கொண்டிருக்க முடிகிறது" என்று. தமிழக கட்சிகள் ஒவ்வொன்றும் - சில விஷயங்கள் குறித்து பேசி பொழுதை ஒப்பேத்துவதற்காக காப்புரிமை பெற்றுள்ளதோ என்றொரு சந்தேகம் வெகு நாளாகவே உள்ளது. கம்யூனிஸ்ட்களுக்கு - முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் என்பன. திராவிட க(ட்சி)ழகங்களுக்கு பார்ப்பனியம், மாநில சுயாட்சி என்பன... அந்த வரிசையில் பா.ம.க பெற்றுள்ள காப்புரிமை - திராவிடத்தையும், சினிமா நடிகர்களையும் பழித்தல்.

சமீபத்திய அன்புமணி ராம்தாஸின் பழித்தல் பேச்சை பார்ப்போமா? "திராவிட கட்சிகளுடன், 15 ஆண்டுகளாக நாம் கூட்டணி வைத்தது தவறு. இதை ஒப்புக்கொள்கிறேன். அத்தவறு இனி நடக்காது. உள்ளாட்சி தேர்தலில் சுயமரியாதையாக போட்டியிட்டு வெற்றி பெற்றோம். நமது வெற்றியை பத்திரிகையாளர்கள் அங்கீகரிக்கவில்லை. நம்மை கண்டு திராவிட கட்சிகள் பயப்படுகின்றன. இதுதான் நமக்கு முதல் வெற்றி. தமிழக அரசு 1.19 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளது.

எங்களிடம் ஆட்சியை கொடுங்கள். ஓராண்டில் அடைத்து காட்டுகிறோம். நமக்கு தகுதி இல்லை என்றால் வேறு யாருக்கும் தகுதி கிடையாது. வரும் லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளிலும் பா.ம.க., போட்டியிடும்.
நாம் சினிமாவுக்கு எதிரானவர்கள் அல்ல. நானும், நிறுவனர் ராமதாசும் படம் பார்ப்போம். அது பொழுதுபோக்கு. சினிமாவில் நடித்தவர்கள் அரசியலுக்கு வர விரும்புகின்றனர். குழந்தைக்கு பால் கிடைக்காத நிலையில், நடிகனின் "கட்-அவுட்'டுக்கு பாலாபிஷேகம் செய்கின்றனர். பீர் அபிஷேகம்கூட செய்கின்றனர்.

சினிமாவில் உண்மையான, ஒழுக்கமானவர்கள் ஒருத்தர்கூட இல்லை. நோஞ்சான் மாதிரி இருப்பவன், "ப்பூ' என ஊதினா பறந்து போகிறவன் எல்லாம், 10 பேரை சுற்றி சுற்றி அடிக்கிறான்.ஸ்பிரேயை அடித்து வியர்வை சிந்தி உழைப்பவன் போல் காட்டுகிறான். இவர்கள் அடுத்த முதல்வராக வர ஆசைபடுகின்றனர். இது தமிழ்நாட்டின் தலையெழுத்து" என்று பேசி இருக்கிறார்.

"திராவிட கட்சிகளுடன், 15 ஆண்டுகளாக நாம் கூட்டணி வைத்தது தவறு. இதை ஒப்புக்கொள்கிறேன். அத்தவறு இனி நடக்காது." என்கிறார். என்னவோ மக்கள் "திராவிட கட்சிகளுடன் இவர்கள் கூட்டணி" வைத்ததற்கு ரெம்ப வருத்தப்பட்டது போல பேசுகிறார். கூட்டணி வைத்து மந்திரி பதவி பெற்றது நீங்கள். கூட்டணி அறுந்ததால் மந்திரி பதவியை இழந்ததும் நீங்கள். உங்கள் கூட்டணியால் மக்கள் ஒன்றும் சம்பாதிக்கவில்லையே. மக்களுக்கு இது தான் கவலையா

ஜெயிக்கிற கூட்டணியில் எது நின்றாலும் - மக்கள் அதற்கு ஒட்டு போடுவார்கள். அது பா.ம.க.,வா, தே.மு.தி.க.,வா என்றெல்லாம் பார்ப்பதில்லை. அப்படி பெற்ற வெற்றிக்கெல்லாம் காரணகர்த்தவார ஆக முடியுமா? ஊராட்சி மன்ற தேர்தலில் பா.ம.க வெற்றியை பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லையாம். "ஜஸ்ட் பாஸ்" கூட வாங்கவில்லை. அதை வெற்றி என்று எப்படி நடுநிலையாளர்களால் சொல்ல முடியும். "நாங்கள் சினிமாவுக்கு எதிரி இல்லை" என்று ராமதாசும், இவரும் வீட்டில் சினிமா பார்ப்பார்களாம். நாம் கூட அரசியலுக்கு எதிரி இல்லை. சாதி கட்சியின் வன்முறை அரசியலுக்கு தான் எதிரி.

அன்புமணிராம்தாஸ் சொன்ன மாதிரியே கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் என்பதை நாமும் வெறுக்கிறோம். பாலாபிஷேகம் என்கிற கேவலத்தை எவன் துவக்கிவைத்தான் என்று தெரியவில்லை. ஆனால் அரசியல் கட்சிகளின் வன்முறை ரத்த அபிஷேகத்திற்கு முன், பாலாபிஷேகத்தை கண்டித்து மன்னிக்கலாம். நோஞ்சான் மாதிரி என்கிறார் அன்புமணி. மருத்துவர் நோஞ்சான் என்கிற வார்த்தையை உபயோகிக்கலாமா? ஒருவன் பத்து பேரை அடிக்கிறானாம். பத்து பேரின் சொத்தை அபகரிக்கிற ஒரு அரசியல்வியாதியை விடவா இது மோசம்.

இளைய தலைமுறை வளரும் தலைவர்கள் - தமிழருவி மணியன் அவர்களின் பேச்சை கேட்பது நல்லது. யாரையும் பழிக்காமல், அதே நேரம் சம்பந்தப்பட்டவர் மீது சாட்டப்படும் குற்றத்தை அழகாக, அதே நேரம் ஆணித்தரமாக பதிவு செய்வதில் வல்லவர். அம்மாதிரியான பேச்சு நாகரீகத்தை கை கொள்வது நல்லது. திராவிட தலைகள், திட்டி திட்டியே வளர்ந்தது போல தாங்களும் வளர்ந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் போலும். அந்த காலம் வேறு. இந்த காலம் வேறு.

நிச்சயம் இன்றைக்கு தமிழகத்தில் கடுமையான பிரச்சனைகள் பல இருக்கின்றன. ஆனால் அது குறித்து பேசவோ, போராடவோ அச்சப்பட்டு கொண்டு - அரசியல் கூட்டத்தில் தாங்கள் தொலைந்து போகாமல் இருக்க - திராவிடத்தையும், சினிமாவையும் பழிக்கின்றனர். கூட்டத்திற்கு கூட்டம் இதையே பேசி கொண்டு இருந்தால் - தொண்டர்கள்(!) துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடி விட மாட்டார்கள். ராம்தாஸ் கூட்டத்தில் அது தானே நடந்தது.

கட்சி ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, ராம்தாஸ் பேசி கொண்டிருக்கும் போதே ஒவ்வொருவராக எழுந்து போக, கோபமுற்ற ராமதாஸ் - மேற்கொண்டு தொண்டர்கள் ஓடி போகாமல் இருக்க, வாசல் கேட்டை இழுத்து மூடிவிட்டு பேசினாராம். இனியும் பிறரை பழிக்காமல் - தங்களை சுயபரிசோதனை செய்தால் கட்சி பிழைக்கும். இல்லை எனில், இரண்டு மருத்துவர்கள் இருந்தும் கட்சியை காப்பாற்ற இயலாமல் போகும்.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger