Monday, 5 August 2013

ஆடி அமாவாசையில் திதி

இறந்தவர்களுக்கு ஆடி அமாவாசையில் திதி கொடுப்பதால் அவர்களுக்கு மேல் உலகில் நன்மை கிடைக்கும் என்பதும், இந்த திதி கொடுத்து அவர்களை வணங்குவதன் மூலம் நன்மை கிடைக்கும் என்பதும் ஐதீகம்.  இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை அன்றும் இறந்த பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த திதி கொடுக்கும் நடைமுறை ஆற்றங்கரையில் நடப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.  இந்த ஆடி அமாவாசையான இன்று அதிகாலையில் இருந்தே ஈரோடு மாவட்ட மக்கள் ஆற்றங்கரையோரம் சென்று தங்களது இறந்த பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.  பவானி கூடுதுறையில் பவானி -காவிரி ஆறு, மற்றும் அமுத நதி ஆகியவை சந்திக்கிறது.

இங்கு இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.  இதையொட்டி இன்று அதிகாலையில் இருந்தே ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வணங்கினர்.  இதனால் பவானி கூடுதுறையில் இன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடினர்.

இதுபோல கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள காவிரி ஆற்றிலும் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். ஈரோடு கருங்கல் பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றுப் பகுதியிலும் ஏராளமான பேர் திதி கொடுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் இறந்த முன்னோர்கள் நினைவாக புரோகிதர்களுக்கு தேங்காய், பழம், அரிசி, காய்கறி, வேட்டி, துண்டு, போன்றவற்றை கொடுத்தனர். ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கினர்.

No comments:

Post a Comment