News Update :
Powered by Blogger.

ராசா, கனிமொழி மீது புதிய வழக்கு……

Penulis : karthik on Thursday, 29 September 2011 | 02:35

Thursday, 29 September 2011

 

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்ததாக மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்பட 17 பேர் மீது புதிய குற்றச்சாட்டை சி.பி.ஐ. திங்கள்கிழமை பதிவு செய்தது.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மோசடி, அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக ஆ. ராசா, கனிமொழி, சரத்குமார் உள்பட 17 பேர் மீது சி.பி.ஐ. ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றப் பதிவுக்கு முன், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதங்களைத் தனித்தனியாக நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர். இது சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றது. இதற்குப் பின்னர் சி.பி.ஐ. தனது விளக்கத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றம் விரைவில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உள்ளது.

இந் நிலையில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராகப் பதவி வகித்த ஆ. ராசா, அவரது தனிச் செயலாளர் சண்டோலியா, மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் பெகுரா ஆகியோர் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருப்பதாகக் கூறி பிரிவு 409, சதித் திட்டம் தீட்டியதாக பிரிவு 120-ன் படி புதிய வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்ததாக கனிமொழி, சரத்குமார், பல்வா உள்ளிட்ட 14 பேரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடும் தண்டனை: ராசா மீது முன்னர் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை மட்டுமே தண்டனை கிடைக்கும். ஆனால், இப்போது சுமத்தப்பட்டிருக்கும் நம்பிக்கைத் துரோகம் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ராசா உள்ளிட்டோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது அபராதத்துடன் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள புதிய குற்றச்சாட்டு மனு மீது குற்றம் சாட்டப்பட்டவர்கள் செப்டம்பர் 30-ல் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளனர். அதன் பின்னர் இது தொடர்பாக வாதம் நடைபெற உள்ளது.

குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாதவரை குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சி.பி.ஐ. எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. குற்றச்சாட்டுகள் பதிவில் காலதாமதம் ஏற்படும் என்று தெரிகிறது. இதனால் கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைப்பதிலும் மேலும் காலதாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

ப. சிதம்பரத்தை சாட்சியாகச் சேர்க்க கோரிக்கை: ஆ. ராசாவின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சுசீல் குமார், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சாட்சியாகச் சேர்க்க வேண்டும் என்று வாதாடினார்.

2ஜி ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்றதாகக் கூறப்படும் ஸ்வான், யூனிடெக் நிறுவனங்கள் தாங்கள் பெற்ற 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில், அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆலோசனை வழங்கினார்.

அவரை நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அப்படியொரு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதா, அதில் அவர் ஆலோசனை கூறினாரா என்பது குறித்து நீதிமன்றம் கேட்டறிய வேண்டும். அவரைச் சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்று வழக்குரைஞர் சுசீல் குமார் கேட்டுக் கொண்டார்.

தூதுவரா?

பாஜகவில் இருந்து காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் திங்கள்கிழமை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்தார். மதியம் வரை நீதிமன்றத்தில் இருந்த அவர், ராசா, கனிமொழி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், இந்த வழக்கு நடைபெறும்போது சிறப்பு நீதிமன்றத்துக்கு வருவது இதுவே முதல்முறையாகும். சிதம்பரத்தின் ஆதரவாளராக திருநாவுக்கரசர் காங்கிரஸில் இணைந்தார். இப்போது சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று ராசா தரப்பு வலியுறுத்தி வருகிறது. இந் நிலையில் சிதம்பரத்தின் ஆதரவாளரான திருநாவுக்கரசர், ஆ. ராசா, கனிமொழியைச் சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

"6 மாதங்களாக ராசா, கனிமொழியை சந்திக்கவில்லை. அவர்களை சந்திப்பதற்காக மட்டுமே நீதிமன்றம் வந்தேன்" என்று செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

கனிமொழி விசாரணை முடிந்தது

2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி, சரத்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு கடந்த 16-ம் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவுக்கு சி.பி.ஐ. திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்தது.

அதில், கனிமொழி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடிந்து விட்டது. குற்றவாளிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் முன்பு ஜாமீன் வழங்கப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதை சி.பி.ஐ. சுட்டிக் காட்டியுள்ளது.

(di)


Filed under: Hot News Tagged: இந்திய அரசியல், இந்தியா, ஊழல், சமூக பிரச்சனைகள்
comments | | Read More...

மோடி அடுத்த பிரதமர் ?

 


குஜ்ராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் உண்ணாவிரதம் ஒரு அரசியல் ஸ்டண்ட் என்று காங்கிரஸ் கூறினாலும், அவர்களுக்கு இவர் எங்கே அடுத்த பிரதமாராக வந்துவிடுவாரோ என்ற பயம் இருக்கிறது.
மோடி இந்தியாவின் பிரதமராக வருவதை நீங்கள் ஏற்கிறீர்களா ? ஓட்டு பெட்டி வழக்கம் போல சைடில்...
comments | | Read More...

மினி முனி - 28-09-2011

 


அன்புள்ள மினி முனிக்கு வணக்கம்,

கடந்த சில மாதங்களாக இட்லிவடைக்கு விநோத வியாதி பிடித்திருக்கிறது, அதனால் அடிக்கடி அப்டேட் செய்ய முடிவதில்லை. அதனால் முனியை சுறுக்கி மினி முனி...எனக்கு பிடித்திருக்கும் வியாதி போல இப்ப காங்கிரஸாரை கடந்த இரண்டு மூன்று தினங்களாக ஒரு வியாதி தாக்கியுள்ளது. அதென்னவென்றால், தற்செயலாக ஏதேனும் கேமராவையோ, அல்லது மைக்கையோ கண்டால் தாமாகவே, எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, இல்லை என்று சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர். தூக்கத்திலும் இதையே ஜெபித்தபடிதான் உள்ளனர். பிரதமர் முதல் காங்கிரஸின் கடைநிலை தொண்டர் வரை இந்நோய் பீடித்துள்ளது. காரணம், சிதம்பர ரகசியம் வெளிப்பட்டதுதான்.

மத்திய உள்துறை அமைச்சகம் பொழுது போகாமல், பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியது. அதாவது, அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் நடவடிக்கை எடுத்திருந்தால், 2G ஊழல் நடைபெறாமல் தடுத்திருக்கலாம் என்பதே அக்கடிதத்தின் சாராம்சம். இக்கடிதத்தை உள்துறை அமைச்சகத்தின் உயர்நிலை அதிகாரி ஒருவர் எழுதியிருந்தாலும், அது அப்போதைய உள்துறை அமைச்சர் ப்ரணாப் முகர்ஜியின் பார்வை/அனுமதிக்குப் பிறகே அனுப்பபட்டுள்ளது. இதில் இன்னொரு விஷயம், ஒரு அமைச்சகத்தின் அதிகாரியொருவர், அத்துறை அமைச்சரின் ஆட்சேபணையையும் மீறி, பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்ப முடியாது என்பது நடைமுறை விஷயம். இது சாதாரண பாமரனுக்குக் கூட எளிதில் விளங்கும். ஆனால் இந்த முழு பூசணிக்காயைத்தான் சோற்றில் மறைக்க காங்கிரஸ், சிபிஐ துணையுடன் படாத பாடு பட்டு வருகிறது. சல்மான் குர்ஷித் என்ற மகான் சட்ட அமைச்சராக இருக்கிறாராம். அவர் "அமைச்சர் பார்த்தார்" என்றால் அதனை அனுமதித்தார் என்று சொல்ல முடியாது என்கிறார். சரியான "காமெடி பீஸ்"

இஞ்சி சாப்பிட்ட .... போல இருந்த ப்ரணாப் முன்பு இது தொடர்பாக பேசவே மறுத்தவர் இப்போது தினம் ஒன்றாகக் கூறி வருகிறார். லேட்டஸ்டாக, ஒரு வல்லுனரின் கருத்தை அறிந்த பிறகே, இக்கடிதம் தொடர்பாக பேச முடியும் என்றிருக்கிறார். சொன்னதோடு நில்லாமல், அன்றிரவே சோனியாவைச் சந்தித்துப் பேசியும் இருக்கிறார். சோனியாதான் அவர் கூறிய வல்லுனர் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. இதில் ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு விஷயத்தைச் செய்யுமுன்பு, அது சரியா தவறா என வல்லுனர் அபிப்ராயத்தை அறிவது முறையா, அல்லது செய்த பிறகு அத்தவறை எப்படி சரி செய்வது என்று வல்லுனர் கருத்தை அறிவது முறையா?

ப்ரணாப் தவிர, தற்போதைய உள்துறையமைச்சர் சிதம்பரமும் சோனியாவை தனியாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார். வேடிக்கை என்னவெனில், இருவரும் ஒருவர் பின் ஒருவராகப் போய் சோனியாவிடம் பேசியுள்ளனர். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையுமில்லை என்று கூறும் காங்கிரஸாரிடம், ஏன் இவ்விருவரும் ஒன்றாக சோனியாவைப் பார்க்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலில்லை. வெளியே வந்த ப்ரணாப் யாரும் கேட்காமல் "சிதம்பரம் நல்லவர், வல்லவர் அவர் பெரிய தூண், நல்லவர்" என்று பிதற்றுகிறார். இப்பொழுது கடைசியாக பிரதமர்தான் முடிவெடுக்க வேண்டும், அதுவரை இதில் எதுவும் சொல்வதற்கில்லை என்று ப்ரணாப் சொல்லி விட்டார், என்னவோ அமைச்சரவை முடிவுகளை பிரதமரே எடுப்பது போல.

இக்கடித விவகாரத்தை மையமாகக் கொண்டு, சிதம்பரத்தை விசாரிக்க வேண்டுமென சுப்ரமணிய சாமி கோர்ட்டில் வாதாடி வருகிறார். ஆனால் வேடிக்கையாக சிபிஐ, சிதம்பரத்தை விசாரிக்கவே முடியாது; எங்களுக்கு யாரை விசாரிக்க வேண்டுமென யாரும் உத்தரவிட முடியாது; சிபிஐ ஒரு தன்னிச்சையான அமைப்பு என்று சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி வருகிறது. அதாவது சிதம்பரத்தை விசாரிப்பது இவ்வழக்கை தாமதப் படுத்துமாம்! முன்பு போஃபர்ஸ் விவகாரத்தில், க்வாட்ரோக்கியை இந்தியா கொண்டு வருவதில் ஏற்பட்ட தாமதத்தைக் காரணம் காட்டி, அவ்வழக்கிற்கு சிபிஐ சமாதி கட்டியது. இப்போது சிதம்பரத்தை விசாரிப்பதால் ஏற்படப்போகும் தாமதத்தை கணக்கில் கொண்டு, இவ்விவகாரத்திற்கு சமாதி கட்ட சிபிஐ எத்தனிக்கிறது. சுப்ரீம் கோர்ட் இவ்விவகாரத்தில் என்ன சொல்லப் போகிறதென்பது இன்று தெரியும்.

இவ்விஷயத்தில் முடிவெடுக்க வேண்டிய பிரதமர், சிதம்பரத்தின் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் (இவர் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது என்று யாராவது சொன்னால் நல்லது) இதனைக் கேட்டு சிதம்பரம் கலக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஏனெனில், பிரதமரிடமிருந்து ஏற்கனவே இவ்வாறு சான்றிதழ் பெற்ற ராசா இன்று என்ன கதியிலிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

நேற்றைய முன்தினம் கூகிளுக்குப் பிறந்த தினமாம். அதில் தேடிக் கண்டுபிடிக்க இயலாத விஷயம் ஒன்று உண்டு என ட்விட்டரில் பேசிக் கொள்கிறார்கள். அது மன்மோகன் சிங்கின் முதுகெலும்பாம்.

முதுகு பற்றி பேசிய பிறகு ... அதை பற்றி பேசவில்லை என்றால் சிலர் கோபித்துக்கொள்ளுவார்கள். நல்லி குப்பு சாமிக்கும் இலக்கிய மேடைக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவர் இலக்கியவதிகளுக்கு பின்னாடி பிடிக்காத மதிரி அதாவது அவர்கள் போட்டுக்கொள்ளுவதற்கு ஏற்றவாறு ஜூன்ஸ் தயாரித்துள்ளார். முதல் கஸ்டமர் பா.ரா தான்!. தற்போது Flying Machine கம்பெனி கொடுத்த விளம்பரத்தால் சோனாவிற்கு ஆதரவு தெரிவித்த மகளீர் அமைப்புக்கள் இந்த விளம்பரத்துக்கு எதிரிப்பு தெரிவித்து போராட போகிறார்களாம். FM ஜூன்ஸ் கம்பெனி பா.ராவை அனுக போவதாக பேசிக்கொள்கிறார்கள்.

சோனியா காந்தியை டி.ஆர்.பாலு ஏன் சந்தித்தார் என்று கலைஞர் விளக்கம் அளித்துள்ளார் "சோனியா காந்தி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தோழமைக் கட்சி என்ற முறையில் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி தந்தி கொடுத்தேன். பின்னர் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோதும் வாழ்த்து தெரிவித்தேன். இப்போது நலம்பெற்று திரும்பியிருக்கிறார்.

எனவே, தமிழன் என்ற முறையில் அந்தப் பண்பாட்டோடு அவர் உடல் நலம் பற்றி விசாரிக்க டி.ஆர்.பாலுவை அனுப்பியிருந்தேன்"

என்ன தான் பெரிய ஆளாக இருந்தாலும், கபடி விளையாட போனால் யார் காலையாவது பிடிக்க வேண்டும். அது தான் வீரம் !

இப்படிக்கு,
மினி இட்லி

comments | | Read More...

Followers

Popular Posts

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger