Friday, 13 January 2012

கருணாநிதி மகள் செல்வி மீது மோசடி புகார்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி
வாங்கித்தருவதாக தன்னிடம் ரூ.69 லட்சம் பணம் மோசடி செய்ததாக முன்னாள்
முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி மீதுமோசடி புகார்
கொடுக்கப்பட்டுள்ளது.
மதுரை வண்டியூர் மெயின்ரோடு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் நல்லதம்பி.
வக்கீலான இவர், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ஆவார்.
இவர் நேற்று காலை 11 மணியளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை
சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வக்கீலாக பணியாற்றி உள்ளேன். 2006-ல்
விருதுநகர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தி.மு.க.வில் இணைந்தேன். சென்னை
வேளச்சேரி தி.மு.க. பகுதிச்செயலாளர் ரவி, எனக்கு நன்கு அறிமுகமானவர்.
அவர், என்னிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 5
உறுப்பினர்களின் பதவி காலியாக உள்ளது என்றும், அதில் ஒரு உறுப்பினர்
பதவியை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.1 கோடி பணம் தரவேண்டும் என்றும்
தெரிவித்தார்.
2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு நான்
சென்றேன். அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி இருந்தார்.
அவரிடம், என்னை வேளச்சேரி ரவி அறிமுகம் செய்துவைத்தார். செல்வியின்
மருமகன் டாக்டர் ஜோதிமணியின் அக்காள் உமாமகேஸ்வரியும் அப்போது அங்கு
இருந்தார்.
எனது கல்வித்தகுதி பற்றி கேட்டறிந்தனர். முன்பணமாக ரூ.25 லட்சம் வேண்டும்
என்றார்கள். நான் அடுத்த 2 நாட்களில் எனது மனைவியின் நகைகளை அடகு வைத்து
ரூ.10 லட்சம் பணத்தை அதே ஓட்டலில் உமாமகேஸ்வரியிடம் கொடுத்தேன். 2010-ம்
ஆண்டு ஜுன் மாதம் 23, 24 தேதிகளில் செம்மொழி மாநாட்டுக்கு முன்பாக ரூ.50
லட்சமும், மாநாட்டுக்கு பின்பு ரூ.19 லட்சமும், ஆக மொத்தம் ரூ.69 லட்சம்
உமாமகேஸ்வரியிடம் வேளச்சேரி ரவி முன்னிலையில் அதே நட்சத்திரஓட்டலில்
கொடுத்தேன்.
ஆனால், அவர்கள் பேசியபடி தேர்வாணைய உறுப்பினர் பதவி எனக்கு
கிடைக்கவில்லை. வேறு 5 பேரை உறுப்பினர்களாக நியமித்தார்கள். உடனே நான்
பணத்தை திருப்பி கேட்டேன். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
தருவதாக சொன்னார்கள். அந்த வாய்ப்பு கிடைக்காவிட்டால், கட்சியின் பெரிய
பதவி பெற்றுத்தருவதாக கூறினார்கள். நான் கட்சியை விட்டு ஒதுங்கிவிட்டேன்.
எனக்குபணம் கிடைத்தால் போதும் என்று தெரிவித்தேன். வேளச்சேரி ரவி பணத்தை
திருப்பித்தருவதாக சொல்லி ஏமாற்றினார்.
கடந்த 12-ந் தேதி வேளச்சேரி ரவியை சந்தித்து எனது பணத்தை
கொடுக்காவிட்டால், கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுப்பேன் என்று
தெரிவித்தேன்.அதற்கு அவர், `உன்னை யார் என்றே தெரியாது என
சொல்லிவிடுவேன்' என்று பதில் அளித்தார். பின்னர் என்னை மிரட்டினார்.
அப்போது எனது நண்பர் அழகேசன் மற்றும் முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.
