Friday, 20 January 2012

இலங்கை கடலில் பாரம்பரிய மீன்பிடி உரிமையை கைவிடுகிறது இந்தியா-

இலங்கை கடற்பரப்பில் பாரம்பரியமாக மீன்பிடிப்பதற்கான உரிமை இருப்பதாக
உரிமை கோரி வந்த இந்தியா அந்தக் கோரிக்கையை வாபஸ் பெறுவதற்கு
இணங்கியிருப்பதாக மீன்பிடித்துறை அமைச்சர் ராஜிதசேனாரட்ண
தெரிவித்திருக்கிறார்.
கொழும்பில் வார இறுதியில் இடம்பெற்ற இரு நாள் இரு தரப்பு
பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கப்பாடு ஏற்பட்டதாக அமைச்சரை மேற்கோள்
காட்டி பி.பி.சி. தெரிவித்துள்ளது. முன்னைய கூட்டு அறிக்கைகளின் போது
இலங்கையின் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான பாரம்பரியமான மீன்பிடி
உரிமையைஇந்தியா கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 60 களில்
இணங்கிக் கொள்ளப்பட்ட விடயத்தை பாராம்பரிய உரிமையெனக் கருத முடியாது
என்பது எமது வாதமாக இருந்தது. ஏனெனில், 1976 இலேயே சர்வதேச கடல் எல்லைகள்
வகுக்கப்பட்டன என்று அமைச்சர் ராஜித சேனாரட்ன பி.பி.சி. தமிழ் சேவையின்
ஜெயப் பிரகாஷ் நல்லு சாமிக்கு கூறியுள்ளார். இந்த இணக்கப்பாடானது
இலங்கையின் மீன்பிடித்துறைக்கு கிடைத்த வெற்றியென அமைச்சர்
தெரிவித்திருக்கிறார்.
தமிழ் நாட்டில் எந்தவொரு இலங்கை மீனவரையும் கைது செய்வதில்லை என்பதற்கு
இந்தியாஇணங்கியுள்ளது. அதே சமயம், எந்தவொரு மீனவரும் எல்லை தாண்டினால்
அவர்கள் இலங்கை கடற் படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள். இலங்கைஇந்திய
மீனவர்களின் பரஸ்பர ஊடுருவல்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டே இந்தச்
சந்திப்பு இடம்பெற்றதாக அமைச்சர் ராஜித கூறியுள்ளார்.
இதேவேளை, இந்தியக் கடற்பரப்பில் நிராதரவான நிலைமையில் காணப்படும் இலங்கை
மீனவர்களை துரிதமாக திருப்பி அனுப்புவது தொடர்பாக செயற்பட இந்தியா
சனிக்கிழமை இணங்கியுள்ளதாக இந்து பத்திரிகை நேற்று தெரிவித்தது.
தனியாக இந்திய மத்திய அரசு இந்தஉறுதி மொழிகளை வழங்க முடியாததால்
பெரும்பான்மையான மீனவர்கள் கைது செய்யப்படும் மாநிலங்களையும் இந்த
விடயத்தில் டில்லி சம்பந்தப்படுத்தியுள்ளது. உண்மையான மீனவர்களை திருப்பி
அனுப்புவதற்கான பொறிமுறையை தமிழ் நாடு தலைமையிலான மாநிலங்கள்
முன்னெடுக்கவுள்ளன.தமிழ்நாடு ஏற்கனவே இந்த பொறிமுறையை கொண்டுள்ளது. இந்
நிலையில் ஆந்திரா , ஒரிசா, அந்தமான், நிக்கோபார் தீவுகள் ஆகியவையும் இந்த
நடைமுறையை பின்பற்றவுள்ளன. இந்திய இலங்கை கூட்டு செயற்குழுவின் நான்காவது
மாநாட்டின் போது தீர்வு காணப்படாமலிருக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய
6 மாதங்களுக்கு ஒரு தடவை சந்திப்பதென இணக்கம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் 2012 முற்பகுதியில் இலங்கை மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தூதுக்
குழுவினர்இந்தியாவுக்கு விஜயம் செய்வதெனவும் இணக்கம்
காணப்பட்டிருக்கிறது.
இருநாள் மாநாட்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ரேனுகா
செனவிரட்ண இலங்கைத் தூதுக்குழுவுக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சின்
இணைச் செயலாளர் ஹர்ஷ் வர்த்தன் ஸ்ரீல்லால் இந்தியத் தூதுக் குழுவுக்கும்
தலைமை தாங்கினார்.

No comments:

Post a Comment