Saturday, 17 March 2012

என்னை சீண்டினால் பல உண்மைகளை வெளியிடுவேன்: விஜயகாந்த்

 
 
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்து, பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
 
அப்போது அவர், ''அண்ணா நூலகத்திற்கு தீக்குளிப்பதாக கூறும் கருணாநிதி, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம்.
 
 
ஓட்டுக்காக இங்கு வந்து நடித்து சென்றுள்ளார். ஜெ., முன்னால், 'ஆமாம்' போட என்னால் முடியாது.
 
32 அமைச்சர்கள் தேர்தல் பணிக்கு வந்த போதே, என் வேட்பாளர் ஜெயித்துவிட்டார். தொண்டர் யாரும் மனம் தளர வேண்டாம். அ.தி.மு.க., கூட்டணியில் எனக்கு விருப்பமில்லை. சேலத்தில் தொண்டர்கள் கூறியதால், ஒப்புக்கொண்டேன்.
 
நான் பேரம் பேசியதாக அவர்களால் கூறமுடியுமா? சட்டசபையில், 10 நாட்கள் தானே "சஸ்பென்ட்' செய்துள்ளார்கள். அதன் பின் நிச்சயம் வருவேன்.
 
நீங்கள் தவறு என நினைக்கும் அதே தவறை, மீண்டும் செய்வேன். என்னுடைய தலைவர் எம்.ஜி.ஆர்.,ன் கட்சி என்பதால், இத்தனை நாள் அமைதி காத்தேன்.
 
என்னை சீண்டினால், பல உண்மைகளை வெளியிடுவேன். நானும் சினிமாவில் இருந்தவன் என்பதால்! தேர்தல் பணிக்கு அனுப்பியது போல, கடலூர் தானே புயலுக்கு, அமைச்சர் படையை அனுப்பியிருக்கலாமே'' என்றார்.



பணம் குடுத்தாதான் ஓட்டுப்போடுவோம்! - சங்கரன்கோவில் பெண் வாக்களாளர்கள்

 
 
 
ஓட்டுக்கு பணம் வழங்க கோரி அதிமுக தேர்தல் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென முற்றுகையிட்டதால் சங்கரன்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
 
பணம் கொடுக்காவிட்டால் அதிமுகவிற்கு ஓட்டுபோடமாட்டோம் என்று அவர்கள் கூறியதால் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து அலுவலகத்தை விட்டு வெளியேறினர்.
 
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலை ஓட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா கடந்த சில நாட்களாக ஜாரூராக நடந்து வருகிறது. குறிப்பாக பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வார்டில் 1700 வாக்காளர்கள் உள்ள நிலையில் 3 பேருக்கு மட்டுமே பண பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்ததால் அந்த வார்டு பொறுப்பில் உள்ள அதிமுக உயர் மட்ட நிர்வாகிகளும், அப்பகுதி கட்சியினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
 
வியாழக்கிழமை இரவு முதல் நகர் பகுதி முழுவதும் வார்டு வார்டாக அப்பகுதியில் பொறுப்பில் உள்ள அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக எதிர்கட்சியினர் கூறினர்.
 
ஓட்டுபோட மாட்டோம்
 
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருவேங்கடம் ரோட்டில் உள்ள அதிமுக தேர்தல் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென முற்றுகையிட்டனர். அங்கு முக்கிய நிர்வாகிகள் யாரும் இல்லாத நிலையில் அங்கிருந்த அதிமுகவினரிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
எங்களுக்கு ஒரு ஓட்டுடக்கு கூட பணம் வழங்கவில்லை. எங்கள் பகுதிக்கு பணம் கொடுக்காவிட்டால் அதிமுகவுக்கு யாரையும் வாக்களிக்க விடமாட்டோம் என்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் அலுவலகத்தை விட்டு வெளியேறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.