கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற விரும்பினால் தாராளமாக
வெளியேறிக் கொள்ளலாம்.கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்று மேற்கு
வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி
அதிரடியாகத் தெரிவித்தார்.
கொல்கத்தா தலைமை செயலகத்தில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி
அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை திரிணாமுல் காங்கிரஸ்
எதிர்த்து வருகிறது. அதேபோல் வலுவான லோக்பால் சட்டம்கொண்டுவரப்பட
வேண்டும், அதில் லோக் அயுக்தாவையும் சேர்க்க வேண்டும் என்று
வலியுறுத்தினோம். எங்கள் வற்புறுத்தலால் லோக் அயுக்தா சேர்க்கப்பட்டது.
ஆனால், எங்கள் கருத்தை அவர்கள் கேட்கவில்லை. லோக்பால் மசோதாவை நாங்கள்
கேட்டபடி ஓட்டெடுப்புக்கு விடவில்லை.
அதேபோல், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையை
உயர்த்தக்கூடாது என்றும் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.
இந்த காரணங்களால் காங்கிரஸ் கட்சி எங்கள் மீது வீணான புரளிகளை, வதந்திகளை
பரப்பி வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ்பற்றி அவதூறு பிரசாரம் செய்து
வருகிறது.
உத்தரபிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி
தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி
கலங்கிப்போய், பயந்துபோய் உள்ளது.
மே.வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து கொண்டு திரிணாமுல்
காங்கிரஸ் கட்சியை காங்கிரஸ் கட்சி, தூற்றி வருகிறது. தொடர்ந்து
அவமானப்படுத்தி வருகிறது. அவர்கள் இஷ்டம்போல் தொடர்ந்து மார்க்சிஸ்ட்
கட்சியுடன் சேர்ந்து செயல்படட்டும்.
விரும்பினால் எங்களுடனான கூட்டணியை காங்கிரஸ் கட்சி முறித்து
கொள்ளட்டும். அவர்கள் வெளியேற எங்களின் கதவுகள் திறந்தே இருக்கின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு
தெரிவித்து உள்ளது.
மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா
இதுகுறித்து கூறுகையில், "மம்தா பானர்ஜியின் கருத்தை நாங்கள் தெளிவாகப்
புரிந்து கொண்டுள்ளோம். ஆனால் யாருடைய விருப்பத்தையும் பூர்த்தி
செய்வதற்காக நாங்கள் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. எங்களுக்கு
ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவே
இடம்பெற்றுள்ளோம். எனவே மக்கள் விரும்பும் வரை அமைச்சரவையில் நீடிப்போம்"
என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment