Saturday, 15 October 2011

வாட்சன் அபாரம்: ஆஸி., வெற்றி


கேப்டவுன்: வாட்சன் அதிரடி கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் "டுவென்டி-20′ போட்டியில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட "டுவென்டி-20′ போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கேப்டவுனில் நடந்தது. "டாஸ்' வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் ஹாசிம் ஆம்லா "பேட்டிங்' தேர்வுசெய்தார்.
டுமினி ஆறுதல்:
தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஸ்மித் "டக்' அவுட்டாக, ஆம்லா (4) ரன் அவுட்டானார். பின் இணைந்த இங்ராம், டுமினி ஜோடி அணியை துவக்க சரிவில் இருந்து மீட்டனர். இங்ராம் 33 ரன்கள் எடுத்தார். மில்லர் (20) சற்று ஆறுதல் தந்தார்.
கடைசி வரிசையில் போத்தா (4), பீட்டர்சன் (6) அடுத்தடுத்து அவுட்டானர். உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டுமினி, 67 ரன்கள் (6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஸ்கோர் <உயர்வுக்கு வழி வகுத்தார். தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 146 ரன்கள் மட்டும் எடுத்தது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், 3 விக்கெட் வீழ்த்தினார்.
வாட்சன் அதிரடி:
எட்டிவிடும் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியின் வாட்சன், வார்னர் ஜோடி துவக்கம் கொடுத்தது. சாம்பியன்ஸ் லீக் தொடரில் அடுத்தடுத்து சதம் அடித்த வார்னர், "டக்' திரும்பினார். பின் மார்ஷுடன் இணைந்த வாட்சன், அதிரடியாக ரன்கள் சேர்த்தார். 39 பந்தில் 52 ரன்கள் எடுத்து வாட்சன் வெளியேறினார்.
மார்ஷ் (25), டேவிட் ஹசி (25), கேப்டன் காமிரான் ஒயிட் (28) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணியின் வெற்றி உறுதியானது. ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டீவன் ஸ்மித் (8), வாடே (1) அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து "டுவென்டி-20′ தொடரில் 1-0 என, ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது. இரு அணிகள் இடையிலான இரண்டாவது போட்டி, நாளை ஜோகனஸ்பர்க்கில் நடக்கவுள்ளது.

No comments:

Post a Comment