Wednesday, 21 March 2012

வீராட் கோஹ்லிக்கு காதல் தூது விடும் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே!


இந்திய கிரிக்கெட் அன்ணியின் துணை கேப்டன் வீராட் கோஹ்லியின் ஆட்டத்தை பாராட்டியுள்ள கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே தனது ட்விட்டர் இணையதளத்தில் அவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார்.விராத் கோஹ்லி இந்தியா விளையாடி வரும் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 183 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இதையடுத்து விராத் கோஹ்லியின் சிறப்பான ஆட்டத்தை சகவீரர்களும், முன்னாள் வீரர்களும் பாராட்டி வருகின்றனர். அதேபோல கவர்ச்சி மாடல் அழகியும், கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் ரசிகை பூனம் பாண்டே கோஹ்லியை பாராட்டி ட்விட்டர் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பூனம் பாண்டே ட்விட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது :

"என்ன ஒரு அருமையான ஆட்டம் விராத். நான் உன்னை காதலிக்கிறேன். நீங்கள் ஆடின ஆட்டத்தை பார்த்து நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த சிறப்பான ஆட்டத்தை நாங்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்போம்" என்று கூறியுள்ளார்.

இலங்கை தீர்மானத்தில் ஓட்டளிக்காமல் தி.மு.க., நழுவல்: அ.தி.மு.க., இடதுசாரிகள் கிடுக்கிப்பிடி

ஐ.நா., சபையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தி கொண்டு வந்த தீர்மானத்தை தி.மு.க., ஆதரிக்கவில்லை. மாறாக, தி.மு.க., எம்.பி.,க்கள் ராஜ்யசபாவில் வெளிநடப்பு செய்தனர்.ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் முடிவில், பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ராஜ்யசபாவில் பதிலளித்து பேசினார். பின்னர் ஜனாதிபதி உரையில் குறிப்பிட்ட, சில விஷயங்கள் மீது திருத்தம் கோரி எதிர்க் கட்சிகள் கொண்டு வந்திருந்த தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் குறித்த விவாதத்தில், அரசு வெற்றி பெற்றது. அதையொட்டி, எதிர்க் கட்சிகள் சபையில் வெளியேறிய பின், இலங்கைக்கு எதிராக ஐ.நா.,வில் கொண்டு வரப்படும் தீர்மானம் குறித்த விஷயம் வந்தது. மிக முக்கியமான இந்த தீர்மானம் அவையில் வந்த போது எதிர்க் கட்சி வரிசை முழுக்க காலியாக இருந்தது.பின்னர், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மற்றும் போர்க் குற்றங்கள் பற்றியும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கச்சத்தீவு விவகாரம் பற்றியெல்லாம் ஜனாதிபதி உரையில் திருத்தம் கோரி, ஐ.நா.,வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. அ.தி.மு.க., எம்.பி.,க்கள் மைத்ரேயன், பாலகங்கா, இளவரசன், ரபிபெர்னாட் ஆகிய நான்கு பேர் சபையில் இருந்தனர். தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.,யான ராஜா கொண்டு வந்திருந்தாலும், இதன் மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமென்பதில், அ.தி.மு.க., குறியாக இருந்தது.பரபரப்பு:இந்த சமயத்தில் தி.மு.க., எம்.பி.,க்கள் பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தனர். சட்டென எழுந்த திருச்சி சிவா, "பிரதமர் கூறியிருக்கின்ற வாக்குறுதியை முழுமையாக நம்புகிறோம். தவிர தீர்மானம் வர இன்னும் நாட்கள் உள்ளன. நல்லதே நடக்கும் என நம்புகிறோம்' என்றார். அ.தி.மு.க,, மற்றும் இடதுசாரிகள் கிடுக்கிப்பிடியில், தி.மு.க.,வின் நிலை
என்னவாக இருக்கும் என்ற பரபரப்பு கிளம்பியது.அவைத் தலைவர் ரகுமான்கான், "குரல் ஓட்டெடுப்பு மூலம் முடித்துக் கொள்ளலாம்' என, மைத்ரேயனிடம் கேட்டுப் பார்த்தார். ஆனால் நடக்கவில்லை.ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சர் வாசன் எழுந்து, "தமிழகம் அமைதியாக உள்ளது. மிக முக்கியமான இந்த பிரச்னையில், அரசியலை கலந்து மேலும் தீவிரமாக்குவதை அ.தி.மு.க., தவிர்க்க வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார். அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ஏற்க மறுத்து விட்டனர்.பிறகு காங்கிரஸ் எம்.பி.,யான ஞானதேசிகன் எழுந்து, "இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானம் குறித்து பிரதமர் தெளிவாக விளக்கி விட்டார். மிகுந்த திருப்தியளிக்கும் விதத்தில் இருந்த பிரதமரின் வாக்குறுதியை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே வரவேற்றுள்ளன. இச்சூழ்நிலையில்...' என தொடர ஆரம்பித்தார். அவ்வளவு தான்.அ.தி.மு.க., எம்.பி.,க்கள் ஆவேசமடைந்து விட்டனர்.
பாலகங்கா எழுந்து, "யார் சொன்னது அப்படி? பிரதமரின் அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அனைத்து கட்சிகளும் வரவேற்றன என எதை வைத்து கூறுகிறீர்கள். யார் உங்களுக்கு அந்த உரிமையை அளித்தது' என ஆவேசப்பட்டார். மற்றவர்களும் இவரோடு சேர்ந்து கடுமையாக குரல் கொடுத்தனர்.அந்த சமயத்திலும் மைத்ரேயனை பார்த்து துணைத் தலைவர் ரகுமான்கான் "ஓரிருவர் தானே உள்ளீர்கள். எதற்கு ஓட்டெடுப்பு' என கூறி, எவ்வளவோ சமாதானப்படுத்தினார். ஆனால், முற்றிலுமாக மறுத்த மைத்ரேயன் தொடர்ந்து, "இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் பிரதமர் அளிப்பது நழுவலான பதில். நேற்றும் நழுவினார். இன்றும் நழுவுகிறார். நாளையும் நழுவவே செய்வார். போர்க் குற்றங்கள் என்று கூட குறிப்பிடாமல் மனித உரிமை மீறல் என மழுப்புவதை அ.தி.மு.க., ஏற்காது. தீர்மானம் தோற்றாலும் கூட பரவாயில்லை. தமிழ் மக்களின் உணர்வுப்பூர்வமான பிரச்னை. இதில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். இங்குள்ளவர்களின் உண்மை முகங்கள் உலகத்திற்கு தெரிய வேண்டும். ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். நான் தீர்மானத்தை ஆதரித்து ஓட்டுப் போட்டாக வேண்டும்' என்று ஆவேசமானார்.பங்கேற்கவில்லை15 நிமிடங்களுக்கும் மேலாக இந்த களேபரங்கள் நடந்தன. அவையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் இருந்தார். இறுதியில் ஓட்டெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத தி.மு.க., எம்.பி.,க்கள் சிவா, கனிமொழி, செல்வ கணபதி, ராமலிங்கம், வசந்தி ஸ்டான்லி உள்ளிட்டோர் அவையை விட்டு நழுவி வெளியேறினர். காரணம் ஏதும் கூறவும் இல்லை. ஓட்டெடுப்பின் முடிவில் தீர்மானத்திற்கு ஆதரவாக ஒன்பது ஓட்டுகளும், எதிர்ப்பாக 84 ஓட்டுகளும் விழுந்தன.தி.மு.க., ஆதரிக்காதது ஏன்? ராஜ்யசபாவில் நேற்று இலங்கை குறித்த மிக முக்கியதீர்மானம் கொண்டு வரப்பட்டதும், அதில் தி.முக., பங்கேற்காமல் தவிர்த்தது குறித்து, அ.தி.மு.க.,வின் ராஜ்ய சபா தலைவர் மைத்ரேயன் தெரிவித்த கருத்து:போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்பது தான் தமிழர்களின் கோரிக்கை. இந்த மையப் புள்ளியை விட்டு தந்திரமாக நழுவுகின்றன காங்கிரசும், தி.மு.க.,வும். போர்க் குற்றங்கள் குறித்த திருத்தங்கள் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்தும், கச்சத் தீவை மீட்பது குறித்தும் ஜனாதிபதி உரையில் கேட்ட திருத்தத்தை தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எம்.பி.,க்கள் ஆதரிக்க வேண்டுமா, வேண்டாமா?இன்று தி.மு.க., புறக்கணித்து ஓடி விட்டது. பிரதமரின் அறிக்கையை பார்த்து விட்டு நேற்று வெற்றி... வெற்றி... வெற்றி... என சந்தோஷத்தில் கூத்தாடியவர்கள் இன்று தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும் அல்லவா? ஏனிந்த இரட்டை வேடம்?இந்த ஓட்டெடுப்பில் பிரதமர் மட்டுமல்ல, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஞானதேசிகன், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரும் அவையில் இருந்து திருத்தத்திற்கு எதிராக ஓட்டுப் போட்டுள்ளனர்.இவ்வாறு மைத்ரேயன் கூறினார்

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. அமோக வெற்றி; தி.மு.க., ம.தி.முக., தே.மு.தி.க., பா.ஜ., டெபாசிட்டை இழந்துள்ளன




சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 94,977 ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். தி.மு.க. வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார் 26,220 ஓட்டுகள் பெற்றது. ம.தி.மு.க. வேட்பாளர் திருமலைக்குமார் 20,678 ஓட்டுகளும், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் 12,144, பா.ஜ. வேட்பாளர் முருகன் 1,633 ஓட்டுகளும் பெற்றனர்.

5வது முறை : அ.தி.மு.க. கட்சி, இத்தொகுதியில் வெற்றி பெறுவது 5வது முறை என்பது குறிப்பிடத்தக்கது

தி.மு.க. டெபாசிட் காலி : அ.தி.மு.க.வைத் தவிர மற்ற கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க கட்சிகள் டெபாசிட்டை இழந்துள்ளன.

தே.மு.தி.க. 4வது இடம் : இந்த தேர்தலில், தே.மு.தி.க. கட்சி வேட்பாளர் முத்துக்குமார் 12,144 ஓட்டுகள் பெற்றுள்ளார். இதன்மூலம், இவர் 4வது இடம் பெற்றுள்ளார்.

வேட்பாளர் பெற்ற ஓட்டுகள்

வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற ஓட்டுகள்

01. முத்துச்செல்வி அ.தி.மு.க 94,977

02. ஜவஹர் சூரியகுமார் தி.மு.க. 26,220

03. சதன் திருமலைக்குமார் ம.தி.மு.க 20,678

04. முத்துக்குமார் தே.மு.தி.க 12,144

05. முருகன் பா.ஜ. 1,633

06. நாகேஸ்வர ராவ் சமாஜ்வாடி 277

07. கணேசன் சுயேட்சை 355

08. அய்யனு சுயேட்சை 152

09. ஆறுமுகம் சுயேட்சை 220

10. உடையார் சுயேட்சை 300

11. சங்கர் சுயேட்சை 377

12. பெருமாள் சுயேட்சை 1,324

13. வெள்ளைத்துரை சுயேட்சை 1,115