News Update :
Powered by Blogger.

மு.க.அழகிரி கோட்டையில் ஜெயிக்க போவது யாரு ?

Penulis : karthik on Saturday 15 October 2011 | 05:15

Saturday 15 October 2011

 
 
மு.க.அழகிரியின் கோட்டையான மதுரையில் திமுக வேட்பாளராக பாக்கியநாதனும், அதிமுக வேட்பாளராக மாஜி எம்பியான ராஜன் செல்லப்பாவும், விஜயகாந்த் கட்சியான தேமுதிக சார்பாக கவியரசும், காங்கிரஸ் கட்சி சார்பாக சிலுவையும், மதிமுக சார்பாக பாஸ்கர சேதுபதி மற்றும் சுயேட்சை உள்பட 28 வேட்பாளர்கள் மதுரை மாநகராட்சி மேயர் தேர்தல் களத்தில் உள்ளனர்.
 
மு.க.அழகிரியின் விருப்பப்படி பாக்கியநாதனும், மு.க.ஸ்டாலின் ஆதரவாளர் கே.ராமச்சந்திரனம், கலைஞர் சார்பாக பொன்.முத்துராமலிகமும் சீட்டு கேட்க, சில நாட்கள் இழுபறிக்கு பின்னர் மு.க.அழகிரியின் ஆதரவாளர் பாக்கியநாதன் களம் இறக்கப்பட்டார். களம் இறக்கிய கையோடு மு.க.அழகிரி, இன்று வரை பாக்கியநாதன் பிரச்சாரத்திற்கு வரவில்லை. அழகிரி வராதது பாக்கியநாதன், பாக்கியமில்லாத வேட்பாளராக களத்தில் உள்ளார்.
 
 
அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா, ஆரம்பம் முதலே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் என்பதால், தொகுதிக்குள் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோரை அழைத்துக்கொண்டு சந்து பொந்துகளில் வாக்கு சேகரித்தார். ஆரம்பம் முதலே முன்னணியில் இருப்பதால், பிரச்சாரத்திலும் முன்னணியில் இருக்கிறார் ராஜன் செல்லப்பா. செல்லும் வேட்பாளராக இருக்கிறார் செல்லப்பா.
 
 
 
 
 
 
 
ஜெயலலிதாவிடம் விஜயகாந்த் கேட்ட முதல் மாநகராட்சி மதுரை என்பதாலோ என்னவோ, ஜெயலலிதா அவரை கழட்டி விட்டார். ஜெயலலிதா கழட்டி விட்ட நிலையில், விஜயகாந்த் தான் பிறந்து வளர்ந்த ஊர் என்பதால், தன்னுடைய கட்சியில் ஆரம்ப கால மன்ற நிர்வாகியான கவியரசை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.
 
 
விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மதுரைக்கு வந்து பிரச்சாரம் செய்தனர். மதுரையில் தேமுதிக வெற்றி பெற்றால் 2016ல் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக நான் ஆவேன் என்று விஜயகாந்த் சந்து பொந்தெல்லாம் வாக்கு கேட்டு சென்னை திரும்பியபோது, ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை இரண்டாம் இடம் தேமுதிகவுக்கு கிடைத்தே தீர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார் விஜயகாந்த். இதனால் இரண்டாம் இடத்துக்கு தவியா தவித்து வருகிறார் கவியரசு.
 
 
காங்கிரஸ் கட்சியில் களம் இறங்கியுள்ளார் சிட்டிங் கவுன்சிலர் சிலுவை. வார்டுக்கே நின்றால் தோற்கும் நிலையில் இருக்கும் சிலுவையை, நூறு வார்டு கொண்ட மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் களம் இறக்கியிருப்பது காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு கவுரவத்தை சேர்ப்பாரா என்று அக்கட்சியினர் எதிர்பாக்கின்றனர். பல வார்டுகளுக்கு வேட்பாளர் கிடைக்காத நிலையில், மாநகராட்சி மேயர் பதவிக்கு வேட்பாளர் கிடைத்தது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கவுரவத்தோடு களம் இறங்கியுள்ளார் சிலுவை.
 
 
கட்சி இருக்கோ, இல்லையோ தேர்தல் களத்தில் இருக்கிறேன் என்று கோவில் மாநகர் முழுவதும் தனது கம்பீர குரலை பாய்ச்சிய வைகோ, மதுரைக்கு தான் வரும்போதெல்லாம் பாதுகாப்பாக அணிவகுக்கும் தொண்டரணி அமைப்பாளர் பாஸ்கர சேதுபதிக்கு பம்பரத்தில் ஓட்டு கேட்டு பம்பரமாக சுற்றி வந்தார் வைகோ.
 
 
இதில் திமுக அதிமுக நேரடியாக மோதினாலும், தேமுதிக வேட்பாளரைப் பற்றிதான் மதுரை மாநகராட்சி தேர்தலில் பட்டி மன்றமே நடக்கிறது.



comments | | Read More...

பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய நால்வருக்கு எதிராக வழக்கு!


உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியமை தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்ட மா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த சந்தேகநபர்கள் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 11 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபசாரத்தை முன்னெடுத்து வந்ததாக கூறப்படும் இடத்தை வலான குற்றத்தடுப்பு பிரிவினர் சுறறிவளைத்து சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர்.

comments | | Read More...

மலையாள நாவலைப் படமாக்கும் பாலா!


வழக்கமாக தன் சொந்தக் கதைகளை மட்டுமே இயக்கும் பாலா இந்த முறை மலையாள நாவல் ஒன்றைப் படமாக்குகிறார்.

பாலாவின் படங்களில் பிரபலமான எழுத்தாளர்கள் பணியாற்றினாலும் அவர்களை வசனம் எழுத மட்டுமே அவர் பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் அவன் இவன் படம் சொல்லிக் கொள்ளுமளவு போகாத காரணத்தால், இந்த முறை அவர் நாவலைப் படமாக்கும் முயற்சியொன்றில் இறங்கியுள்ளார்.

மலையாளத்தில் வெளியான நாவல் ஒன்றை தமிழில் எரியும் தணல் எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளனர். இந்த நாவலைத்தான் சினிமாவாக எடுக்கிறார் பாலா. இரண்டு குழந்தைகளின் பெற்றோர் படும் பாடுகளைச் சொல்லும் கதை இது.

குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்தக் கதையில், கமர்ஷியல் ஹீரோக்கள் நடித்தால் சரிவராது என்பதால், தனது வழக்கமான நாயகர்களை விட்டுவிட்டு அதர்வாவை நாயகனாக்கியிருக்கிறார் பாலா.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில் படம் குறித்து முழுமையான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

comments | | Read More...

காதல் திடீர் முறிவு: நயன்தாரா, பிரபுதேவா திருமணம் நின்றது

 
 
நயன்தாரா பிரபுதேவா இடையே 2009 வில்லு படப்பிடிப்பில் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதனை முதல் மனைவி ரம்லத் எதிர்த்தார். இதனால் அவரை விவாகரத்து செய்துவிட்டு நயன்தாராவை திருமணம் செய்ய துணிந்தார்.
 
ரம்லத்- பிரபுதேவாவுக்கு இரு மகன்கள் உள்ளனர். மனைவி மகன்களுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துக்களை எழுதி கொடுத்தார். பிறகு ரம்லத்தை விவாகரத்து செய்து பிரிந்தார். தற்போது நயன்தாராவுடன் சேர்ந்து வாழ்கிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் அறிவித்தார். திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்தன.
 
மும்பையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டனர். இந்த நிலையில் அவர்கள் காதலில் திடீர் முறிவு ஏற்பட்டுள்ளதாவும், இதனால் திருமணம் நின்று போனதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபுதேவாவுக்கு மகன்கள் மேல் அதிக பிரியம். வெளியூர் சூட்டிங்கில் இருக்கும் போதெல்லாம் தினமும் டெலிபோனில் குழந்தைகளுடன் பேசுவார். நயன்தாராவுடன் காதல் வயப்பட்டு ரம்லத்தை பிரிந்து ஓட்டலில் தங்கிய போதும் குழந்தைகளை வரவழைத்து ஷாப்பிங் போவார்.
 
