Sunday, 8 January 2012

நடிகர் எம்.என்.நம்பியாரின் மகன்சுகுமாறன் நம்பியார் மாரடைப்பால் மரணம்

மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் மகனும், பா.ஜனதா கட்சி தலைவருமான
சுகுமாறன் நம்பியார் நேற்று சென்னையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவரது உடல் தகனம் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
மறைந்த வில்லன் நடிகர் எம்.என்.நம்பியாரின் ஒரே மகன் எம்.என்.சுகுமாறன்
நம்பியார் (வயது 64). இவர் சென்னை கோபாலபுரம் 6-வது தெருவில் உள்ள அவரது
வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலையில் வழக்கம்போல் காலை டிபனை
முடித்துவிட்டு வீட்டில் அமர்ந்து உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
காலை 11.30 மணி அளவில், திடீரென்று நெஞ்சு வலிப்பதாக கூறினார். அப்போது
மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். அருகில் இருந்த அவருடைய மூத்த
மகன் சித்தார்த், உடனடியாக அருகே உள்ள ஒரு மருத்துவமனையின் அவசர
சிகிச்சைப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தார். உடனே டாக்டர்கள் இவருடைய
வீட்டுக்கு வந்தனர். உடலை பரிசோதனை செய்து பார்த்தபோது அவர் மரணம்
அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சுகுமாறன் நம்பியார் மரணம் பற்றி கேள்விப்பட்டதும் பாரதீய ஜனதா கட்சியின்
மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெலிபோன் மூலம் அவருடைய மகனிடம் பேசி, தனது
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா சார்பில், சுகுமாறன் நம்பியார் உடலுக்கு நிதி அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம்மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த சுகுமாறன் நம்பியாரின் இறுதிச்சடங்குகள் சென்னையில் இன்று
(திங்கட்கிழமை) நடக்கிறது.அவரது உடல் சென்னை கோபாலபுரம் இல்லத்தில்
இருந்து ஊர்வலமாக பெசன்ட்நகர் மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு, காலை
10மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.
மரணம் அடைந்த எம்.என்.சுகுமாறன் நம்பியாரின் மனைவி பெயர் லட்சுமி (வயது
54) இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கு,
சித்தார்த் (26), பாரத் (22) ஆகியஇரு மகன்கள் உள்ளனர்.
சித்தார்த் ஆடிட்டருக்கு படித்து வருகிறார். பாரத் சென்னை
பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
சுகுமாறன் நம்பியார் 1991-ம் ஆண்டில் இருந்து பா.ஜ.க.வில் தன்னை
இணைத்துக்கொண்டு பணியாற்றி வந்தார். ஆரம்ப காலத்தில் சென்னை மாநகர
பா.ஜ.க. தலைவராக பணியாற்றினார். பின்பு, பாரதீய ஜனதா கட்சியின் அகில
இந்திய பொருளாளராக பணியாற்றினார். தற்போது அகில இந்திய செயற்குழு
உறுப்பினராக இருந்தார்.
பாராளுமன்ற தேர்தலின்போது, அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி ஏற்பட முக்கிய
பங்குவகித்துள்ளார். திருச்சி, வடசென்னை பாராளுமன்ற தொகுதிகளில் பா.ஜ.க.
சார்பில் போட்டியிட்டார்.
இவர் 45 ஆண்டுகளாக தீவிர அய்யப்ப பக்தர் ஆவார். கடந்த மாதம் சபரிமலைக்கு
சென்று அய்யப்பனை தரிசித்துவந்தார். அகில இந்திய அய்யப்ப சேவா சங்கத்தின்
தலைவராகவும் பணியாற்றினார்.
கராத்தேயில் கறுப்பு பெல்ட் வாங்கிய சுகுமாறன் நம்பியார், கராத்தே
பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். இவர் கமாண்டோ பயிற்சி அளிப்பதற்கான
தகுதியும் பெற்றுள்ளார். தமிழக போலீசுக்குகமாண்டோ பயிற்சி அளித்தவர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு ரைபிள் கிளப்பிலும் உறுப்பினராக உள்ளார். எல்.கே.அத்வானியின்
நெருங்கிய குடும்ப நண்பராகவும் விளங்கினார்.

No comments:

Post a Comment