Friday, 9 March 2012

தேவர் சிலை அவமதிப்பு - கடப்பாரையால் தாக்கப்பட்டுள்ளது-பதற்றம்


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகாமையில் உள்ள மட்டப்பாறை கிராமத்தில் ஐம்பது ஆண்டு பழமை வாய்ந்த தேவர் சிலை கடப்பாரையால் தாக்கப்பட்டு சேதமாகி உள்ளது.


இதை கண்டித்தும் விசமிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் தேவர் பேரவை இளைஞர் அணியினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக நமது செய்தியாளர் அளித்த செய்தி " ஒரே கல்லிலான பழமையான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை சில விசமிகளால் கடப்பாரை கொண்டு தாக்கப்பட்டுள்ளது. கால்பகுதியில் இடிக்கப்பட்டுள்ளதால் சிலையை சீரமைப்பது சாத்தியம் இல்லாமல் இருக்கின்றது . தேவர் பேரவை இளைஞர் அணியினரும் பொதுமக்களும் சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு அதே இடத்தில் உடனே சிலை வைக்க ஆவணம் செய்ய வேண்டும் என்றும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது. கோசங்கள் எழுப்பப் படுகின்றது" இது தொடர்பாக தேவர் பேரவை இளைஞர் அணியின் திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளரை தொடர்பு கொண்டபோது " தேவர் சமூக மக்களுக்கு பலதரப்பட்ட சாதகமான உதவிகளை செய்துவரும் அ தி மு க அரசுக்கு கேடு விளைவிக்கும் விசமிகளை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றும் , அரசு உடனே தலையிட்டு சட்ட ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

மே 11-ல் நடிகை சினேகா - பிரசன்னா திருமணம்

 
 
 
நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் சென்னையில், மே மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெறுகிறது.
 
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்ததன் மூலம் காதலர்களாக மாறியவர்கர்கள் நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும்.
 
இந்தப் படத்துக்காக சில தினங்கள் இருவரும் ஒரே வீட்டில் தங்க நேர்ந்தபோது காதல் மலர்ந்ததாம். இந்தக் காதல் குறித்து இருவரும் மவுனம் காத்தனர் ஆரம்பத்தில். ஆனால் பின்னர் கவுரவமாக ஒப்புக் கொண்டனர்.
 
2 மாதங்களுக்கு முன்பு பிரசன்னா, "எனக்கும், சினேகாவுக்கும் இடையே காதல் இருப்பது உண்மைதான். நாங்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். எங்கள் இரண்டு பேரின் பெற்றோர்களும் சந்தித்துப்பேசி, திருமணத்தை முடிவு செய்வார்கள்'' என்று கூறினார்.
 
அப்போது, சினேகா அமெரிக்காவில் இருந்தார். பிரசன்னாவின் காதல்-திருமண அறிவிப்பை அவர் மறுக்கவில்லை. பகிரங்கமாக அறிவிக்கவும் இல்லை. பின்னர் பத்திரிகைப் பேட்டிகளில் ஆமாம் திருமணம் உண்மைதான் என்று சினேகா கூறினார்.
 
கடந்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி காதலர் தினத்தன்று இருவரும் ஜோடியாக பத்திரிகைகளுக்கு 'போஸ்' கொடுத்து காதலை உறுதிப் படுத்தி, பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டார்கள்.
 
இந்த நிலையில், சினேகாவின் பெற்றோர்களும், பிரசன்னாவின் பெற்றோர்களும் சமீபத்தில் சந்தித்து சினேகா-பிரசன்னா திருமணத்தை நிச்சயம் செய்தார்கள். அதன்படி, இருவருக்கும் வருகிற மே 11-ந் தேதி, சென்னை வானகரம் அருகில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், திருமணம் நடக்கிறது.
 
திருமணத்துக்கான வேலைகள் இப்போதே தொடங்கி விட்டன.
 
"திருமணத்துக்குப்பின், சினேகா விரும்பினால் நடிக்கலாம். விரும்பவில்லை என்றால் நடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம். அதில், நான் தலையிட மாட்டேன். வாழ்க்கை வேறு, தொழில் வேறு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்'' என்று ஏற்கெனவே பிரசன்னா கூறியிருந்தார்.
 
எனவே சினேகாவுக்கு நடிப்பை நிறுத்தும் ஐடியா இல்லையாம். புதிதாக மேலும் படங்களை ஒப்புக் கொண்டு வருகிறார்.



விமர்சனங்கள்... கவுதம் மேனன் கோபம்!

 
 
 
பத்து முட்டாள்கள் சேர்ந்து ஒரு படத்தை தோல்யடைய வைத்துவிடலாம், ஆனால் ஒரு படைப்பாளியின் பயணத்தைத் தடுத்துவிட முடியாது, என்கிறார் இயக்குநர் கவுதம் மேனன்.
 
ஏன் இத்தனை கோபம்?
 
எல்லாம் விண்ணைத்தாண்டி வருவாயா இந்தியில் சரியாகப் போகாததுதான். ஏஆர் ரஹ்மான் இசையில் ஏக் தீவானா தா என்ற பெயரில், வெளியான இந்தப் படம், பெரிய வரவேற்பைப் பெறவில்லை. கடுமையான விமர்சனங்கள் வேறு.
 
இதுகுறித்து தனது டிவிட்டர் இணையத்தில் "விமர்சகர்களைப் பற்றி கவலை இல்லை. அவர்கள் தங்களது வேலையை செய்கிறார்கள். எப்போதுமே என் படங்களுக்கு நல்லபடியான விமர்சனங்கள் வந்ததில்லை" என்று கூறியிருந்தார் கவுதம்.
 
ஆனால் அப்படியும் விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் ஓயவில்லை. இதனால் கடுப்பான கவுதம் மேனன், "பத்து முட்டாள்கள் சேர்ந்து ஒரு படத்தின் வெற்றியைத் தடுத்துவிடலாம். ஆனால் ஒரு படைப்பாளியின் பயணத்தை தடுத்துவிட முடியாது.. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.. " என்று கூறியுள்ளார்.
 
கெளதம் மேனன் இயக்கத்தில் 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவர இருக்கிறது. இளையராஜா இசையமைக்கிறார்.
 
விடுங்க கவுதம்... ஏக் தீவா தா தோல்வியை இந்த வசந்தம் ஈடுகட்டிவிடும்!