என்னை ஏமாற்றி மோசடி செய்து தற்போது மிரட்டி வரும் வேளச்சேரி ரவி,
உமாமகேஸ்வரி மற்றும் செல்வி ஆகியோர் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை
எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உமாமகேஸ்வரி மறுப்பு
இந்த நிலையில், வக்கீல் நல்லதம்பி கொடுத்துள்ள புகார் மனுவில்
இடம்பெற்றுள்ள உமாமகேஸ்வரி நேற்று மாலையில் போலீஸ் கமிஷனர்
அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் கோபாலபுரத்தில் வசிக்கிறேன். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறேன். எனது
கணவர் சென்னை துறைமுகத்தில் வேலைபார்க்கிறார். என்மீது புகார்
கொடுத்துள்ள நல்லதம்பி என்பவரை ஒரேயொரு முறை மட்டும் நட்சத்திர ஓட்டலில்
வைத்து பார்த்துள்ளேன். வேளச்சேரி ரவிதான் எனக்கு அறிமுகப்படுத்தி
வைத்தார். இவர்தான் முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி
என்று அறிமுகப்படுத்தினார். அவ்வளவுதான் எனக்கு தெரியும். அதன்பிறகு
நல்லதம்பியை நான் பார்த்ததே இல்லை.
அவர் என்மீது கொடுத்துள்ள புகார் அனைத்தும் அப்பட்டமான பொய் ஆகும்.
வேளச்சேரி ரவிக்கும், அவருக்கும் உள்ள தொடர்பு பற்றி எனக்கு எதுவும்
தெரியாது. இந்த பிரச்சினையில் வேண்டுமென்றே என்னை சிக்க வைத்து, எனது
பெயருக்கு களங்கம் உண்டாக்கியுள்ளனர்.
கடந்த வாரம் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் நல்லதம்பியின் பிரச்சினை
குறித்து என்னிடம் தெரிவித்தார். நான் அப்போதே இந்த பிரச்சினையில் எனக்கு
தொடர்பில்லை என்றும், மிரட்டி பணம் பறிப்பதற்காக என்னையும் இந்த
பிரச்சினையில் சிக்கவைக்கிறார்கள் என்றும் கூறிவிட்டேன்.
மேலும் நட்சத்திர ஓட்டலில் செல்வியை சந்தித்ததாகவும் நல்லதம்பி
கூறியுள்ளார். அதுவும் தவறான தகவல் ஆகும். நல்லதம்பி எனக்கு அறிமுகம்
செய்து வைக்கப்பட்டபோது செல்வி அங்கு இல்லை. என்மீது கொடுத்துள்ள புகாரை
சட்டப்பூர்வமாக சந்திப்பேன்.
இவ்வாறு உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சொந்த வீட்டிலேயே ரூ.கோடி கொள்ளையடித்த இளம்பெண்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சொந்த வீட்டிலேயே ரூ. 1 கோடி
கொள்ளையடித்த இளம்பெண் மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லியைச் சேர்ந்தவர் அதிதி ஜெயின்(22). இன்டீரியர் டெகரேட்டராக
பணிபுரிந்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு இவரது குடும்பத்தினர்
பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்றனர். அதிதி மட்டும் வீட்டில்
இருந்தார்.
அப்போது வீட்டில் புகுந்த 3 முகமூடி கொள்ளையர்கள் தன்னை
கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்று
விட்டதாக போலீசாருக்கு அதிதி தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது வீட்டின் முன்பக்க கேட்
பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது. வீட்டில்
இருந்த சிசிடிவி கேமராமின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. வைர நகைகள்
பணம் உள்பட ரூ. 1 கோடி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கொள்ளை
முடிந்து வீட்டின் பின்பக்க கேட் வழியாக கொள்ளையர்கள் தப்பியதும்
தெரியவந்தது.
விசாரணையில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை வெளியில் இருந்துஉடைப்பது
இயலாது, வீட்டின் உள்ளே இருந்த நபர் கொள்ளையர்களுக்கு
உதவியிருக்கவேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தீவிர
விசாரணையில் அதிதி அவரது காதலன் அன்கித் பெங்கானி(24) என்பவருடன்
சேர்ந்து சொந்த வீட்டிலேயே கொள்ளையடித்தது தெரியவந்தது. தங்கள் காதலுக்கு
பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு நகை,
பணத்துடன் ஓட்டம் பிடிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இருவரையும்
போலீசார் கைது செய்தனர்.

அதிமுகவிலிருந்து நீக்கம் ஏன்?- பரபரப்புத் தகவல்களைவெளியிடுகிறார் நடராஜன்!

அதிமுகவிலிருந்து தான் , தனது மனைவி சசிகலா மற்றும் குடும்பத்தினர்
நீக்கப்பட்டதன் பின்னணி குறித்த பரபரப்புத் தகவல்களை தஞ்சாவூரில் தான்
நடத்தவுள்ள பொங்கல் விழாவின்போது நடராஜன் வெளியிடுவார் என்று
பரபரப்புத்தகவல் வெளியாகியுள்ளது.
தனது குடும்பத்துக்கும் , முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே என்ன
பிரச்சினை , என்ன காரணத்திற்காக தாங்கள் வெளியேற்றப்பட்டோம் என்பது
உள்ளிட்ட பல தகவல்களை அவர் அந்தவிழாவின்போது அம்பலப்படுத்தவுள்ளதாகவும்
கூறப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரம் பரபரப்பாகியுள்ளது.
மன்னார்குடி வகையறா , மன்னார்குடி குடும்பம் என பல்வேறு செல்லப்
பெயர்களால் அழைக்கப்பட்டு வரும் சசிகலா குடும்பத்தினர் சமீபத்தில்
கூண்டோடு அதிமுகவை விட்டு விரட்டப்பட்டனர். ஆனால் நீக்கப்பட்ட பின்னர்
இவர்களில்யாருமே இதுவரை வாய் திறக்காமல் உள்ளனர். இவர்களைத் தவிர
இவர்களது ஆதரவாளர்கள் பலரும் கூட தொடர்ச்சியாக நீக்கப்பட்டும் ,
மாற்றப்பட்டும் வருகின்றனர்.
இந்த நிலையில் முதல் முறையாக சசிகலா குடும்பத்தினர் வாய் திறக்கப்
போகின்றனர். குடும்பத்தினர் சார்பாக அவர்களின் தலைவராக
கருதப்படும்நடராஜன் , அதிமுகவிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது ஏன் என்பது
குறித்து தங்களது தரப்பு நியாயத்தை தஞ்சாவூரில் தான் நடத்தவுள்ள பொங்கல்
விழாவின்போது விரிவாக எடுத்துரைக்கப் போகிறாராம். அப்போது பல விஷயங்களை
அவர் பகிரங்கப்படுத்தப் போவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
வருடம் தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தஞ்சாவூரில் கலை மற்றும் கலாச்சார
நிகழ்ச்சிகளுடன் விழா நடத்துவது நடராஜன் வழக்கம். அந்த வகையில் ,
தற்போதைய பொங்கல்பண்டிகையயையொட்டியும் அவர் விழா நடத்துகிறார்.
தமிழர் கலை இலக்கிய திருவிழா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விழா
தஞ்சாவூரில் உள்ள நடராஜனுக்குச் சொந்தமான கல்யாணமண்டபத்தில்
நடைபெறவுள்ளு. இதில் தான் சார்ந்த முக்குலத்தோர் வகுப்பு பிரமுகர்களையும்
, நண்பர்களையும் அழைத்துள்ளாராம். இந்த நிகழ்ச்சியில் தனது பலத்தைக்
காட்டவும் , தேவர் சமூகத்தினர் தன் பக்கம்தான் உள்ளனர் என்பதை காட்டவும்
தேவர் சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கியத் தலைவர்களையும் கண்டிப்பாக
வருமாறு அழைத்துள்ளாராம் நடராஜன்.
3 நாள் விழாவாக இது நடைபெறுகிறது. ஜனவரி 15ம் கலை , கலாச்சார
நிகழ்ச்சியாக நடைபெறும். ஜனவரி 16ம் தேதி 2வது நாள் விழாவில் , அடுத்த
நாள் முல்லைப் பெரியாறு-வரலாறு , பிரச்சினைகள் மற்றும் தீர்வு என்ற
பெயரில் மாநாடாக நடைபெறுகிறது.
3வது நாளான ஜனவரி 17ம்தேதி தான் எழுதிய மூன்று புத்தகங்களை
வெளியிடுகிறார். பழ.நெடுமாறன் , காசி ஆனந்தன் உள்ளிட்டோர் இந்த
விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனராம்.
விழாவின் இறுதி நாளில் சிறப்புரையாற்றுகிறாராம் நடராஜன்.அப்போதுதான்
ஜெயலலிதா குறித்தும் , அதிமுகவிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டது
குறித்தும் விரிவான விளக்கம் அளித்துப் பல்வேறு தகவல்களை அவர் வெளியிடப்
போவதாக கூறப்படுகிறது.
அதிமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்ட பின்னர் நடராஜன் குடும்பத்தினர்
கூண்டோடு ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.
இதில்நடராஜன் குடும்பத்தினர் அத்தனை பேரும் கலந்து கொள்ளவுள்ளனராம்.

ஊழலுக்கு இடதுசாரி மட்டும் என்ன விதிவிலக்கா ? கேரள மாஜி முதல்வர் அச்சு.,மீது நில மோசடிவழக்கு

நாட்டில் எந்தகட்சிதான் ஊழல் இல்லாத நிர்வாகத்தை தரப்போகிறதோ என்ற
கேள்விதான் எழுந்தி நிற்கிறது. காரணம் காங்கிரஸ் முதல் கம்யூ., வரை எந்த
ஒரு கட்சியும் யோக்கியவான் என்ற நெஞ்சு நிமிர்த்து சொல்ல திராணி இல்லாமல்
போயிருக்கிறது என்பதுதான் நிசப்தம். ஜார்கண்ட் முதல்கர்நாடகாவரை பல்வேறு
முதல்வர்கள் ஊழல் வழக்கில் சிக்கியவர்களாகத்தான் இருக்கின்றனர். கேரள
மாநிலத்தில் பெரும் செல்வாக்குடன் இருந்தவரும் வாய்சொல்லில் வீரருமான
அச்சுதானந்தன் மீது தற்போது நில மோசடி வழக்கு பதிவாகியிருக்கிறது. இன்று
கோழிக்கோடு கோர்ட்டில் இதற்கானஆவணங்கள் தாக்கல் செய்யப்படுகிறது. இவரது
ஆட்சி காலத்தில் காசர்கோடு என்ற மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கு
இடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட து.
இதில் அச்சுதானந்தன் தனது உறவினருக்கு முறைகேடாக இடம் ஒதுக்கி சலுகை
காட்டியுள்ளார். இந்த விவகாரம் குறித்து புகார் செய்யப்பட்டு , பல
யோசனைகளுக்குபின்னர் விசாரணை நடத்தப்பட்டது. இதில் உண்மை இருந்ததயைடுத்து
லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். இவருடன்
அமைச்சராக இருந்த கே.பி., ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உள்பட 7 பேர்
இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக சேர்க்ப்பட்டுள்ளனர்.
மார்க்., கம்யூ., கட்சியை சேர்ந்தவி.எஸ்., என்றழைக்கப்படும் அவர்
பேச்சுதிறன் கொண்டவர்.இவர் 1985 முதல் இந்த கட்சியின் பொலிட்பீரோ
உறுப்பினாராக இருந்து வருகிறார். கேரளாவில் கம்யூ., கட்சியை பலப்படுத்திய
பெருமை இவருக்கு உண்டு.
ஆழப்புழா மாவட்டத்தில் பிறந்த இவருக்கு வயது 88. நான் நேர்மையானவன்
என்கிறார் அச்சு எனது மீது காங்கிரஸ் அரசு, சேறு வாரி பூசுவதற்காக லஞ்ச
ஒழிப்பு துறையை பயன்படுத்தியிருக்கிறது. நான் எவ்வித தவறும் செய்யவில்லை.
