உள்ளாட்சி தேர்தல் பணியால் ஊழியர் பற்றாக்குறை, நீல் மெட்டல் பனால்காவின் மந்தமான பணி உள்ளிட்ட காரணங்களால், நகரின் பல பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்படாமல், மலைபோல் தேங்கியுள்ளன. இதனால், தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளர்கள், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.சென்னை மாநகராட்சியில் உள்ள 10 மண் டலங்களில், மயிலாப்பூர், கோடம்பாக்கம், அடையாறு மண்டலங்களில் குப்பையை அகற்றும் பணி நீல்மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது. மற்ற ஏழு மண்டலங்களில், துப்புரவு பணியாளர்களைக் கொண்டு மாநகராட்சி குப்பையை அப்புறப்படுத்தி வருகிறது.கடந்த சிலநாட்களாக, மாநகர பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி மந்த கதியில் உள்ளது. இதனால்,தெருக்களில் எங்கு பார்த்தாலும், குப்பை குவிந்து காணப்படுகிறது. நீல் மெட்டல் பனால்காவின் ஒப்பந்த காலம் டிசம்பருடன் முடிவதால், குப்பையை அகற்றும் பணியை, அந்நிறுவனம் முறையாக செய்வதில்லை.குப்பை தேங்கியிருப்பது குறித்து, அந்நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் பலனில்லை. இது மட்டுமில்லாமல், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் குப்பையை அகற்றும் ஏழு மண்டலங்களிலும், குப்பை தேங்கிக் கிடக்கிறது.தேர்தல் பணியால் பாதிப்பு: ""உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் பணிக்காக மாநகராட்சியின் அனைத்து பணியாளர்களும் சென்று விடுவதால், குப்பையை அகற்ற போதிய ஆட்கள் இல்லாமல் உள்ளனர்.இது தவிர, மாநகராட்சி லாரி உள்ளிட்ட குப்பை அள்ள பயன்படுத்தும் வாகனங்கள், தேர்தல் பொருள்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுவதால், குப்பை அகற்றும் பணியை முழு வீச்சில் செய்ய முடியவில்லை," என, துப்புரவு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.""ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை காலங்களில், மாநகரப் பகுதியில் குப்பை அதிகளவு ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் உருவாகும் குப்பைகளுடன், பூஜை காலங்களில் ஏற்பட்ட குப்பையும் சேர்ந்து, குப்பை அதிகளவில் சேர்ந்துள்ளது" என, மயிலாப்பூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.நகரெங்கும் துர்நாற்றம்: ""அண்ணா நகர், கோடம்பாக்கம், ராயப்பேட்டை, வேளச்சேரி, எழும்பூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில், பல நாட்களாக குப்பை குவிந்துள்ளது. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் தொய்வடைந்துள்ளது," என, குடியிருப்போர் நலசங்கங்கத்தினர் புகார் கூறுகின்றனர்.காலை மற்றும் மாலை நேரங்களில் வழக்கமாக நடக்கும் துப்புரவு பணிகள் கடந்த இரு வாரமாக நடப்பதில்லை. குப்பை வண்டிகளில் குப்பைகள் நிறைந்து, அதைச் சுற்றிலும் சிதறிக் கிடக்கிறது. அவ்வப்போது மழை பெய்து வருவதால், மழை நீரில் குப்பை கலந்து துர்நாற்றம் வீசுவதாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.குப்பை தேங்கியுள்ளது குறித்து மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:குப்பை அகற்றும் பணி மாநகராட்சியில் நாள்தோறும் நடந்து வருகிறது. நாளொன் றுக்கு 3,400 டன் குப்பை அகற்றப்படுகிறது. ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நேரங்களில் மாநகரில் குப்பை அதிகளவு ஏற்பட்டுள்ளது. இதனால், நாளொன்று அள்ளப்படும் குப்பையுடன் கூடுதலாக 1,000 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்குவதால், அப்போது ஏற்படும் கூடுதல் குப்பையை அகற்ற இப்போதே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு நிறுவனங்களில் ஏற்படும் குப்பையை, அங்கிருந்தே சேகரித்து குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளோம்.பண்டிகையின் போது, குப்பைகளை தெருக்களில் வீசுவது, குப்பை கொட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர, மற்ற இடங்களில் கொட்டுவது ஆகியவற்றை தடை செய்துள்ளோம். மீறுபவர்களிடம் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு கமிஷனர் கூறினார்.
Post a Comment