சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த திமுகவினரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை தர உதவியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.வைகோவின் இந்த மனிதாபிமானச் செயல் திமுகவினரை நெகிழ வைத்துள்ளது.கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்த திமுக கிளைச்செயலாளர் அர்ஜூனன்(45). இன்று காலை அவர் மணிகண்டன்(30) என்ற திமுக பிரமுகருடன் நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு கடலூர்-சிதம்பரம் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக சென்ற கார் இருவர் மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புதுச்சேரி அரியாங்குப்பத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் பெரியப்பட்டு வழியாக சென்று கொண்டிருந்தார். சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை பார்த்ததும் வைகோ காரை நிறுத்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
உடனடியாக பின்னால் வந்த கட்சி நிர்வாகி காரில் அவர்களை ஏற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அந்த கார் புறப்பட்ட பின்னரே வைகோ தனது காரில் பயணத்தை தொடர்ந்தார்.
அத்தோடு, அரியாங்குப்பம் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வைகோ, தனது செல்போன் மூலம் காயமடைந்த திமுகவினரின் நிலை குறித்து அவர்களைத் தொடர்பு கேட்டார். அவர்கள் வைகோவின் உதவி குறித்து மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
Post a Comment