நான் 50 ஆண்டுகால அரசியலில் இருப்பவன். மக்களுக்கு என்னைப்பற்றி
தெரியும். சட்டப்படி வழக்கை சந்திப்பேன் என்றார் அச்சு. ஆனால் கேரள
காங்கிரஸ் இதனை மறுத்துள்ளது. இதில் எவ்வித பழிவாங்கும் நோக்கமும் இல்லை
என்று கூறியிருக்கிறது. எதிர்கட்சி தலைவர் பதவி ராஜினாமா ? மோசடி வழக்கு
தொடர்வதையொட்டி அச்சுதானந்தன் தனது எதிர்கட்சிதலைவர் பதவியில் இருந்து
விலக முடிவு செய்திருக்கிறார். இதற்கென அவர் தன்னை பதவியில் இருந்து
விடுவிக்குமாறு சி.பி.ஐ.எம்., மத்தியக்குழுவிடம் அனுமதி கேட்டுள்ளார்.

கமல்-தனுஷ்-ஜாக்கிசான்! ஆஸ்கார் தயாரிப்பில்!

மிகப்பெரிய பட்ஜெட்டில் படமெடுக்க திட்டமிடும் இயக்குனர்களின் நினைவிற்கு
வரும் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். கமல்ஹாசன் நடித்த தசாவதாரம்
படத்தின் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் தான்.
இந்த வருடத்தின் இறுதிக்குள் கமல்ஹாசனும் ரவிச்சந்திரனும் இணைவார்கள் என
தெரிகிறது. இதை பற்றி ரவிச்சந்திரன் " தசாவதாரம் படத்திற்கு அடுத்ததாக
கமலும் நானும் இணைவது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.
கமல் இயக்கி நடித்துக்கொண்டிருக்கும் " விஸவரூபம் " படம் முடிந்ததும்
என் படத்தில் நடிப்பதாக கூறியுள்ளார். படத்தை பற்றிய மற்ற தகவல்கள்
விரைவில் வெளிவரும். " என்று கூறியிருப்பதாக தெரிகிறது.
கமல்ஹாஸனை புக் செய்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் அடுத்ததாக நடிகர் தனுஷுடன்
இணைகிறார். தனுஷ் நடிக்கும் 3 படத்தின் படப்பிடிப்பு கடைசி
கட்டத்தில்இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்ததும் சிறிய ஓய்விற்குப்பின்
ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தில் நடித்துக் கொடுப்பதாகதனுஷ் ஒப்புக்
கொண்டுள்ளார்.
இது பற்றி ரவிச்சந்திரன் " தனுஷ் ஆஸ்கார் நிறுவனத்தின் தயாரிப்ப்பில்
நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய இளம்நடிகர்களில் சிறந்தநடிகர்
தனுஷ் " என்று புகழாரம் சூட்டியுள்ளார். இயக்குனர்களுடன்
பேசிக்கொண்டிருப்பதாகவும் , தனுஷுக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டதாகவும்
கூறியுள்ளார்.
தனுஷ் மற்றும் கமல்ஹாஸனை புக் செய்துள்ள தயாரிப்பாளர் ரவிச்சந்திரன்
ஹாலிவுட் நடிகர்ஜாக்கிசானையும் புக் செய்திருப்பதாக தெரிகிறது.
ஜாக்கிசான் நடிக்கும் படத்தை தயாரிக்கப் போகும் ரவிச்சந்திரன் அந்த
படத்தில் தமிழ் மற்றும் இந்தி திரையுலக நட்சத்திரங்களையும் நடிக்க
வைக்கும் திட்டத்தில் உள்ளதாக பேசிக்கொள்றார்கள்.
ஆஸ்கார் ரவிச்சந்திரனும் , ஜாக்கிசானும் நல்ல நண்பர்கள். ரவிச்சதிரன்
தயாரித்த தசாவதரம்படத்தின் பாடல் வெளிட்டு நிகழ்ச்சிக்கு ஜாக்கிசான்
சிறப்பு விருந்தினராக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.