Thursday, 9 February 2012

நான் என்ன கிழவனா? அரவிந்தசாமி கோபம்!

 
 
 
அப்பா வேடத்தில் நடிக்கும் அளவுக்கு நான் என்ன கிழவன் ஆகி விட்டேனா? என்று நடிகர் அரவிந்தசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் கதாநாயகி சமந்தாவின் அப்பாவாக அரவிந்த்சாமி நடிக்கப் போகிறார் என்று கோடம்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மணிரத்னம் தரப்பு இதனை மறுக்காத நிலையில், சம்பந்தப்பட்ட நடிகர் அரவிந்தசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், அப்பா வேடத்தில் நடிக்கும் அளவிற்கு நான் கிழவனாகிவிட்டேனா? இப்படியெல்லாம் குருட்டுத்தனமாக யோசிக்க சிலரால் எப்படி முடிகிறது? நான் எந்த வேடத்திலும் நடிப்பதாக இல்லை. மணிரத்னம் என்னை அணுகவில்லை. ஒருவேளை அவரே கேட்டிருந்தாலும் நடித்திருக்க மாட்டேன். இப்போது நான் தொழிலதிபராக இருக்கிறேன். எனக்கு இனி தொழில்களைக் கவனிப்பதுதான் முதலும் கடைசியுமான வேலை, என்று கூறியிருக்கிறார்.



சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன்: விஜய் பேட்டி

 
 
 
சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பேன் என்று நடிகர் விஜய் கூறினார். நடிகர் விஜய் நடித்துள்ள நண்பன் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. மதுரையில் நண்பர் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் தோன்றினார். அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியிலும் பேசினார்.
 
இதையடுத்து மதுரை காளவாசலில் உள்ள ஓட்டலில் நடந்த விழாவில் கே.கே.நகரில் உள்ள "ஷைன்" மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவ-மாணவிகளுடன் நடிகர் விஜய் கலந்துரையாடினார். அப்போது மாணவர் அசோக்தான் வரைந்த ஓவியத்தை நடிகர் விஜய்க்கு வழங்கினார். விழாவில் ஆதரவற்ற பெண்கள் 2 பேருக்கு தொழில் தொடங்க நிதி உதவியை விஜய் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
கே. கடந்த சட்டசபை தேர்தலின்போது ஒரு அரசியல் கட்சியை ஆதரித்தீர்கள். நீங்கள் நேரடியாக அரசியலுக்கு வருவது எப்போது?
ப. அரசியல் சம்பந்தமான கேள்விகள் இப்போது வேண்டாம். தற்போது சினிமா பற்றி மட்டும் பேசலாம்.
 
கே. "நண்பன்" படம் மாதிரி மீண்டும் 2 கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா?
ப. இந்த படத்தின் கதை போல அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை தான் ஹீரோ. நாங்கள் அதற்கு பின்னணியில் தான் உள்ளோம்.
 
கே. நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?
ப. படத்திற்கு கதைதான் முக்கியம். அதுபோல ஒரு கதை அமைந்தால் நிச்சயம் இணைந்து நடிப்பேன்.
 
கே. நீங்கள் தற்போது நடிக்கும் படம் எது?
ப. "துப்பாக்கி" என்ற படத்தில் நடித்து வருகிறேன். அதுவும் சிறப்பாக அமையும்.
 
கே. தமிழ் சினிமாவில் புதுமுகங்கள் நடித்து குறைந்த பட்ஜெட்டில் வெளிவரும் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. அது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப. நிச்சயம் அது வரவேற்கத்தக்கது. நானும் ஒரு காலத்தில் புதிய நாயகன்தான். இவ்வாறு அவர் கூறி னார்.
 
விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், ரசிகர்மன்ற மாவட்ட தலைவர் எஸ்.ஆர். தங்கப்பாண்டியன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



ஓவர் லிப்-டூ-லிப் முத்தக்காட்சி :அர்ஜூன் படத்திற்கு 14கட்!!

