காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் சொந்த வீட்டிலேயே ரூ. 1 கோடி
கொள்ளையடித்த இளம்பெண் மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
புதுடெல்லியைச் சேர்ந்தவர் அதிதி ஜெயின்(22). இன்டீரியர் டெகரேட்டராக
பணிபுரிந்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு இவரது குடும்பத்தினர்
பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்றனர். அதிதி மட்டும் வீட்டில்
இருந்தார்.
அப்போது வீட்டில் புகுந்த 3 முகமூடி கொள்ளையர்கள் தன்னை
கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்துச் சென்று
விட்டதாக போலீசாருக்கு அதிதி தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சென்று சோதனையிட்டனர். அப்போது வீட்டின் முன்பக்க கேட்
பூட்டை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தது தெரியவந்தது. வீட்டில்
இருந்த சிசிடிவி கேமராமின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. வைர நகைகள்
பணம் உள்பட ரூ. 1 கோடி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. கொள்ளை
முடிந்து வீட்டின் பின்பக்க கேட் வழியாக கொள்ளையர்கள் தப்பியதும்
தெரியவந்தது.
விசாரணையில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை வெளியில் இருந்துஉடைப்பது
இயலாது, வீட்டின் உள்ளே இருந்த நபர் கொள்ளையர்களுக்கு
உதவியிருக்கவேண்டும் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தீவிர
விசாரணையில் அதிதி அவரது காதலன் அன்கித் பெங்கானி(24) என்பவருடன்
சேர்ந்து சொந்த வீட்டிலேயே கொள்ளையடித்தது தெரியவந்தது. தங்கள் காதலுக்கு
பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் கொள்ளையடித்துவிட்டு நகை,
பணத்துடன் ஓட்டம் பிடிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இருவரையும்
போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment