News Update :
Home » , » 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை

35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை

Penulis : Tamil on Tuesday 9 July 2013 | 02:21

தட்டார்மடம் அருகே திருமணமான 35 நாளில் கணவரே தன்னுடைய மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, விபத்தில் இறந்தாக நாடகமாடியது அம்பலமானது.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
கட்டிட காண்டிராக்டர்
உடன்குடி தேரியூரைச் சேர்ந்தவர் ராகவன். இவர் அங்குள்ள அய்யா வழி கோவிலில் தர்மகர்த்தாவாக உள்ளார். இவருக்கு சுதாகர் (வயது 33), பிரபாகரன் ஆகிய 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். மூத்த மகன் சுதாகர் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கும், உடன்குடி அருகே உள்ள தண்டுபத்து சாமியார்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிவமுருகன் மகள் சூர்யா (30) என்பவருக்கும் கடந்த 35 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.


கணவன், மனைவி தகராறு
சுதாகர் அடிக்கடி பல பெண்களில் செல்போனில் பேசி கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி 2 பேரும் நாகர்கோவில் அருகே உள்ள சாமிதோப்பு கோவிலுக்கு காரில் சென்றுவர திட்டமிட்டனர்.
சுதாகருக்கு சொந்தமாக கார் உள்ளது. ஆனாலும் அவர் தன்னுடைய நண்பர் விவேகானந்தன் என்பவருக்கு சொந்தமான காரை வாங்கி கொண்டு வந்தார். சுதாகரும், சூர்யாவும் அந்த காரில் சாமிதோப்பு கோவிலுக்கு சென்றனர்.
மனைவி கத்தியால் குத்திக்கொலை
பின்னர் மாலையில் கணவன், மனைவி 2 பேரும் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். சுதாகர் காரை ஓட்டிச் சென்றார். இரவு 9 மணியளவில் தட்டார்மடம் அருகே உள்ள நடுவக்குறிச்சி மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது, கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுதாகர் மறைத்து வைத்திருந்த கத்தியால் தன்னுடைய மனைவி சூர்யாவின் கழுத்தில் குத்தினார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனால் தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்று கருதிய சுதாகர், விபத்தில் சூர்யா இறந்ததாக நாடகமாட நினைத்தார்.
விபத்து நடந்ததாக நாடகமாடினார்
அதற்காக சாலையோரத்தில் நின்ற மின் கம்பத்தின் மீது சுதாகர் தனது காரை மோதினார். பின்னர் அவரும், மனைவியும் விபத்தில் காயம் அடைந்ததாக உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்ததார். உடனே சுதாகரின் தம்பி பிரபாகரன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
காரில் இருந்த சுதாகரையும், சூர்யாவையும் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலம்
சூர்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அரசு டாக்டர்கள் சூர்யாவின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது கழுத்தில் கத்திக்குத்து காயம் ஆழமாக இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து டாக்டர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித்தனர்.
இதற்கிடையே சூர்யா இறந்ததை அறிந்ததும், சுதாகர் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறாமல் தப்பி ஓடி விட்டார். மேலும் கொலை நடந்த காரில் கிடந்த ரத்தக் கறை படிந்த கத்தியை போலீசார் கைப்பற்றி தடய அறிவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் வலைவீச்சு
எனவே சுதாகர் தனது மனைவியை கொலை செய்து விட்டு, விபத்து நடந்ததாக நாடகமாடியது அம்பலமானது. தலைமறைவான சுதாகர் மற்றும் அவருடைய குடும்பத்தினரை சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜகோபால் தலைமையில் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செல்போனில் சுதாகர் பல பெண்களுடன் பேசுவதை தட்டிக் கேட்டதால் சூர்யா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வரதட்சணை கொடுமை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுதாகரின் தம்பி பிரபாகரன் உடன்குடி நகர தி.மு.க. செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான 35 நாளில் கணவனே மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger