தலை, கை, கால்களில் கடுமையான காயங்களுடன் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு வயது குழந்தை, உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதாக டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த 18ம் தேதி, இரண்டு வயதே நிரம்பிய ஒரு பெண் குழந்தையை, 15 வயது இளம் பெண், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அந்த குழந்தையில் தலையில் பலத்த காயம் இருந்தது. கை, கால் மற்றும் உடலின் பல இடங்களில் இரும்புக் கம்பியால் சூடு போட்டதற்கான காயங்களும், பற்களால் கடித்த காயங்களும் இருந்தன.
சந்தேகம்: சுய நினைவற்ற நிலையில் இருந்த அந்த குழந்தை, தன்னுடையது என்றும், படுக்கையில் இருந்து தவறி விழுந்ததால், இந்த காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த இளம் பெண் தெரிவித்தார். அந்த பெண் கூறியது, டாக்டர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், சிறுமிக்கு தலையில் ஏற்பட்டுள்ள காயம், சுவரில் அந்த குழந்தையை பலமாக மோதியதால் ஏற்பட்டது போல் உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த இளம் பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். இதன்பின், அந்த பெண்ணை, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
குழந்தைக்கு சிகிச்சை: கொடூரமான முறையிலும், மனித தன்மையற்ற முறையிலும் உருக்குலைக்கப்பட்டு இருந்த அந்த பச்சிளம் குழந்தை, தீவிர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையை காப்பாற்றுவதற்கு, எய்ம்ஸ் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். குழந்தையின் பெயர் தெரியாததால், மருத்துவமனை ஊழியர்கள் அந்த குழந்தைக்கு "பலாக்' என, பெயரிட்டு அழைத்து வருகின்றனர். குழந்தையின் பெற்றோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ள பெண்ணிடமும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. டாக்டர்கள் கூறுவது என்ன? இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில்,"குழந்தையின் உடல் நிலையில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், குழந்தை பிழைப்பதற்கு 30 முதல் 40 சதவீத வாய்ப்புகளே உள்ளன. குழந்தை, சுவரில் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என, தெரிகிறது. இதனால், தலையின் பின்புறத்தில் பலத்த அடிபட்டு இருப்பதுடன், மூளையும் சேதமடைந்துள்ளது' என்றனர். போலீசார் கூறுவது என்ன? டில்லி
போலீசார் கூறுகையில்,"இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளோம். சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்ட இளம் பெண்ணிடம், அவரது காதலர், இந்த குழந்தையை கொடுத்திருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். அந்த இளைஞரை தேடி வருகிறோம். ஆனாலும், இந்த குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை'என்றார். டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில்,"மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை பற்றிய விவரங்கள் தற்போது தான் தெரியவந்துள்ளன. இந்த குழந்தைக்கு தேவையான அனைத்து உதவிகளும், மாநில அரசு சார்பில் செய்யப்படும்' என்றார்.
No comments:
Post a Comment