Saturday, 7 January 2012

நக்கீரன் அலுவலகம் மீது அதிமுகவினர் கொடூரத் தாக்குதல்

ஜெயலலிதாவின் அட்டைப்படம் தாங்கி வந்துள்ள நக்கீரன் இதழைக் கொளுத்திய
அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும்
தாக்குதல் நடத்தினர். மேலும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில்
அந்த பத்திரிகையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் உள்ள நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.க., தொண்டர்கள் பலர் கல்
மற்றும் உருட்டுக்கட்டையால் வீசி அங்கிருந்த பொருட்களை அடித்து
நொறுக்கினர். இதனையடுத்து அங்குபரபரப்பு ஏற்பட்டது.
வேளச்சேரி எம்எல்ஏ அசோக் நக்கீரன் அலுவலக வாசலில் உள்ள கதவுக்கு
வெளிபக்கமாக பூட்டு போட்டு, கதவின் மேல் தாக்குதல் நடத்தினார்.
அண்ணாசாலை அருகே அதிமுகவினர் சுமார் 50 பேர் நக்கீரன் ஆசிரியர் கோபாலின்
உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் மதுரை, ஈரோடு, கரூர், நாமக்கல், ராசிபுரம், விருதுநகர்மாவட்டம்
சாத்தூர், சிவகாசி, வால்பாறை, திருநெல்வேலி, உள்ளிட்ட பகுதிகளில் இந்த
கட்சியின் எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்கள் இந்த பத்திரிகையை தீ வைத்து
எரித்தனர். சில கடைகளில் அதிமுகவினர் புகுந்து புத்தகங்களை அள்ளி
சென்றனர்.
இது குறித்து நக்கீரன் கோபால் கூறுகையில், போலீசாருக்கு பல முறை தொடர்பு
கொண்டும் பாதுகாப்புக்கு யாரும் வரவில்லை. காலதாமதமாக வந்த
போலீஸ்காரர்கள் முன்னிலையிலேயேதாக்குதல் நடந்தது என்றார்.
இந்த சம்பவம் குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம்
தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயக நாட்டில் இது
போன்று பத்திரிகை அலுவலகத்தை தாக்குவது ஏற்புடையது அல்ல. ஒரு தலைவர்
குறித்து அவதூறாக செய்திவெளியானால் நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்கு
தொடர வாய்ப்பு இருக்கிறது. அதனை விட்டு இவ்வாறு வன்முறை செயல்கள் ஏவி
விடப்படுவது ஜனநாயகத்தில் ஏற்புடையது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment