Monday, 7 May 2012

அணுகுண்டை விட மோசமானது...




அணுகுண்டை விட மோசமானது பிளாஸ்டிக் பைகள் என்று கருத்து  தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம்,இதனை ஒழிக்க மத்திய ,மாநில அரசின்  நடவடிக்கைகள் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.

பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க கோரி ஷியாம் திவான் என்ற வழக்கறிஞர்   பொது நலன் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"நாட்டில் பிளாஸ்டிக் பைகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.நாடு  முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மாடுகளின் வயிற்றை அறுவை சிகிச்சை  செய்து 30 முதல் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் எடுக்கப்படுவதாக கால்நடை  மருத்துவமனை அறுவை சிகிச்சை குறித்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.இதனால்  பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி,எஸ்.ஜே.  முகோபாத்யாய் ஆகியோரடங்கிய அமர்வு,எதிர்காலத்தில் அணு குண்டுகள் ஏற்படுத்தும்  அழிவை விட, பிளாஸ்டிக் பைகள் ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் அடிப்பகுதியில்  அடைத்துக் கொண்டு ஏற்படுத்தும் அழிவு மிகப் பயங்கரமானதாக உள்ளது என்று கூறியது.

மேலும் இந்தியாவில் உடனடியாக பிளாஸ்டிக் பைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட  வேண்டும் என்றும்,இல்லையென்றால் இந்த நிலையை கட்டுப்படுத்த முடியாது என்றும்  கூறிய நீ திபதிகள்,இது குறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்  அனுப்பவும் உத்தரவிட்டனர்.



No comments:

Post a Comment