Friday, 2 March 2012

பரீட்சை நேரம்... பாஸாகுமா அரவான்?

 
 
இந்த வாரம் கோடம்பாக்கத்தில் அரவான், கொண்டான் கொடுத்தான் மற்றும் யார் என மூன்று படங்கள் வெளியாகின்றன.
 
இவற்றில் பெரும் எதிர்ப்பார்ப்புக்குரிய படமாகத் திகழ்வது வசந்தபாலனின் அரவான். வரலாற்றுப் படம்.
 
வீ சேகரின் உதவி இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான ராஜேந்திரன் இயக்கியுள்ள படம் கொண்டான் கொடுத்தான். வீ சேகர் பாணியிலான கிராமத்துக் குடும்பக் கதை.
 
மூன்றாவதாக வரும் 'யார்' ஒரு டப்பிங் த்ரில்லர் படம்.
 
அரவானுக்கு எந்த வகையிலும் போட்டியைத் தராத படங்கள் மற்ற இரண்டும். ஆனால் அரவான் எதிர்கொள்ள வேண்டிய பெரும் பிரச்சினை, பனிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வுதான். மற்ற வகுப்புகளுக்கும் கூட இன்னும் சில தினங்களில் பரீட்சே தொடங்கிவிடும். எனவே இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டுள்ளது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
அதேநேரம், வரும் கோடையில் பெரிய படங்கள் வரிசையாக களமிறங்கக் காத்துள்ளன. அந்தப் போட்டியில் சிக்காமல், தனித்து நிற்க இந்த மார்ச் முதல்வார ரிலீஸ் உதவும் என தயாரிப்பாளரும் இயக்குநரும் கருதுகிறார்கள்.
 
பரீட்சையில், அரவான் பாஸாகிவிடுவானா... பார்க்கலாம்!



சென்னையில் மாபெரும் பேரணி: சீமான்

 

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையின் மனித உரிமைகளுக்கான சிறப்புத் தூதர் மகிந்த சமரசிங்கே, ஐ.நா. மனித உரிமை மாமன் றத்தில் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணைத் தீர்மானம் கொண்டு வரப்படும்போது அதனை எதிர்த்தும், இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் இந்தியா வாக்களிக்கும் என்று கூறியுள்ளார். இதற்கு மத்திய அரசோ அல்லது ஐ.நா. மனித உரிமை மாமன்றத்திற்கான இந்தியப் பிரதிநிதியோ எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காதது ஐயத்தை ஏற்படுத்துகிறது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் தமிழருக்கு எதிரான போர் முடிந்த கையோடு கூடிய ஐ.நா. மனித உரிமை மாமன்றத்தில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இலங்கைப்போரில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து இலங்கையே விசாரிக்க வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து இந்தியப் பிரதிநிதி கோபிநாத் அச்சங்குளங்கரே வாக்களித்தார்.

இதனால் தீர்மானம் தோற்றது. அதுபோல் இப்போதும் இலங்கை அரசைக் காப்பாற்ற இந்திய அரசு திட்டமிட்டுள்ளதா? என்பதை நாட்டு மக்களுக்கு விளக்கவேண்டும்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க, இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது. இந்திய அரசுக்கு இதையே கோரிக்கையாக வைத்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்படவுள்ளது. எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் இருந்து புறப்பட்டு காந்தி இர்வின் பாலத்தில் முடிவடையும்.

இந்தப் பேரணியை இயக்குனர் மணிவண்ணன் தொடங்கி வைக்கிறார். பேரணிக்குப்பிறகு மாலை 6 மணிக்கு புரசைவாக்கம், தாணா தெருவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சீமான் கோரிக்கை உரை நிகழ்த்துகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.