அவர்களுடனேயே அதிகநேரம் செலவிட்டார். விவாகரத்துக்கு பிறகும் அந்த பழக்கம் தொடர்கிறது. சென்னை வரும்போதெல்லாம் குழந்தைகளை சந்திக்கிறார். இது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. குழந்தைகளை சந்திக்க தடை போட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் நயன்தாராவுக்கு தெரியாமல் குழந்தைகளை சந்தித்துள்ளார். சமீபத்தில் கேரளா சென்ற அவர் நயன்தாராவிடம் வெளியூர் சூட்டிங்குக்கு போவதாக பொய் சொல்லிவிட்டு சென்னை வந்தாராம். இங்கு குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளார். இந்த விஷயம் நயன்தாராவுக்கு தெரிய ஆத்திரமானார்.
 
பிரபுதேவாவுக்காக சினிமாவுக்கு முழுக்கு போட்டு திருமணத்துக்கு காத்திருக்கும் தனக்கு பிரபு தேவா துரோகம் செய்துவிட்டதாக ஆத்திரப்பட்டார். குழந்தைகளை விட்டு தன்னால் பிரிய முடியாது என்று பிரபுதேவாவும் உறுதியாக கூறிவிட்டாராம். இதையடுத்து காதல் முறிந்து திருமணம் நின்றுபோனது. நயன்தாரா கோபத்தில் இருக்கிறார். புதுப்படங்களில் நடிக்க கதை கேட்க தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



comments | | Read More...

சபாஷ்... இப்படித்தான் உதைக்கணும்!-பூஷணை தாக்கியவர்களுக்கு தாக்கரே பாராட்டு

 
 
காஷ்மீர் பிரிந்து போகட்டும் என்று கூறிய பிரசாந்த் பூஷணுக்கு அடி உதை தராமல், மலர் மாலையா போடுவார்கள்? என்று கேட்டுள்ள பால் தாக்கரே, அவரை தாக்கியவர்களைப் பாராட்டியுள்ளார்.
 
அன்னா ஹசாரே குழுவில் முக்கிய உறுப்பினராகவும், உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் ஆகவும் உள்ள பிரசாந்த் பூஷண், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அந்த மாநில மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அதில் பிரிந்து போக விரும்பினால் போகட்டும் என்றும் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த 3 பேர், உச்சநீதிமன்றத்துக்கு உள்ளேயே பிரசாந்த் பூஷணைத் தாக்கினர்.
 
இந்த தாக்குதலைப் பலரும் கண்டித்த நிலையில், பிரசாந்த் பூஷண் தாக்கப்பட்டதற்கு சிவசேனா தலைவர் பால் தாக்கரே பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி அவர் தனது கட்சி பத்திரிகையான சாம்னா'வில் எழுதியுள்ளதாவது:
 
சபாஷ்... நாட்டை துண்டாட நினைத்து பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு இப்படித்தான் பாடம் கற்பிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் கூறி வருவது போல் காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறினால் பிரசாந்த் பூஷணுக்கு மலர் மாலையா போடுவார்கள்?
 
காஷ்மீர் இந்தியாவின் கிரீடம். அதை வெட்டி அப்புறப்படுத்துவது போல் பிரசாந்த் பூஷன் எப்படி பேசலாம்? அங்கு ராணும் இருப்பதால்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் தடுக்கப்பட்டு வருகிறது.
 
பிரசாந்த் பூஷண் மீதான தாக்குதலை கண்டித்த அன்னா ஹசாரே அவர் பேசிய கருத்துக்காக அவரை கண்டிக்காதது ஏன்? அன்னாவிடம் ஒரு தீப்பந்தம் இருப்பது உண்மைதான். ஆனால் நாட்டையே எரிக்கப் பார்ப்பதை சும்மா வேடிக்கை பார்க்க முடியாது," என்று கூறியுள்ளார் தாக்கரே.



comments | | Read More...

துப்பாக்கி-மது பாட்டில் காரில் கடத்திய மார்க்சிஸ்டு கம்யூ. வேட்பாளர் கைது

 
திருவாரூர் மாவட்டம் பேரளம் பேரூராட்சி 3-வது வார்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஸ்டாலின். இவர் நேற்று பேரளம் பகுதியில் பிரசாரம் செய்து விட்டு மதியம் உணவருந்துவதற்காக அங்கு உள்ள கடை வீதிக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பேரளம் கடை வீதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
 
வேட்பாளர் ஸ்டாலின் காரையும் சோதனை போட்டனர். காரில் உரிமம் பெறாத துப்பாக்கி, காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், 3 செல்போன்கள் மற்றும் 2 அடி உயரம் உள்ள 3 இரும்பு கம்பிகள் இருந்தன.இதுகுறித்து போலீசார் ஸ்டாலினிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஸ்டாலின் முன்னுக்கு பின் முரணான பதில் கூறினார்.
 
உடனே போலீசார் ஸ்டாலின், அவரது நண்பர் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட துணை தலைவர் ஜோதிபாசு, டிரைவர் செந்தில் ஆகியோரை கைது செய்தனர். கார், மது பாட்டில்கள், துப்பாக்கி ஆகியவையும் கைப்பற்றப்பட்டது. கைதான 3 பேரும் திருவாரூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவருடன் காரில் வந்த விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் ராஜீவ் காந்தி, சதீஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



comments | | Read More...

வீட்டுக்கு வெளியே 2 மணி நேரம்... கதறிய பிரபுதேவா, கண்டுகொள்ளாத நயன்தாரா?

 
 
பிரபுதேவா-நயன்தாரா காதல் தொடருமா? இடறுமா? இதுதான் இப்போதைய அதி முக்கியமான கேள்வியாகியிருக்கிறது தமிழ், தெலுங்கு, கேரளா ஆகிய மூன்று பிரதேசங்களிலும்! முணுக்கென்று மூச்சு விட்டால் கூட மோப்பம் பிடித்துவிடும் மீடியா, இந்த விவகாரத்தை லேசாக கீறியிருப்பதால்தான் இத்தனை பரபரப்பும்.
 
நிஜத்தில் நடந்தது என்ன?
 
கடந்த சில தினங்களுக்கு முன் கேரளாவிலிருக்கும் நயன்தாரா வீட்டுக்கு போனாராம் பிரபுதேவா. அவரை உள்ளேயே விடாமல் வாசலிலேயே சுமார் இரண்டு மணி நேரம் காக்க வைத்துவிட்டாராம் நயன்தாரா. உட்புறம் பூட்டப்பட்ட கதவுக்கு முன் நின்று கொண்டு நயன்தாராவின் செல்போனை பலமுறை தொடர்பு கொண்டும் அதை எடுக்கவே இல்லையாம் அவர். இந்த சம்பவம் வெளியே கசிந்ததால்தான் இவர்களின் திருமணம் நடக்குமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள் மலையாள பத்திரிகையாளர்கள்.
 
ஏன் இப்படி செய்தார் நயன்தாரா ?
 
வெடி படம் முடிந்து ரிலீஸ் ஆனதும் திருமண தேதியை அறிவிக்கிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருந்தாராம் மாஸ்டர். அதற்காகவே காத்திருந்த நயன், மறுநாளில் இருந்தே இவரை நச்சரிக்க ஆரம்பித்துவிட்டார். இதற்கிடையில் தனது குழந்தைகள் மிகவும் அன்பாக இருக்கும் பிரபுதேவா, இந்த காலாண்டு விடுமுறையில் அவர்களை அழைத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு பறந்துவிட்டாராம். அதுவும் நயன்தாராவுக்கு தெரியாமல்.
 
போனில் தொடர்பு கொண்ட நயன்தாரா, எங்கேயிருக்கீங்க என்று கேட்க, நான் மும்பையிலிருக்கிறேன் என்று சமாளித்தாராம் மாஸ்டர். நீங்க அங்கேயே இருங்க. நான் வர்றேன் என்று உடனடியாக மும்பைக்கு கிளம்பியிருக்கிறார் நயன். வந்தால் தான் வெளிநாட்டில் இருக்கிற விஷயம் தெரிந்துவிடுமே என்று பதறிய மாஸ்டர் ஏதேதோ சொல்லி சமாளிக்க, விடாமல் நச்சரித்திருக்கிறார் நயன்தாரா.
 
வேறு வழியில்லாத பிரபுதேவா குழந்தைகளை அழைத்துக் கொண்டு போன வேகத்தில் திரும்பியிருக்கிறார். அவர்களை சென்னையில் விட்டுவிட்டு மீண்டும் கேரளாவுக்கு ஓடிய போதுதான் இப்படி ஒரு அவமானம்.
 
தன்னிடம் பொய் சொல்லும் ஒருவர் எப்படி தன்னை வைத்து நிம்மதியாக குடும்பம் நடத்துவார் என்ற அதிருப்தி வந்திருக்கிறதாம் நயன்தாராவுக்கு. இதையடுத்து இருவரது காதல் தேசத்திலும் புயலும் சூறாவளியும் அடிக்க தொடங்கியிருக்கிறதாம்.
 
அம்மி மிதித்து அருந்ததியை பார்ப்பார்கள் என்று நினைத்தால், அம்மிக்கல்லை துக்கி காதல் தேவதையின் தலையில் போடுவார்கள் போலிருக்கிறது.
 



comments | | Read More...

குமரிக்கு வந்த புனித ஜான் போஸ்கோவின் வலது கை!

 
 
உலகம் முழுவதும் திருப்பயணம் மேற்கொண்டு வரும் புனித ஜான் போஸ்கோவின் வலது கரம் அடங்கிய பேழை கேரளா வழியாக கன்னியாகுமரி வந்தது.
 
இத்தாலியை சேர்ந்தவர் புனித ஜான்போஸ்கோ. கிறிஸ்தவ பாதிரியாரான இவர், சலேசியஸ் சபையை தோற்றுவித்து நற்பணிகள் செய்தவர். 1883ம் ஆண்டு தனது 72வது வயதில் இறந்த அவரது உடலில் இருந்து வலதுகரம் மட்டும் தனியே எடுக்கப்பட்டு பேழையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் ஜான்போஸ்கோவின் 200வது பிறந்தநாளையும், சலேசியஸ் சபை தோற்றுவிக்கப்பட்டு, 150வது ஆண்டையும் நினைவு கூறும் வகையில் ஜான்போஸ்கோவின் வலதுகரம் அடங்கிய பேழை உலகம் முழுவதும் திருப்பயணமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
 
கடந்த 2009 ஜனவரி மாதம் துவங்கிய திருப்பயணம் 130 நாடுகள் வழியாக கேரளாவுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டத்தை அடைந்தது. தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட அவரது உருவத்துடன் அவரது வலது கை பொருத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
 
பேழை பயணத்திற்கு களியாக்கவிளை அடுத்த படந்தாலுமூட்டில் தக்கலை உள்ளிட்ட மறை மாவட்டங்கள் மற்றும் பங்குகளை சேர்ந்தவர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருச்சியை நோக்கி கொண்டு செல்லப்பட்டது.



comments | | Read More...

சொத்துக்களுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது


பலரும் சொத்துக்களை வாங்கும் போது, அதை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து, அதற்கான பத்திரத்தை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். தங்களது சொத்து, பத்திரமாக உள்ளதாகக் கருதுகின்றனர்.ஆனால், சொத்து வாங்குவதில் முதல் படி தான், பதிவு செய்தல். அந்தச் சொத்தை வருவாய்த் துறையில் பதிவு செய்து, பட்டா பெற்றால் மட்டுமே, அது முழுமையாகச் சொந்தமாகும்.பட்டா மாறுதல் தொடர்பாக, புதிய வழிமுறைகளை வகுத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி,

* கிராம நிர்வாக அலுவலர், ஒவ்வொரு திங்கள் கிழமையும், தனது கிராமத்தில் மனுக்களைப் பெற்று, ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.

* மனுதாரர், தனது மனுவுடன், ஆவணங்களின் ஜெராக்ஸ் பிரதியை அளித்தால் போதும். எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. மூல ஆவணங்களைக் கொடுக்க வேண்டியதில்லை.

* கிராம நிர்வாக அலுவலர், நிர்வாகக் காரணங்களுக்காக, வேறு கிராமத்துக்கும் கூடுதல் பொறுப்பு வகித்தால், செவ்வாய்தோறும், பட்டா மாற்றத்துக்கான மனுக்களைப் பெற வேண்டும்.

* விண்ணப்பித்த தேதியில் இருந்து, இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று, தாசில்தார் அலுவலகத்துக்கு வந்து, தனது பட்டா மாறுதல் தொடர்பான உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, மனுதாரரிடம் கிராம நிர்வாக அலுவலர் தெரிவிக்க வேண்டும்.

* இந்த மனுக்களின் மீது, தனது அறிக்கையுடன், முதல் வெள்ளிக்கிழமை, தாசில்தார் அலுவலகத்துக்கு வி.ஏ.ஓ., சென்று, சம்பந்தப்பட்ட மண்டல துணை தாசில்தாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்புகைச் சீட்டின் மறுபாதியில், துணை தாசில்தார் கையெழுத்திட வேண்டும். அன்றைய தினமே, அலுவலகக் கணினியில், மனுவின் விவரத்தைத் துணை தாசில்தார் பதிவு செய்ய வேண்டும்.

* ஆவணங்களை துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் பரிசீலித்து, 2வது வெள்ளிக்கிழமை மனுதாரர் வரும்போது, பட்டா மாற்றம் மற்றும் சிட்டா நகல்களை வழங்க வேண்டும். இவ்வாறு, 15 நாட்களில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும்.

* உட்பிரிவுக்கு உட்பட்ட பட்டா மாறுதல் என்றால், விண்ணப்பித்த தேதியில் இருந்து, நான்காவது வெள்ளிக்கிழமை பட்டா உத்தரவைப் பெற வேண்டும்.

இதைப் பயன்படுத்தி, சொத்து வாங்கியவர்கள் அதற்கான பத்திரங்களின் ஜெராக்ஸ் பிரதிகளுடன், கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, விரைவில் பட்டா பெற்றுக் கொள்வதே சிறந்தது.

தற்போது பின்பற்றப்படும் நடைமுறையால் ஆபத்து: ஒருவர் அதிகாரப் பத்திரம் மூலம், ஒரு சொத்தை பலருக்கும் விற்கிறார். அவ்வாறு அந்தச் சொத்து பெறும் நபர்கள், பதிவு அலுவலகத்துக்குச் சென்றால், அதே சொத்தைப் பலருக்கும் பதிவு செய்து தர வாய்ப்புள்ளது.இதனால், சொத்து உண்மையிலேயே யாருக்குச் சொந்தம் என்ற குழப்பம் வரும். பதிவு செய்யும் நபர், அதை பட்டாவாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு, நம் மக்களிடையே இல்லை.

மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம், நூறு பிளாட் போட்டு, நூறு பேருக்கு விற்கலாம். அவற்றைப் பெறுவோர், அதை பத்திரப்பதிவு செய்து வைத்துக் கொள்வர். ஆனால், அதற்காக வருவாய்த் துறையில் விண்ணப்பித்து, பட்டா பெறுவதில்லை. இவ்வாறு விட்டு விடுவதால், அந்த நூறு பிளாட்களில் சிலவற்றை, பூங்காவுக்கும், சமுதாயக் கூடங்களுக்கும் வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்து விடலாம். நூறு பிளாட்களில், ஏதாவது 20 பிளாட்கள் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இருக்கும்.

ஆனால், அது தெரியாமல், பத்திரம் உள்ளது என்ற நம்பிக்கையில், சொத்து வாங்கியவர் இருப்பார். ஒரு கட்டத்தில், அங்கு வீடு கட்டச் செல்லும் போது தான், தனது பிளாட், பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டது எனத் தெரியவரும்.எனவே, பத்திரப்பதிவு முடிந்ததும், அதை வைத்து, வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்து, பட்டா மாறுதல் பெற்றுக் கொண்டால், இதுபோன்ற சிக்கலில் சிக்க வாய்ப்பில்லை.

(dm)


Filed under: Hot News Tagged: சமூக பிரச்சனைகள், தமிழ்நாடு செய்திகள்
comments | | Read More...

உள்ளாட்சித் தேர்தலால் பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்கள் திணறல்

உள்ளாட்சி தேர்தல் பணியால் ஊழியர் பற்றாக்குறை, நீல் மெட்டல் பனால்காவின் மந்தமான பணி உள்ளிட்ட காரணங்களால், நகரின் பல பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்படாமல், மலைபோல் தேங்கியுள்ளன. இதனால், தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.சென்னை மாநகராட்சியில் உள்ள 10 மண் டலங்களில், மயிலாப்பூர், கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் குப்பையை அகற்றும் பணி நீல்மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஏழு மண்டலங்களில், துப்புரவு பணியாளர்களைக் கொண்டு மாநகராட்சி குப்பையை அப்புறப்படுத்தி வருகிறது.கடந்த சிலநாட்களாக, மாநகர பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி மந்த கதியில் உள்ளது. இதனால்,தெருக்களில் எங்கு பார்த்தாலும், குப்பை குவிந்து காணப்படுகிறது. நீல் மெட்டல் பனால்காவின் ஒப்பந்த காலம் டிசம்பருடன் முடிவதால், குப்பையை அகற்றும் பணியை, அந்நிறுவனம் முறையாக செய்வதில்லை.குப்பை தேங்கியிருப்பது குறித்து, அந்நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் பலனில்லை. இது மட்டுமில்லாமல், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பையை அகற்றும் ஏழு மண்டலங்களிலும், குப்பை தேங்கிக் கிடக்கிறது.தேர்தல் பணியால் பாதிப்பு: ""உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் பணிக்காக மாநகராட்சியின் அனைத்து பணியாளர்களும் சென்று விடுவதால், குப்பையை அகற்ற போதிய ஆட்கள் இல்லாமல் உள்ளனர்.இது தவிர, மாநகராட்சி லாரி உள்ளிட்ட குப்பை அள்ள பயன்படுத்தும் வாகனங்கள், தேர்தல் பொருள்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுவதால், குப்பை அகற்றும் பணியை முழு வீச்சில் செய்ய முடியவில்லை," என, துப்புரவு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.""ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை காலங்களில், மாநகரப் பகுதியில் குப்பை அதிகளவு ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் உருவாகும் குப்பைகளுடன், பூஜை காலங்களில் ஏற்பட்ட குப்பையும் சேர்ந்து, குப்பை அதிகளவில் சேர்ந்துள்ளது" என, மயிலாப்பூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.நகரெங்கும் துர்நாற்றம்: ""அண்ணா நகர், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில், பல நாட்களாக குப்பை குவிந்துள்ளது. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் தொய்வடைந்துள்ளது," என, குடியிருப்போர் நலசங்கங்கத்தினர் புகார் கூறுகின்றனர்.காலை மற்றும் மாலை நேரங்களில் வழக்கமாக நடக்கும் துப்புரவு பணிகள் கடந்த இரு வாரமாக நடப்பதில்லை. குப்பை வண்டிகளில் குப்பைகள் நிறைந்து, அதைச் சுற்றிலும் சிதறிக் கிடக்கிறது. அவ்வப்போது மழை பெய்து வருவதால், மழை நீரில் குப்பை கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.குப்பை தேங்கியுள்ளது குறித்து மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:குப்பை அகற்றும் பணி மாநகராட்சியில் நாள்தோறும் நடந்து வருகிறது. நாளொன் றுக்கு 3,400 டன் குப்பை அகற்றப்படுகிறது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நேரங்களில் மாநகரில் குப்பை அதிகளவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாளொன்று அள்ளப்படும் குப்பையுடன் கூடுதலாக 1,000 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்குவதால், அப்போது ஏற்படும் கூடுதல் குப்பையை அகற்ற இப்போதே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு நிறுவனங்களில் ஏற்படும் குப்பையை, அங்கிருந்தே சேகரித்து குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளோம்.பண்டிகையின் போது, குப்பைகளை தெருக்களில் வீசுவது, குப்பை கொட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர, மற்ற இடங்களில் கொட்டுவது ஆகியவற்றை தடை செய்துள்ளோம். மீறுபவர்களிடம் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு கமிஷனர் கூறினார்.

(dm)


Filed under: Hot News Tagged: இந்திய அரசியல், உள்ளாட்சித் தேர்தல் 2011
comments | | Read More...

முதல் ஜனாதிபதி அணிந்த கை கடிகாரம் அடுத்த மாதம் ஜெனிவாவில் ஏலம்

 

ஜெனிவா: இந்தியாவின் முதல் ஜனாதிபதி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அணிந்திருந்த கை கடிகாரம் ஒன்றை, பிரபல ஏல கம்பெனி நிறுவனமான சோத்பீஸ், அடுத்த மாதம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஏலத்தில் விடுகிறது. இந்தியாவின் முதல் குடியரசு தின விழாவையொட்டி, 1950ம் ஆண்டு ஜனவரி 26 அன்று, ராஜேந்திர பிரசாத் அணிந்திருந்த இந்த ரோலக்ஸ் வாட்ச்சை, யாரோ ஒருவர் அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியுடன் இந்த கை கடிகாரத்தின் மீது, இந்தியாவின் வரைபடமும் உள்ளது. 1574ம் ஆண்டிலிருந்து இதுவரை, விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்துள்ள அபூர்வமான கை கடிகாரங்களை, இந்த ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் உபயோகப்படுத்திய கை கடிகாரம், 2 லட்சத்து 22 ஆயிரம் டாலரிலிருந்து 4 லட்சத்து 44 ஆயிரம் டாலர் வரை, ஏலத்தில் விற்பனையாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டில், ஜோத்பூர் மாநிலத்தை ஆண்ட இரண்டாம் மன்னர் ஜஸ்வந்த் சிங்கின் உருவப்படத்துடன் உள்ள, விலை உயர்ந்த மற்றொரு கை கடிகாரத்தையும், இந்த ஏலத்தின்போது ஏலம் விடப்பட உள்ளதாக, சோத்பீஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

comments | | Read More...

அறிவாலய நிலப் பத்திரத்தில் எம்.ஜி.ஆர்., பெயர்: கருணாநிதி அறிக்கை


""தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயம் அமைந்துள்ள இடம், முறைப்படி வாங்கப்பட்டது. அந்த பத்திரத்தில், எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரும் இடம் பெற்றுள்ளது," என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: அண்ணா அறிவாலய நில விவகாரத்தில், ஜெயலலிதா எனக்கு சவால் விடுத்துள்ளார். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அறிவாலய இடம் 25 கிரவுண்ட் தானா, அதற்கு மேல் இருந்தால், அதை அரசுக்கு ஒப்படைக்கத் தயாரா என, கூறியிருக்கிறார். அந்த பத்திரத்தில் காணி கணக்கில் எழுதப்பட்டுள்ளது. ஒரு காணி என்பது, ஒரு ஏக்கர் 33 சென்ட் என்பதை நான் கணக்கிட்டு, ஏறத்தாழ 25 கிரவுண்ட் என்று கூறினேன். முழு இடமும், 25 கிரவுண்ட் என நான் கூறவில்லை. சிறுதாவூரில், தலித் இடத்தை அபகரித்தவர் ஜெயலலிதா என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் குற்றஞ்சாட்டப்பட்டவர்; கொடநாடு எஸ்டேட்டில் மாளிகை கட்டி, மக்களுக்காக பாதை விட மறுத்து, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பின்னும், செயல்படுத்தாமல் இருப்பவர் என்பதை மறக்க முடியுமா?

அண்ணா அறிவாலய நிலம் எனக்காகவோ, குடும்பத்திற்காகவோ வாங்கப்பட்டதல்ல; தி.மு.க., அறக்கட்டளைக்காக வாங்கப்பட்டது. தி.மு.க., அறக்கட்டளையில் எம்.ஜி.ஆரும் ஒருவர். நிலத்தை மிரட்டி வாங்கியதை அவர் எதிர்த்ததால், 1972ல் அவரை கட்சியிலிருந்து நீக்கினர் என, ஜெயலலிதா கூறியுள்ளார். அண்ணா அறிவாலய நிலம் வாங்கிய அறக்கட்டளை பத்திரத்தில், எனது பெயர், நெடுஞ்செழியன் மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த நிலத்தை மிரட்டியோ, வலியுறுத்தியோ வாங்கவில்லை என, சர்க்காரியா கமிஷன் தீர்ப்பிலேயே கூறப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் ஜெயலலிதாவிடம் கூறியதை தவறாக புரிந்து கொண்டு, அண்ணா அறிவாலயம் பற்றி குற்றஞ்சாட்டி, திருச்சியில் பேசிவிட்டு, அதற்கு ஆதாரப்பூர்வமாக நான் பத்திரத்தையே காட்டி, பதில் கூறியதும், மழுப்பலாக எதை எதையோ பதில் சொல்லி, ஜெயலலிதா தப்பிக்க பார்க்கிறார் என்பதைத் தான், அவருடைய பேச்சு சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

(dm)


Filed under: Hot News
comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger