சபரிமலையில் இன்று மாலையிலேயே ஜோதி தெரிந்ததாக பக்தர்கள் மத்தியில்
பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் தேவசம்போர்டு செய்வதறியாது திகைத்து
நின்றது.
சபரிமலையில் பொதுவாக மகரவிளக்கு விழா ஜன., 14-ம் தேதிதான் நடைபெறும்.
சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் நாளில் மகரவிளக்கு
விழா நடைபெறும். இந்த ஆண்டு நாளை அதிகாலை 12.59 மணிக்கு சூரியன் மகர
ராசியில் கடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் சூரியன் இடம்
பெயர்வதால் 15-ம் தேதி மகரவிளக்கு விழா நடைபெறும் என்று தேவசம்போர்டு
அறிவித்தது. ஆனால் கேரளாவில் ஒரு பிரிவு ஜோஸ்யர்களும், தந்திரி சமாஜாத்தை
சேர்ந்தவர்களும் 14-ம் தேதிதான் மகரவிளக்கு நடத்த வேண்டும் என்று கருத்து
தெரிவித்தனர். ஆனால் இதை தேவசம்போர்டு நிராகரித்து விட்டது.
இந்நிலையில் இன்று மாலை சபரிமலை சன்னிதானத்தில் தீபாராதனை முடிந்ததும்
வழக்கமாக ஜோதி தெரியும் இடத்தில் ஒரு நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க
தொடங்கியது. நாளை நடைபெறும் மகரவிளக்கு விழாவை நேரடி ஓளிபரப்பு
செய்வதற்காக தயாராகிகொண்டிருந்த டிவி கேமராமேன்கள்இதை படம் பிடித்தனர்.
சிறிது நேரத்தில் இது காட்டுத்தீ போல பரவியது. பக்தர்கள் அனைவரும்
பொன்னம்பலமேட்டை நோக்கி கைகூப்பிய படி நின்றனர். அந்த நட்சத்திரம்
மீண்டும் பிரகாசித்த போது பக்தர்கள் சரணகோஷம் எழுப்பினர். பின்னர்
மீண்டும் அது பிரகாசித்தது. இந்த நேரத்தில் மகரவிளக்கு தெரிந்ததாகவும் பல
பக்தர்கள் தெரிவித்தனர். ஆனால் நட்சத்திரத்தை அனைவரும் பார்க்க
முடிந்தது. மகரஜோதி நாளை (ஜனவரி 15) தான் என்று பலமுறை ஒலிபெருக்கியில்
அறிவித்தும் பக்தர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. புல்மேடு விபத்துக்கு
பின்னர் கேரள ஐகோர்ட், அரசிடமும், தேவசம்போர்டிடமும் விளக்கம் கோரியது.
அப்போது அளிக்கப்பட்ட சத்திய வாக்குமூலத்தில் பொன்னம்பலமேட்டில் தெரியும்
நட்சத்திரம் மகரஜோதி என்றும், அது தானாக தெரிகிறது என்றும், அதே
நேரத்தில் மகரவிளக்கு தேவசம்போர்டால் ஏற்றப்படுவது என்றும்
தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்தை சபரிமலையின் மூத்த தந்திரி கண்டரரு
மகேஸ்வரருவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் இன்றே நட்சத்திரம்தெரிந்ததால் மகரவிளக்கு விழாவில் குழப்பம்
ஏற்பட்டுள்ளது. ஆனால் நாளை (ஜனவரி 15) தான் மகரவிளக்கு விழா என்றும்,
நாளை திருவாபரணம்அணிவித்து தீபாராதனை நடக்கும் போது பொன்னம்பலமேட்டில்
நட்சத்திரம் ஜோதியாக காட்சி தரும் என்றும், மகரவிளக்கு நாளைதான் தெரியும்
என்றும் தேவசம்போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகரஜோதி
விஷயத்தில் ஆரம்பம் முதலே குழப்பம் ஏற்பட்டுள்ளதால் தேவசம்போர்டு திணறி
வருகிறது.
No comments:
Post a Comment