 
 
 
டினு வர்மா இயக்கத்தில், அர்ஜூன் நடித்து வரும் காட்டுபுலி படத்தில், ஓவர் லிப் - டூ - லிப் காட்சிகள் இருந்ததால் 14 கட் கொடுத்துள்ளனர் சென்சார் போர்டு அதிகாரிகள். பிரபல பாலிவுட் சண்டை இயக்குநர் டினு வர்மா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இயக்கி வரும் படம் காட்டுபுலி. இப்படத்தில் நாயகனாக அர்ஜூனும், அவருக்கு ஜோடியாக பியங்கா தேசாயும் நடித்துள்ளனர். கூடவே இவர்களுடன் ராஜ் நீஸ் சாயாலி பகத், அமீத்- ஹன்யா, ஜாஹன் ஜெனிபர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
சமூகத்தைப் பாதுகாக்கும் முக்கியமான மூன்று துறைகளில் ஒன்றான மருத்துவத்துறையில் நுழையும் புல்லுருவிகளால், சமூகத்திற்கு எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்படுகிறது என்று அலசியிருக்கிறார் இயக்குனர் டினு வர்மா.
 
முழுக்கமுழுக்க நரமாமிசம் உண்பவர்கள், மனிதர்களை வேட்டையாடும் காட்சிகள் போன்றவை திரைப்பட ரசிகர்களுக்கு திகிலுடன் கூடிய புது அனுபவமாக இருக்கும். தனது மனைவி குழந்தையுடன் காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் டாக்டர் அர்ஜூனுக்கு உதவி செய்ய வரும் மூன்று ஜோடிகள், அதனைத் தொடர்ந்து ஏற்படும் பரபரப்பான சம்பவங்கள், கொலைகள், அதிலிருந்து எப்படி அனைவரையும் அர்ஜூன் காப்பாற்றுகிறார் என்பதே காட்டுப் புலியின் விறுவிறுப்பான கதை.
 
படத்தில் நிறைய திகில் காட்சிகளை வைத்திருக்கும் டைரக்டர் கூடவே நிறைய கிளுகிளு காட்சிகளையும் அதிகமாக வைத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஜாஹன் ஜெனிபர் ஜோடிக்களுக்கு இடையே வரும் லிப் டூ லிப் முத்துக்காட்சியை பார்த்த சென்சார் போர்டு 14 ‌கட் கொடுத்திருக்கிறது. அந்தளவிற்கு படத்தில் கிறங்கடிக்கும் காட்சிகள் இருந்திருக்கிறது. சென்சார் போர்ட்டின் இந்த நடவடிக்கை டைரக்டருக்கு ஒருவிதம் வருத்தம் அளித்தாலும், அனைத்து தரப்பினரும் படத்தைப் பார்த்து ரசிக்கவேண்டும் என்கிற எண்ணத்தில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்.
 
டினு வர்மா தனது, கிபிஷேக் பிலிம்ஸ் சார்பாக தயாரித்து இருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.



விஜய்யை போட்டு தாக்கும் அஜித்

 
 
தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு தெரியாத அரசியலில் எதுக்கு இறங்கணும் என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத்.
 
ரஜினிக்கு அடுத்து, அடிக்கடி அரசியலுக்கு வரப் போகிறார் என கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர் அஜீத். அதற்கேற்பத்தான் அவரது நடவடிக்கைகளும் கடந்த காலங்களில் இருந்து வந்தன.
 
அதே நேரம் க்யூவில் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியலை நிறுத்திக் கொள்வது அவர் வழக்கம்.
 
இந்தநிலையில் எதிர்காலத்தில் அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.
 
அவர் கூறுகையில், "ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.
 
எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!'' என்று கூறியுள்ளார்.




கோச்சடையானுக்காக 'ரேஸ் 2' படத்தை கைவிட்ட தீபிகா: எரிச்சலில் படக்குழு

 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையானில் நடிப்பதற்காக தான் நடித்துக் கொண்டிருந்த ரேஸ் 2 படத்தில் இருந்து திடீர் என்று ஜகா வாங்கிய பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் செயல் நெறிமுறையற்றது என்று அப்படத்தின் தயாரிப்பாள்ர ரமேஷ் தெரிவித்துள்ளார்.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்தின் கதாநாயகியாக தீபிகா படுகோனே அறிவிக்கப்பட்டார். எப்படா ரஜினி கூட நடிப்பது என்று காத்துக் கொண்டிருந்த அவர் இந்த அறிவிப்பு வெளியானதும் தான் நடித்துக் கொண்டிருந்த ரேஸ் 2 படத்தில் இருந்து திடீர் என்று வெளியேறினார். தனது செயலுக்கு வருத்தமும் தெரிவிக்கவில்லை. மேலும் இது குறித்து அவரிடம் பேச வந்த தயாரிப்பாளர் ரமேஷின் வார்த்தைகளைக்கும் அவர் மதிப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
 
இது குறித்து தயாரிப்பாளர் ரமேஷ் கூறியதாவது,
 
நான் 25 ஆண்டுகளாக பாலிவுட்டில் இருக்கிறேன். பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளேன். ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப், வித்யா பாலன், கரீனா கபூர் போன்ற பிரபல நடிகைகளை வைத்து படம் எடுத்துள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு சூழல் இதுவரை ஏற்பட்டதில்லை. கடந்த நவம்பர் மாதம் படப்பிடிப்பை நடத்தலாம் என்று பார்த்தால் தீபிகா கரண் ஜோஹார் தயாரிக்கும் அயன்முகர்ஜியின் படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் அவருக்கு டேட் பிரச்சனை இருந்தது. இதையடுத்து நான் கரணிடம் பேசி 2 படங்களிலுமே தீபிகா நடிக்க ஏதுவாக நேரம் ஒதுக்க வழிவகை செய்தேன்.
 
தற்போது 6 நாட்கள் ஷூட்டிங் வந்துவிட்டு படத்தில் இருந்து விலகிவிட்டார். இயக்குனர்களும், பிற நடிகர்களும் இதனால் எரிச்சல் அடைந்துள்ளனர். இது குறித்து பேச குர்லாவில் நடந்த தீபிகாவின் ஷூட்டிங் ஸ்பாடுக்கு சென்றேன். நான் பேசியதை அவர் காதில் வாங்கவில்லை. தன் செயலுக்காக வருத்தப்படவும் இல்லை என்றார்.
 
ரஜினியின் ராணா பட நாயகியாக தீபிகா அறிவிக்கப்பட்டார். சூப்பர் ஸ்டாரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அந்த படம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



''என்று தணியும் இந்த மின்சார தாகம்?'': விஜயகாந்த்

 
 
தமிழகத்தில் ''என்று தணியும் இந்த மின்சார தாகம்'' என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அரசு இதை உணருமா? மக்களுக்கு பரிகாரம் விரைவில் கிடைக்குமா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்ற நிலை தான் உள்ளது. விவசாயத்திற்கு மின்சாரம் கிடைக்கவில்லை. பின்னர், மகசூலை எப்படி அதிகரிக்க முடியும்?.
 
தினசரி 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று சொன்னாலும், அது பல மணி நேரம் நீடிக்கிறது என்பதுதான் உண்மை. சிறு, குறுந்தொழில் பாதுகாப்பு நலச்சங்கத் தலைவர் மின்வெட்டால் தினமும் ரூபாய் 400 கோடிக்கு உற்பத்திக்கு இழப்பு என்று அறிக்கை தருகிறார். கடனை வாங்கி விவசாயத்திலோ, தொழிலிலோ முதலீடு செய்து விட்டு மக்கள் தவிக்கின்றனர்.
 
பள்ளிக்கூடப் பிள்ளைகள் படிப்பதில் இருந்து, கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து தொழில்களை துவங்கி விட்டு மின்சாரம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் திகைக்கின்ற அளவில் பரிதாப நிலைதான் ஏற்பட்டுள்ளது.
 
அண்டை மாநிலங்களில் இருந்தும், அன்னிய நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டில் மூலதனம் போட்டு தொழில்களை துவங்குவதற்கு கூட மின்சாரப் பற்றாக்குறையால் தயங்குகின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள தொழில்களை விரிவாக்கம் செய்பவர்கள் கூட வேறு மாநிலங்களுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் நாளும் பெருகி வருகிறது.
 
கடந்த ஆகஸ்ட் முதல் மின்வெட்டே இருக்காது என்று முதல்வர் கூறினார். இப்போது அவர் அடுத்த ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின்பற்றாக்குறை நீக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
 
மின்சாரமே கிடைக்காத சூழ்நிலையில் மின்சாரக் கட்டணத்தை அபரிமிதமாக உயர்த்துவதற்கு ஜெயலலிதா அரசு பரிந்துரைத்துள்ளது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இதுபற்றி பொது மக்களிடம் கருத்து கேட்கிறது.
 
கருத்துக் கேட்பு கூட்டங்களில் பொது மக்கள் ஆவேசப்படுவதும், அதிகாரிகள் பொது மக்களை சந்திக்க பயப்படுவதும், போலீஸ் காவலை வைத்துக் கொண்டுதான் பொது மக்கள் குறை கேட்கும் கூட்டங்களை நடத்த வேண்டி உள்ளது என்பதும் இன்றுள்ள தத்ரூபமான நிலைமை.
 
''என்று தணியும் இந்த மின்சார தாகம்'' என்ற புதிய முழக்கம் எங்கும் ஒலிக்கிறது. ஜெயலலிதா தலைமையிலான அரசு இதை உணருமா? மக்களுக்கு பரிகாரம் விரைவில் கிடைக்குமா?
 
இவ்வாறு விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




மளிகை கடையில் திருடிய தே.மு.தி.க நிர்வாகிக்கு கட்டிவைத்து அடி உதை

 
 
 
சேலம் மாவட்டம், ஆத்தூர் பக்கத்தில் உள்ளது பைத்தூர் என்ற கிராமம். இந்த கிராமத்தை சுற்றிலும் உள்ள வீடுகளின் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், ஆட்டுக்குட்டிகள், கோழி போன்றவைகளும் தோட்டங்களில் இருக்கும் மின் மோட்டார்களும் அடிக்கடி காணமல் போய்க்கொண்டிருந்தன.
 
இந்த திருட்டு கும்பலை பிடிக்க முடிவு செய்த கிராமத்து மக்கள் உள்ளூரில் உள்ள இளைஞர்களை ஓன்று திரட்டி பாதுகாப்பு குழு ஒன்றை அமைத்தனர். இந்த குழுவினர் இரவு நேரங்களில் கிராமத்தின் முக்கியமான இடங்களில் எல்லாம் மறைந்திருந்து கண்காணித்து வந்தனர்.
 
 
கடந்த 7ஆம் தேதி இரவு பைத்தூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள கிருஸ்ன மோகன் என்பவரின் கடையின் கூரையை பிரித்துக்கொண்டு நான்கு பேர் கடைக்குள் இறங்குவதை பாதுகாப்புக்கு மறைந்திருந்த ஒருவர் கவனித்து விட்டார்.
 
 
தனி ஆளாக நின்று திருடர்களுடன் சண்டை போடமுடியாது என்று முடிவு செய்த அந்த பாதுகாப்பு குழுவை சேர்ந்த நபர். அந்த கிராமத்தின் மற்ற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் தனது சகாக்களுக்கு குறுந்தகவல் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.
 
 
பத்து நிமிடங்களில் இருபதுக்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் அந்த இடத்துக்கு வ்ந்து விட்டனர். கடைக்குள் இறங்கிய திருடர்கள் வெளியே வரும் வழியில் காத்திருந்தனர்.
 
 
பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை மற்றும் உணவுப்பொருட்களை திருடிக்கொண்டு கடையை விட்டு வெளியே வந்த நான்கு போரையும் பிடித்து அடித்து உதைத்து மின்கம்பத்தில் கட்டிப்போட்டனர்.
 
 
இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 30) மணிகண்டன் (21) சிவா (18), பன்னீர் (18) என்பது தெரிய வந்தது. இந்த திருட்டு விவகாரங்களில் முக்கிய பக்குகொண்டிருந்த குமார் பைத்தூர் கிளை தே.மு.தி.க பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
பகலிலேயே பொது மக்களின் சொத்தை கொல்லையடிப்பது தான் அரசியல்வாதிகளின் தொழில் என்பது தே.மு.தி.க.வில் இருக்கும் குமாருக்கு தெரியவில்லை.



அந்த' மாதிரி பெண்களுக்காக செலவு செய்யும் ப.சி: சு.சாமி'!

 
 
 
கர்நாடக அமைச்சர்கள் 3 பேர் சட்டசபையில் ஆபாச வீடியோ பார்த்த பரபரப்பே அடங்காத நிலையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக அவர் மாதம் எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை கேட்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.
 
இது குறித்து சாமி இன்று காலை 8.58 மணியளவில் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ஆபாச படம் பார்த்த விவகாரத்தில் பாஜகவை குறை கூறும் சிபல் போன்ற காங்கிரஸார் உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக பி.சி. மாதம் எவ்வளவு பணம் செலவு செய்கிறார் என்பதை கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். (Swamy39: "Those Congis like Sibal who paint BJP with porn should ask how much PC pays per month for Uzbekis").
அரசியல் வட்டாரங்களும், ஊடகங்களும் ப. சிதம்பரத்தை பி.சி. என்று அழைப்பதுண்டு.
 
குற்றச்சாட்டு என்ற பெயரில் சாமி எழுதியுள்ள இந்த ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
\


சென்னையில் பயங்கரம்: வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை- 9-ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்

 
 
 
சென்னை மண்ணடியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது 42). இவர் பாரிமுனை ஆர்மேனியன் தெருவில் உள்ள செயிண்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இன்று பகல் 12 மணியளவில் 10-ம் வகுப்பில் இந்திப்பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது 9-ம் வகுப்பில் படிக்கும் முகமது இர்பான் என்ற மாணவன் திடீரென வகுப்பறையில் புகுந்தார்.
 
மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியை நோக்கி ஆவேசத்துடன் ஓடினான். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த உமா மகேஸ்வரி அவனிடம் இருந்து தப்பிப்பதற்காக வகுப்பறையை விட்டு வெளியே ஓடினார். ஆனால் வெறி பிடித்தவன்போல் துரத்தியபடி முகமது இர்பான் விரட்டினான்.
 
வகுப்பறை வாசலிலேயே ஆசிரியை உமா மகேஸ்வரியை சரமாரியாக குத்தினான். இதில், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த ஆசிரியை உமா மகேஸ்வரி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.
 
அதைப்பார்த்ததும் வகுப்பறைகளில் இருந்த மற்ற மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் மாணவன் இர்பான் தப்பி ஓட முயன்றான். ஆனால் அவர்கள் அவனை மடக்கிப் பிடித்தனர். பள்ளி வளாகத்திலேயே மாணவனால் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவன் இர்பானை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மாணவன் இர்பான் ஒழுங்காக படிப்பதில்லை.அவனது படிப்பு குறித்த பதிவேட்டிலும் சரியாக படிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. இதனால் ஆசிரியை உமா மகேஸ்வரி இர்பானை கண்டித்தார். இதனால் இர்பான் ஆசிரியை மீது கடும் கோபத்தில் இருந்தான். அவரை பழி வாங்க திட்டமிட்டு இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
 
பலியான உமா மகேஸ்வரியின் உடலில் கழுத்து உள்பட 5 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது.அவருக்கு கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

 


எதிர்கட்சி ஆளும் மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது: இயக்குனர் சீமான் ஆவேசம்

 

புதுவை நாம் தமிழர் கட்சியின் சார்பில் தானே புயலால் பாதிக்கப்பட்ட புதுவையை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த நிவாரண உதவியை மேலும் உயர்த்த வேண்டும். நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் சீமான் தலைமை வகித்தார். வேலுச்சாமி வரவேற்றார். புதுவை நிர்வாகிகள் அன்பு தென்னரசன், லோகு அய்யப்பன், தந்தைபிரியன், அருமைதாசன், வத்சலா, கவுரி, ரமேஷ், கலைச்செல்வம், இளங்கோ, அய்யநாதன், நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து இயக்குனர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் புயலினால் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவு பாதிப்பு ஏற்பட்டது. கடலூரில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் மத்திய அரசு ரூ.500 கோடியை இடைக்கால நிவாரணமாக அறிவித்துள்ளது சரியான தல்ல. மத்திய அரசு மாநில அரசு கோரிய தொகையில் 50 சதவீதமாவது தந்தால் தான் நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும்.

மத்திய அமைச்சர் சிதம்பரம் புதுவையில் பார்வையிட்டார், கடலூருக்கு செல்ல வில்லை. மத்தியக்குழுவும் வந்து பார்வையிட்டு சென்றது. இவர்கள் என்ன சொன்னார்கள்? என தெரியவில்லை. கடமைக்கு வந்து பார்வையிட்டு சென்றதுபோல் உள்ளது.

மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தனது கட்சி ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் சலுகைகள் தருகிறது. வேறு கட்சிகள் ஆளும் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை வஞ்சிக்கும் நோக்கில் செயல்படுவது தவறானது, கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது: சாமி

 
 
சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை நிறுத்த முடியாது. அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.
 
இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள அவர் கதிர்காமம் சென்றார். அங்கிருந்து திரும்பும் வழியில் ரத்தினபுரியில் நிருபர்களிடம் பேசுகையில், இலங்கையை இரண்டாகப் பிரித்து இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது. அதற்கு சாத்தியமே இல்லை.
 
வெளிநாட்டு நெருக்கடிகளுக்கு இடம் தராமல் விடுதலைப் புலிகளை அழித்தார் ராஜபக்சே. புலிகள் ஒழிக்கப்பட்டது, தமிழர்களுக்குக் கிடைத்த தோல்வி அல்ல.
 
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பயந்து இலங்கைக்கு இந்தியா உதவி செய்யாமல் பின்வாங்கியதால் தான் இலங்கையை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது. இதற்கு கருணாநிதி தான் காரணம்.
 
ஹாம்பன்டோடா துறைமுகத்தை மேம்படுத்த முதலில் இந்திய உதவியைத் தான் இலங்கை நாடியது. ஆனால், இந்தியா அதில் ஆர்வம் காட்டாததால் சீனாவிடம் அந்தப் பணியை ஒப்படைத்தது இலங்கை.
 
கச்சத் தீவை இந்தியா எக்காரணம் கொண்டும் திரும்ப பெற முடியாது. கருணாநிதியும் இந்திரா காந்தியும் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படிதான் கச்சத் தீவு வழங்கப்பட்டது. ஆனால், இப்போது கருணாநிதி நீலிக் கண்ணீர் வடிக்கிறார்.
 
சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்சேவை நிறுத்த முடியாது. அதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை. புலிகளை ஒழித்ததற்காக ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியாது.
 
ராஜிவ் காந்தியை புலிகள் கொன்றதுதான் அவர்கள் செய்த மாபெரும் தவறு. அது அவர்களின் முட்டாள்தனம். கூலிக்காக செய்தார்களா அல்லது வேறு தேவைக்காக செய்தார்களா என்பது தெரியாது.
 
ராஜிவ் காந்தி இலங்கை பிரச்சனையைத் தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். அவர் உயிரோடு இருந்திருந்தால் பிரச்சனை சுமூகமாக தீர்ந்திருக்கும்.
 
விடுதலைப் புலிகள் போதை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வியாபாரத்திலும் ஈடுபட்டனர். அதை எவரும் மறுக்க முடியாது.
 
இலங்கையில் தென் பகுதி சிங்கள மக்களின் தன்மானத்திற்கு இடையூறு விளைவிக்காத வகையில் வட கிழக்குப் பகுதி தமிழ் மக்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். தீவிரவாதம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உரிமை பெற்றுக் கொள்ள முடியாது. பயங்கரவாதத்தால் வட கிழக்கிலுள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
 
இலங்கை அரசை நம்பி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அதிபர் ராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். வெளிநாடுகளின் நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இலங்கைக்கு இந்தியா கூடுதல் நெருக்கடி கொடுத்தால் இலங்கைக்கு உதவி செய்ய இன்னும் பல நாடுகள் உள்ளன.
 
வடகிழக்கு மக்களை விட இலங்கை வாழ் இந்திய மக்களும் தோட்டத் தொழிலாளர்களும் மிகவும் கீழ்மட்ட வாழ்க்கை வாழ்கின்றனர். இது குறித்து இந்தியா கூடுதல் அக்கறை கொள்ள வேண்டும். இந்தியாவின் இலங்கை கொள்கை வட-கிழக்கு பகுதிகளையே சார்ந்துள்ளது. இதை விடுத்து அந் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சித் திட்டங்களிலும் இந்தியா ஈடுபாடு காட்ட வேண்டும்.
 
இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சனைகளை முன் வைத்து டெல்லியில் மாநாடு ஒன்று நடத்தவுள்ளேன் என்றார் சாமி.