இந்திய விமான சந்தையில் கிங்பிஷர் விமான நிறுவனம் 2வது இடத்திலிருந்து 5வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது.
நிதித் தட்டுப்பாடு என்று கூறி திடீரென நூற்றுக்கணக்கான விமான சேவைகளை சொல்லாமல் கொள்ளாமல் ரத்து செய்தது விஜய் மல்லையாவின் கிங்பிஷர். அத்தோடு செலவுக் கட்டுப்பாடு என்று கூறி பலவிதமான சலுகைகளையும் ரத்து செய்தது.
இதையடுத்து அந்த நிறுவன விமானங்களின் பயணிப்போர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு அடுத்த நிலையில் இருந்த இந்த நிறுவனம் இப்போது 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இப்போது இந்தியாவில் பயணிகள் அதிகமாக பயணிக்கும் விமான நிறுவனங்களில் முதலிடத்தில் ஜெட் ஏர்வேஸே உள்ளது. இந்த நிறுவனம் 27.1 சதவீத சந்தையை தன் வசம் வைத்துள்ளது.
அடுத்த இடத்தை ராகுல் பாட்டியாவின் இன்டிகோ (19.8%) நிறுவனமும், 3வது இடத்தை ஏர் இந்தியாவும் (17.4%.) பிடித்துள்ளன.
4வது இடத்தை சன் டிவி அதிபர் கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் (15.5) பிடித்துள்ளது. 5வது இடத்தில் தான் கிங்பிஷர் உள்ளது.
home
Home
Post a Comment