News Update :
Home » » சசிகலா குழுவினரின் மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி

சசிகலா குழுவினரின் மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி

Penulis : karthik on Friday 30 December 2011 | 20:48

சசிகலா குழுவினரின் மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், "நாங்கள் மீண்டும் உள்ளே வந்து விடுவோம். அப்போது உங்களை பழி வாங்கி விடுவோம் என, பேசுவோருக்கு மன்னிப்பே கிடையாது; அதுமட்டுமல்ல, அவர்களின் பேச்சைக் கேட்டு செயல்படும் கட்சியினருக்கும் மன்னிப்பு கிடையாது' என கடுமையாக எச்சரிக்கை விடுத்த, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கோடரி கதையைக் கூறி, தொண்டர்களுக்கு விளக்கம் அளித்தார்.

சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு, சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடந்த முதல் கூட்டம் மட்டுமல்ல; போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலா குழுவினர் வெளியேற்றப்பட்ட பிறகு நடந்த கூட்டமும் கூட. அதனால், செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் கலந்து கொண்ட ஒவ்வொரு உறுப்பினர்கள் மத்தியிலும், "ஜெயலலிதா என்ன பேசுவார்' என்றபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிறைவேற்றும் வகையிலும், சசிகலா குழுவினரின் மறைமுக மிரட்டலுக்கு, பகிரங்க முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சு அமைந்தது.


இது தொடர்பாக, பொதுக்குழுவின் இறுதியில் அவர் பேசியதாவது: ஒரு முறை, மரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ஆண்டவனிடம் மனு கொடுத்தனவாம். அதில், "இறைவா! எங்களை இரக்கமின்றி வெட்டிச் சாய்க்கும் கோடரிகளை இனி நீ தயாரிக்க அனுமதிக்காதே' என்றனவாம். உடனே ஆண்டவன் சொன்னாராம். "கோடரி தயாரிப்பதை நிறுத்தச் சொல்வதற்கு முன், நீங்கள், அந்தக் கோடரிகளுக்கு கைப்பிடி ஆவதை நிறுத்துங்கள். உங்களிடமிருந்து தானே கோடரிக்கு கைப்பிடிகள் தயாரிக்கப்படுகின்றன' என்றபோது, தலைகுனிந்து நின்றனவாம் மரங்கள். ஆக, தீதும் நன்றும் பிறர் தர வாரா. அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. சிலர் தவறு செய்கின்றனர்; குற்றம் புரிகின்றனர். அதனால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர். அப்படி நீக்கப்படும் போது, ஒரு சிலர், "சரி! இனி நமக்கு அரசியல் வேண்டாம் என, சிலர் முடிவெடுப்பர். இன்னும் சிலர், "வேறு கட்சியில் போய் சேர்ந்து விடலாம்' என முடிவெடுப்பர். அதில் தவறேதுமில்லை. வாழ்க்கை இருக்கிற வரை வாழ்ந்தாக வேண்டும்.


இன்னும் சிலர் இருக்கின்றனர். தவறு செய்து, துரோகம் புரிந்து, கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச்



சார்ந்தவர்களை விடாப்பிடியாக தொடர்பு கொண்டு, "நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம்; மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களை பகைத்துக் கொண்டால், நாளை, நாங்கள் உள்ளே சென்ற பிறகு, உங்களை பழி வாங்கி விடுவோம். ஆகவே, எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்' என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி, தலைமை மீது சந்தேகம் வரும் அளவுக்கு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு, நம்பி, அதன்படி செயல்படும் கட்சியினருக்கும் மன்னிப்பு கிடையாது. இவ்வாறு ஜெயலலிதா பேசினார்
Share this article :

Post a Comment

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger