நீங்க பெரிய இடத்துப் பிள்ளை, நினைச்சா பெரிய இயக்குநர்கள் படங்களில்
ஈஸியா நடித்து விடலாம். ஏன் இன்னும் புது இயக்குநர்களின் டெஸ்ட்டிலேயே
இருக்கீங்க?
கல்லூரி முடிஞ்சதும் ஒரே விஷயம்தான் சாய்ஸில் இருந்துச்சு. அது சினிமா.
அதுக்கான எல்லா தயாரிப்புகளிலும் இருந்தேன். நினைச்சப்படியே சினிமா
கிடைச்சது. முதல் படத்தை எங்க அப்பா தயாரிச்சார். அமைதியா, ஆர்பாட்டம்
இல்லாம வாழ்ந்த எனக்கு, முதல் படமே ஆக்ரோஷமா அமைஞ்சது. அதுதான் "வம்சம்'.
முதல் நாள் ஷூட்டிங்.
அப்படியே பைக் ஒட்டிக்கிட்டு வர்றீங்கனு இயக்குநர் பாண்டிராஜ் சொன்னதும்,
படபடப்புவந்துடுச்சு. அதுவரைக்கும் நான்பைக் ஓட்டினதே கிடையாது. தைரியமாக
ஓட்டினேன். அப்படியே சறுக்கிட்டு விழுகிறேன். அப்பா கண் கலங்கி
நிற்கிறார் இப்படிதான் என் சினிமாவின் முதல் நாள் தொடங்குச்சு. அதன் பின்
நிறைய விஷயங்கள்.
நிமிஷத்துக்கு நிமிஷம் சினிமாவை நேசிக்க ஆரம்பிச்சேன்.மனசுக்கு பக்கத்துல
வெச்சு அழகுபார்க்க ஆரம்பிச்சுட்டேன். எனக்காக ஒரு படம் பண்ணுங்கன்னு
நான் யார்க்கிட்டேயும் கேட்டதே கிடையாது. அது மாதிரி சமயத்தில்தான்
ரெண்டாவது படம்"உதயன்' வந்துச்சு. படம் சரியா போகலை. ஆனா பிடிச்சு
நடிச்சதுதான். இப்பவும் அதே மாதிரிதான் "மௌனகுரு' கிடைச்சது.எனக்கான
உயரம் என்னன்னு எனக்கு சுத்தமாகத் தெரியாது. அனுபவித்துச் செய்தால் எல்லா
கைகூடும் நினைக்கிறேன்.
மௌன குரு யாரு?
எல்லோருமேதான். அடுத்த நொடியில்என்ன நடக்கும்னு தெரியாத எல்லோரும்
மௌனகுருதான். பிரச்னைகள் வரும்போதுதான் ஒவ்வொருத்தருக்கும் தன் பலம்
தெரியும். "வம்சம்' படத்துக்குப்பின் ஒரு பிரேக் வேணும்னு நினைச்சேன்.
அதை இந்தப் படம் தீர்த்து வைக்கும். பயம், பகட்டு,அடிதடி, கற்பனைன்னு
எதுவும் இல்லாம வாழ்க்கையை நடத்திக்கிட்டு இருக்குற ஒருத்தனுக்கு
எல்லாமும் ஒரு சேரகிடைத்தால் அவன் என்னவாகிறான் என்பதுதான் கதை.
ஒருவிதத்தில் பார்க்கப் போனால் இது என் உண்மையான கேரக்டரும் கூட. நான்
எப்பவும் சாஃப்ட். எந்த சமயத்திலும் இயல்பா ஏதாவது ஒரு விஷயம்
பண்ணிக்கிட்டு இருப்பேன். அதுபோல்தான் இந்தப் படத்திலும் வருவேன். ஆனா
நல்லது கெட்டதுன்னு படம் கலர்ஃபுல்லா இருக்கும்.
நல்லது கெட்டதுன்னா இதிலும்"வம்சம்' படத்தில் சாயல் இருக்குமோ?
இல்லை. அப்படி சொல்லிட முடியாது. வம்சத்தில் காதல் கொஞ்சம் இருக்கும்.
துரோகம் அதை விட அதிகம் இருக்கும். இது அப்படி இருக்காது. சாதாரண ரப்பர்
செருப்பு, சைக்கிள்ன்னு இருக்குற சராசரி கல்லூரி மாணவன். திடீரென புயல்
அடிச்ச மாதிரி ஒரு விஷயம் அவன் வாழ்க்கையைப் புரட்டிப்
போடுது.அதிலிருந்து மீண்டு அவன் எப்படிவந்தான்னு சில முடிச்சுக்களை
போட்டு அவிழ்க்கும் கதை அவ்வளவுதான்.
சினிமாவில் ஒரு ஹீரோவா கால் ஊன்றுவது கஷ்டமாகத்தானே இருக்கு?
கண்டிப்பா. ஹீரோவா வந்து முன் வரிசையில் நிற்கிற எல்லோரையும் பார்த்தா
எனக்கு ஆச்சரியம். எத்தனை நிராகரிப்புகள், விதவிதமா எத்தனை அனுபவங்கள்,
வகை வகையான துன்பங்கள், வெற்றி கொண்டாட்டங்கள்னு எத்தனை எத்தனை பார்த்து
வந்திருப்பாங்க.
சில சமயங்களில் அவங்களை நினைச்சாப் பெருமையாகவும் இருக்கும்.
ஒவ்வொருத்தருமே ஒரு விதத்தில் எனக்கு ரோல் மாடல்தான். எல்லோரையும்
பின்பற்றியே வலம் வரும்னு தோணுது. அடுத்தடுத்த என் பயணங்களுக்கான
எரிபொருளாக நான் நினைப்பது அதுதான். என்னுடைய இத்தனை வருஷ வாழ்க்கையின்
படிப்பினை இது. நானும் இந்த சினிமாவில் வெற்றி பார்த்துட்டேன். ஒரு
தோல்வியும்பார்த்துட்டேன். அதனால் என்கிட்ட சோர்வும், உற்சாகமும்
இருக்கு. பெரிய ஆறுதல் கிடைச்சா நல்லதுதானே.
அண்ணன் உதயநிதியும் ஹன்சிகா மோத்வானியுடன் டூயட் பாடுறார். எப்படி
நினைக்கிறீங்க அவரின் சினிமா என்ட்ரியை?
அண்ணன் எனக்கு முன்னாடியே சினிமாவுக்கு வர வேண்டிய ஆளு. உங்களுக்குத்
தெரியுமா?"வம்சம்' படத்தின் கதையை அவரிடம்தான் பாண்டிராஜ் முதலில்
சொல்லிருக்கார். இது இப்போ எனக்கு வேண்டாம். என் தம்பி நடிக்க
ஆசைப்படுறான். அவன்கிட்ட சொல்லுங்கன்னு பாண்டிராஜுக்கு ஐடியா கொடுத்ததே
அண்ணன்தான்.
அவருக்கு சினிமா பத்தி நிறைய தெரியும். கடந்த ஆண்டுகளில் ஜெயிச்ச
படங்களின் பட்டியலை எடுத்துப் பாருங்க. பாதி படம் அவர் தயாரிப்பில்
வந்தது. அவ்வளவு நேர்த்தியா கதை தேர்வு செய்வார். அப்படிப்பட்டவருக்கு
நான் என்ன டிப்ஸ் கொடுத்து விட முடியும்? எனக்கு இப்ப இருக்குறபக்குவம்
அவருக்கு எப்போவோ வந்துடுச்சு. என்னோட சினிமா என்ட்ரிக்கு உதய் அண்ணனின்
ஆசீர்வாதம் எப்பவும் உண்டு.
சின்ன அண்ணன் துரையும் சினிமாவுல நடிக்க வந்துடுவார்னு பேசிக்கிறாங்க?
துரை என்னை விட 10 மாசம் மூத்தவன். ஆனா என் நண்பன். அவனைப்பத்தி எனக்கு
அவ்வளவு விஷயங்கள்தெரியும். ஸ்கூல் லீவு விட்டா மதுரைக்கு டிரெயின்
புடிச்சுப் போய் பார்த்துடுவேன். அவனுக்கு சினிமா ஆசை இல்லைன்னு
நினைக்கிறேன். ஆனா அவனுக்கு சினிமா பிடிக்கும். எனக்கு ரொம்பவே
பிடிச்சமானவன். ரெண்டு அண்ணன்களும் இருக்க எனக்கென்ன பயம்? சொல்லுங்க.
No comments:
Post a Comment