Thursday, 15 December 2011

ஷோயப் அக்தரின் உலகம்: சர்ச்சையும் சிறுபிள்ளைத்தனமும்

 
 


பாகிஸ்தான் அணியின் ஷோயப் அக்தர் துணைக்கண்டத்தின் முதல் முழுவேக பந்து வீச்சாளர். தன் ஆட்டவாழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆடுகளத்தின் ஆதரவு தேவைப்படாத ஒரே வேகவீச்சாளர். ஸ்விங் செய்வது பற்றிக் கூட அதிகம் அலட்டிக் கொள்ளாதவர். மிகுவேகத்தில் குச்சிக்கு நேராக வரும் பந்து, தோள்பட்டை உயரத்தில் எழும் பந்து எனும் இரு ஆயுதங்களை மட்டுமே பிரதானமாய் நம்பியவர். இதே காரணத்தினாலே கூர்மையான ஒரு விக்கெட் கீப்பரோ ஸ்லிப் கேட்சர்களோ ஷோயப்புக்கு முக்கியமல்ல. புத்திசாலித்தனமான கள அமைப்பு கூட பொருட்டல்ல. பாகிஸ்தானின் மூன்று சிறந்த வேகவீச்சாளர்களாகிய அக்ரம், வக்கார் மற்றும் இம்ரான் ஆகியோர் பந்தை பேச வைக்கும் திறனாலும் தங்களது கட்டுப்பாட்டினாலும் தான் கூட்டாக பாகிஸ்தானுக்கு ஆயிரத்துக்கு மேல் விக்கெட்டுகள் குவித்தனர். இம்ரானுக்கு கீழ் அக்ரம் மலர்ந்தார். பின்னர் வகாரும், அகுப் ஜாவிதும் உருவானார்கள். அக்ரமுக்கு கீழ் சக்லைன் முஷ்டாக் சிறந்தார். ஷோயப் மட்டும் என்றுமே இரு தனியாள் படை. ஒரு ஒற்றை பீரங்கி. அவரை யாரும் செலுத்த தேவை இல்லை. இயக்கி விட்டால் போதும். ஷோயப் எந்த கேப்டனுக்கு கீழும் சோபித்ததில்லை. அவர் தனக்கு கீழ் தனக்காக ஆடும் போது மட்டுமே அணிக்காக ஆட்டங்களை வென்றளித்தார். அதே வகையில் அக்ரமுக்கு பிறகு தனது பந்து வீச்சுக்காக ஏகப்பட்ட ரசிகர்களை வென்ற நட்சத்திர பந்து வீச்சாளரும் ஷோயப்தான். ஒரு பேட்டியில் தனக்கு தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர் கடிதங்கள் வருவதாக தெரிவித்தார். அவரது நீண்ட தயாரிப்பு ஓட்டம், இறுதியாக பந்தை விடுவிக்கும் வேகம், விக்கெட் வீழ்த்தியதும் இறகுகளை விரித்தோடும் கொண்டாட்டம் ஆகியன கிரிக்கெட் வன்மத்தின், மூர்க்கத்தின் காட்சிபூர்வ உச்சம். ஷோயப்பின் ஆட்டவரலாற்றுக்கு இருபக்கங்கள் உண்டு. ஒன்று அவர் ஒரு முன்னணி வீச்சாளராக அக்ரம் மற்றும் யூனிசுக்கு பிறகான காலகட்டத்தின் பாகிஸ்தானின் பந்துவீச்சை முன்னெடுத்தார். இது ஒரு முக்கியமான பங்களிப்பு. ஏனெனில் இப்போது போல் அல்லாது அந்த கட்டத்தில் பாகிஸ்தான் தற்போதுள்ள இந்தியாவை போல் மிதவேக வீச்சாளர்களையே (ரசாக், அசர் மஹ்மூத்) உருவாக்கியது. மிக சமீபமாக அமீர், ஆசிப், ரியாஸ் போன்ற தரமான வேகவீச்சாளர்கள் தோன்றும் வரையில் பாகிஸ்தானின் வேகவீச்சின் முகமாக அக்தரே இருந்தார். அடுத்து ஆணவமும் தன்முனைப்பும் மிகுந்த ஒரு கிரிக்கெட் நட்சத்திரமாக அவர் பாக் அணியின் ஆட்டப்போக்கு, திட்டமிடல் ஆகியவற்றுக்கு எதிரானவராக இருந்தார். இருசக்கர வாகனங்கள் இடையே நகரும் ஒரு புல்டோசர் போல் தனது ஆகிருதியால் அவர் அணிக்கு ஒரு இடைஞ்சலாக, தொந்தரவாக, வளர்ச்சிக்கு தடையாக இருந்தார். வாசிம் மற்றும் இன்சமாம் இருவரும் ஷோயபுக்கு அதிக ஆட்டங்களில் அணித்தலைவராக இருந்தவர்கள். இருவரும் அவர் விசயத்தில் மிகவும் அதிருப்தி உற்றிருந்தனர். அநேகமாக நம்மால் கற்பனையே பண்ண முடியாத வகையில் அணித்தலைவர்களால் எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாதவராக அவர் இருந்தார். பலமுறை அணியில் இருந்து விலக்கப்பட்டார். பெரும்பாலும் அவரது ஒழுக்கத்துக்காகத் தான். பிறகு முப்பது வயதை நெருங்க ஷோயப் உடற்தகுதி காரணமாய் அணியில் இருந்து விலக்கப்பட்டார். சக வீரரான ஆசிப்பை அடித்தது, அணித்தலைவர்களுடன் தொடர்ந்து மோதியது போன்ற சம்பவங்கள் அவரை தேர்வாளர்களின் பார்வையில் இருந்து மேலும் மேலும் தள்ளி வைத்தன. மேலும் அவரது சேட்டைகளை சகித்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் ஆகி இருந்தது. பாக் பந்துவீச்சு அவர் இல்லாமலே வலுவாக இருந்தது. ஷோயப் நீக்கப்பட்ட போதெல்லாம் பாக் சுலபமாக வென்றது. ஆக ஷோயப் தான் பாக் அணியின் முன்னேற்றத்திற்கு எதிரி என்று மீடியா சித்தரிக்க இந்த சூழ்நிலை உதவியது. உலகின் மிகச் சிறந்த வேகவீச்சாளர் இப்படித்தான் மெல்ல மெல்ல தன் வீழ்ச்சிக்கு தானே காரணமானார். ஒரு நட்சத்திரம் பூமியில் இறுதியாய் விழுந்த போது அது வெறும் கரித்துண்டாக மாறி இருந்தது. அதற்கு பின் 2011 உலகக் கோப்பை அணியில் அவர் ஆடிய போதும் பின்னர் சமீபமாக தனது கிரிக்கெட் வெளியேற்றத்தை ஒப்புக் கொண்டு அவர் சர்ச்சைக்குரிய Controversially Yours எனும் சுயசரிதையை எழுதியுள்ள போதும் பரிதாபமும் கேலியுமே அனைவரின் எதிர்வினையாக உள்ளது. வாசிம் அக்ரம் "ஷோயப் தான் ஆடிய போதும் சரி இப்போதும் சரி எல்லாருக்கும் ஒரு தொல்லையாகவே இருக்கிறார்" என்றார். பிஷன் சிங் பேடி அவரது நூலை பற்றி பேசும் போது ஷோயப் ஒரு முட்டாள் என்று பொருள்பட பேசினார். காரணம் ஷோயப் அக்ரம் உள்ளிட்ட சகபாக் வீரர்களையும், சச்சின், திராவிட் ஆகியோரையும் பரிகாசம் செய்து பழி கூறியிருந்தார் என்பது இந்த எதிர்வினைக்கு உபரி காரணங்கள். ஆனால் இந்த நூல் வருவதற்கு முன்னரே ஷோயப் தன்னை ஒரு வேடிக்கை பாத்திரமாக மாற்றி இருந்தார். நட்சத்திரங்களுக்கு மட்டுமே இப்படியான இரட்டை வாழ்வு அமையும். முதல் பாதியில் அபரிதமாக போற்றப்படுவார்கள். அடுத்த பாதியில் கேலிச்சித்திரமாவார்கள்.
ஷோயப் ஏன் ஷோயப் ஆனார் என்பதற்கான விடை அவரது சுயசரிதையில் உள்ளது. நிழல் உலகம், பெட்டிங் வியாபாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோர் ஆதிக்கம் செலுத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பில் முன்னேற ஒருவருக்கு சூழ்ச்சியும், முதுகில் குத்தவும், உள் அரசியல் செய்யவும், செல்வாக்கை பெருக்கவும் தெரிய வேண்டும் என்கிறார் ஷோயப். கடந்த பத்தாண்டுகளில் பாகிஸ்தான் அணியை போல் வீரர்களின் மாற்றங்களை, தலைமை நிலையாமையின் அதிர்வுகளை, தீவிரவாதத்தின் நேரடி விளைவுகளை சந்தித்த அணி பிறிதொன்றில்லை. ஆதரவற்ற ஒரு தனியனாக திரிந்த ஆரம்ப காலத்தில் இருந்து பின்னர் அணியில் நுழைந்த பின்பான போராட்டங்கள் வரை இந்நூலில் விவரிக்கிறார். சுவாரஸ்யமாக ஷோயப் சச்சின் மற்றும் திராவிட் குறித்த எழுப்பிய விமர்சனங்களே இந்தியாவில் இந்நூலுக்கு மீடியா கவனம் பெற்றுத் தந்தது.
இரண்டு குற்றங்களை முன்வைக்கிறார். ஒன்று சச்சின் அவரது வேகப்பந்து வீச்சை சந்திக்க பயந்து நடுங்கினார் என்பது. அடுத்தது திராவிடால் இந்தியாவை வெற்றி இலக்குகளை நோக்கி வழிநடத்த முடிந்ததில்லை. சச்சின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத தொடைநடுங்கி. திராவிட் இறுதிவரை போராட முடியாத மனதிடம் அற்றவர். இந்திய கிரிக்கெட்டை ஓரளவு பின் தொடரும் பார்வையாளர்களுக்கே இது சுத்த அபத்தம் என்று விளங்கும். கடந்த முறை பாகிஸ்தானில் நாம் டெஸ்ட் தொடர் ஆடிய போது அதனை வென்றதற்கு முக்கிய காரணமே திராவிடின் இரட்டை சதம் தான். பாகிஸ்தானுக்கு எதிரான 2003 உலகக் கோப்பை ஆட்டத்திலும் திராவிடின் அரைசதம் தான் பிற்பகுதியில் இந்தியாவை வழிநடத்தியது. அதே போன்று ரெண்டாயிரத்தின் ஆரம்பத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்டுகள் வென்றதற்கு திராவிட் தான் ஆதார காரனமாக இருந்தார். அடுத்து சச்சின் விவகாரம்.
சச்சின் என்றுமே வேகவீச்சை விரும்புபவராக மிதவேக பந்துவீச்சை வெறுப்பவராக இருந்துள்ளார். தென்னாப்பிரிக்காவின் வேகவீச்சாளர்கள் அல்ல, பொலாக், ஹேன்சி குரோனியே போன்றவர்கள் தாம் அவரை அதிக முறை வீழ்த்தினர். அதே போன்று சச்சினை ஆதிக்கம் செலுத்திய மெக்ராத், சமிந்தா வாஸ் போன்றோரும் வேகவீச்சாளர்கள் அல்ல. பாகிஸ்தானியர்களில் ரசாக் தான் ஒருகட்டத்தில் சச்சினை தொடர்ந்து பவுல்டு செய்து வெளியேற்றினார். அவரும் மிதவேக வீச்சாளரே. மிதவேக ஸ்விங்குக்கு அடுத்தபடியாய் சச்சினின் பலவீனமாக ஆரம்பம் தொட்டே இருந்து வந்துள்ளது இடதுகை சுழல் பந்து. மிக சமீபமாக தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடர் ஆடிய போது ரயன் ஹாரிஸின் இடதுகை சுழல் பந்து சச்சினை பலவேளைகளில் திணறடித்தது. இந்தியாவில் வேகவீச்சுக்கு நடுங்குபவர்கள் வேறுபலர் இருக்கிறார்கள். அந்த பட்டியலில் சச்சின் நிச்சயம் இல்லை. சொல்லப்போனால் அவர் பல முக்கியமான ஆட்டங்களில் ஷோயப்பை துவம்சம் செய்துள்ளார். 2003 உலகக்கோப்பை ஆட்டம் ஒரு கிளாசிக் உதாரணம். சுவாரஸ்யமாக ஷோயப் கேலி பண்ணுவதற்கு தன்னை மிக நன்றாய் எதிர்த்தாடின இருவரையே எடுத்துள்ளார். விளையாட்டு திடலில் அவரால் திருப்பி தர முடியாததை இப்போது புத்தகத்தின் மூலம் கண்ணாடி முன் நின்று ஒண்ணு ரேண்டு என்று மாறி மாறி அறைந்து பார்க்கிறார். எதிரிகளை நொந்துகொள்வது தன் புண்ணை நோண்டி ஆய்வதை ஒத்தது. எதிரிகள் நமது பிரதிபிம்பம். சச்சின் அவரை அடித்தாலும் அவரிடம் ஆட்டம் இழந்தாலும் இரண்டுமே அக்தருக்கு பெருமைதான். அதை அவர் புரிந்து கொள்ள வில்லை என்பது அவரது ஆளுமையின் ஒரு முக்கிய பலவீனத்தை காட்டுகிறது.
(நவம்பர் 2011 அமிர்தாவில் வெளியான கட்டுரை)

ஒரு கவிதை உரையாடலும் நிறைய சிரிப்பும்

 


 
 
நேற்று திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் அவர்களின் படைப்பாற்றல் ஸ்டுடியோ எனும் நிகழ்வுக்காக 11ஆம் வகுப்பு மாணவர்களிடம் நவீன கவிதை குறித்து இரு பகுதிகளாக ஐந்து மணிநேரம் உரையாடினேன். நான் எதிர்பார்த்ததை விட மாணவ மாணவிகள் கூர்மையாக ஆர்வமுடன் இருந்தார்கள்.
பொதுவாக என் வகுப்பில் கவிஞர்கள் யாராவது உள்ளார்களா என்று விசாரித்தால் ரொம்ப தயங்கிய பிறகு ஒருவர் இருவர் கை தூக்குவார்கள். ஆனால் இங்கே அநேகமாய் மொத்த வகுப்பும் தம்மை எழுத்தாளர்கள் என்று தன்னம்பிக்கையுடன் அறிவித்தது. பலரும் ஆர்வமுடன் வந்து தம் கவிதையை வாசித்தனர். அதற்கு பிறர் அசட்டுத்தனமாய் கமெண்ட் அடிக்காமல் ஒழுங்காய் கைத்தட்டி ஆதரித்தார்கள், அங்கங்கே பிசிறாய் சிரித்தார்கள். தொடர்ந்து எழுத்தாளர்களை சந்தித்து உரையாடுவது தான் இந்த எழுத்தாள ஆர்வத்துக்கு காரணம் என்று யூகித்தேன்.
யாரெல்லாம் வாழ்வில் தனிமையை உணர்கிறீர்கள் என்று கேட்டால் பத்து பேர் எழுந்து கொண்டார்கள். சற்று அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தாலும் தங்கள் தனிமையின் காரணத்தை தயக்கமின்றி அவர்கள் வெளிப்படுத்தியது ஆறுதல் ஏற்படுத்தியது.
கற்பனாவாத கவிதைக்கும் நவீன கவிதைக்குமான வித்தியாசங்களை விளக்கி நவீன கவிஞர்களை கவிதைகளை அறிமுகப்படுத்துவதில் முடித்தேன். பயர்பாயிண்ட் பயன்படுத்தியது எனக்கு ஒரு வித்தியாசமான உபயோகமான அனுபவமாக இருந்தது. உரையாடல் முடித்ததும் செஸ்லோவ் மற்றும் பசுவய்யாவின் இரு கவிதைகளை காட்டி அவை என்ன வகை மற்றும் அவற்றில் உள்ள கவிதைக்கருவிகளை அடையாளப்படுத்த கேட்டேன். பசங்க எந்தளவுக்கு கூர்மை என்றால் பலரும் பகடி, குறியீடு,படிமம் என்று சரளமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் செஸ்லோவின் கவிதையில் வரும் குறியீடு வீடு தான், அக்குறியீட்டின் பொருள் வாழ்க்கைக் கனவுகள் என்று இரு மாணவர்கள் சொன்னது போது ரொம்பவும் நெகிழ்ந்து போனேன்.
தமிழ் மற்றும் ஆங்கில நவீன எழுத்தாள ஆளுமைகளை விவரித்த போது ரொம்பவும் ரசித்தார்கள். குறிப்பாய் விக்கிரமாதித்யன். பிற்பாடு அவரது "வாழவும் பிடிக்கவில்லை, வாழாமல் இருக்கவும் பிடிக்கவில்லை" கவிதையில் வரும் "குடிக்கவும் பிடிக்கவில்லை குடிக்காமல் இருக்கவும் பிடிக்கவில்லை" என்று வரிக்கு சிரிப்பலை எழுந்தது. தேவதேவன் எப்படி பேசுவார் என்று பேசிக்காட்டிய போது விழுந்து விழுந்து சிரித்தார்கள். கலாப்பிரியாவின் பெயர்க்காரணம் சொன்ன போதும் அப்படியே.
இரண்டாவது அமர்வில் பிரமிள், நகுலன், பசுவய்யா, மனுஷ்யபுத்திரன், விக்கிரமாதித்யன், குட்டிரேவதி, யுவன், முகுந்த் நாகராஜன், என்.டி ராஜ்குமார், அப்பாஸ், ஆத்மாநாம் ஆகியோரின் கவிதைகளை அதிகமாய் விவாதித்தேன். மனுஷ்யபுத்திரனை ஏதோ சொந்த தம்பி போல் தெரிந்து வைத்திருக்கிறார்கள். என்.டியின் வட்டார மொழி அவர்களை வசீகரித்தது. அவரது இரு கவிதைகளின் எதார்த்தம் பாதித்தது கண்களில் தெரிந்தது. அவர் கவிதைகளை எப்படி ஒரு தாளலயத்துடன் வாசிக்க வேண்டும் என்று காண்பித்தேன். அப்பாஸின் "ஒரு பெருவெளி"யை அவர்கள் உள்வாங்கியது ஆச்சரியம் அளித்தது. யுவனின் குள்ளச்சித்தன் சரித்திரத்தில் வரும் ஒரு சம்பவத்தோடு ஒப்பிட்டு நம் வாழ்வில் எப்படி இத்தகைய அனுபவங்கள் ஏற்படுகின்றன என்று சொன்னேன். எதிர்பார்த்தது போல் பெண்களுக்கு பிடித்தமானவராக முகுந்த் இருந்தார். கூட "எனக்கு இரங்கல் கூட்டங்கள் நடத்த வேண்டாம் என்னால் வர முடியாது" என்ற வரி மூலம் நகுலன் சில பெண்களின் ஆதரவையும் புன்னகையையும் பெற்றது ஒரு சின்ன ஆச்சரியம்.
வழக்கம் போல் உரையாடலை முடிக்க மனமின்றி கிளம்பி வந்தேன்.
எஸ்.ஆர்.வி பள்ளியினரின் விருந்தோம்பல் சிறப்பாக இருந்தது. விடிகாலையில் சென்னை வந்தேன். மனைவியும் நாய்க்குட்டியும் இல்லாத பட்சத்தில் கதவை நெருங்கும் முன்னரே என் பூனை மோப்பம் பிடித்து என்னை அழைத்து, உள்ளே வந்ததும் வளைந்த முதுகும் நிமிர்ந்த வாலுமாய் கொஞ்சியபடி வாழ்வில் முதன்முறையாய் என்னை அப்படி வரவேற்றது. அப்படி ஒரு இனிய அனுபவம் முடிவுக்கு வந்தது.

கேரளாவை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும்: தமிழர்களுக்கு கெடு

 
 
முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரள அரசை கண்டித்து தேனி மாவட்ட மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. காய்கறி, பால், அரிசி போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் கேரள மாநிலத்தவர்களுக்கு சொந்தமான ஓட்டல்கள், நகைக்கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த கேரளக்காரர்கள் கேரளாவில் வசிக்கும் தமிழர்களை தாக்கி வருகிறார்கள்.
 
சேத்துகுழி, சாஸ்தான் ஓடை, மங்கலம் போன்ற பகுதிகளில் வசிக்கும் தமிழர்களை தாக்கி வருகிறார்கள். உடும்பன்சோலையில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தமிழர்கள் இருக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்.
 
24 மணி நேரத்திற்குள் தமிழர்கள் கேரளாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு வசித்து வரும் தமிழர்கள் கேரள அரசின் தலைமை செயலாளருக்கு புகார் மனு அளித்துள்ளனர். அதனை தொடர்ந்து உடும்பன்சோலை, பாரத்தோடு பகுதிகளில் சிறப்பு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.



மானேஜர் மர்ம சாவு; வடிவேலுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு

 
 
 
 
 
திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டீஸ்வரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
 
நடிகர் வடிவேலுவிடம் எனது கணவர் வேலுச்சாமி மானேஜராக வேலை பார்த்தார். கடந்த 4.2.2009-ல் வேலுச்சாமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வடிவேலு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வடபழனி போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ளனர். எனது கணவரை வடிவேலு கொலை செய்து இருக்கலாம் என சந்தேகப்படுகிறேன்.
 
கடந்த ஆட்சியில் தி.மு.க. தலைவர்களிடம் வடிவேலு நெருக்கமாக இருந்தார். இதனால் அவருக்கு எதிராக என்னால் புகார் கொடுக்க முடியவில்லை. 19.8.2011-ல் எனது கணவர் சாவு குறித்து சந்தேகம் எழுப்பி போலீஸ் டி.ஜி. பி.யிடம் புகார் மனு அளித்தேன். அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு இரு மகன்கள் உள்ளனர். எங்களுக்கு மிரட்டல்கள் வருகிறது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது கணவர் சாவு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
 
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
 
இந்த மனு நீதிபதி பால்வசந்தகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாண்டீஸ்வரி சார்பில் வக்கீல் மணிகண்டன் ஆஜராகி வாதாடும் போது நடிகர் ராஜ்கிரணிடம் வடிவேலுவை அறிமுகம் செய்து வைத்தது வேலுச்சாமிதான். முதலில் வேலுச்சாமி ராஜ்கிரணிடம் கணக்கு பிள்ளையாக இருந்தார். பிறகு வடிவேலுக்கு மானேஜரானார்.
 
நில மோசடி பிரச்சினை எழுந்த போது வேலுச்சாமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதில் சந்தேகம் எழுகிறது. இந்த சாவு குறித்து பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். இது வரை கோர்ட்டுக்கு அனுப்பப்படவில்லை என்றார். இதையடுத்து பாண்டீஸ்வரி புகார் மனு குறித்து 1 வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி போலீஸ் டி.ஜி.பிக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.



வரலாற்று குறிப்புகள், தொழில்நுட்ப தகவல்கள் மூலம் கேரளத்தின் பொய்யை தூள்தூளாக்கிய ஜெயலலிதா!

 
 
 
முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாகவும், அரசியல் ஆதாயத்திற்காக அணை பாதுகாப்பற்றது என்று கேரள அரசு பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
 
இந்த அணை விவகாரம் தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் சிறப்புத் தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசுகையில்,
 
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை தொடர்பாக, கேரள அரசு அம்மாநில மக்களின் உணர்ச்சிகளை தூண்டி வரும் சூழ்நிலையில், கேரள அரசின் உண்மையற்ற பிரச்சாரத்தின் அடிப்படையில், தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதை நாம் அனைவரும் ஒன்றுபட்டு தெரிவிக்கும் வகையில் இன்று இந்த சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும், ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை முற்றிலும் பாதுகாப்பான அணை என்பதை முதற்கண் தெரிவித்துக் கொண்டு அது குறித்த சில விவரங்களை எடுத்துக் கூற விரும்புகிறேன்.
 
முல்லைப் பெரியாறு அணை புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் 1886லிருந்து 1895 வரையிலான ஆண்டுகளில், சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கல்லில் கட்டப்பட்டதாகும். பொதுவாகவே, புவி ஈர்ப்பு விசையின் அடிப்படையில் கட்டப்படும் அணைகள் நீர் அழுத்தம், அலைகளால் ஏற்படும் அழுத்தம், நில அதிர்வுகளினால் ஏற்படும் விசை போன்றவற்றை தனது பளுவினால் தாங்கிக் கொள்ளும் சக்தி வாய்ந்தவை. எனவே தான், புவி ஈர்ப்பு அடிப்படையில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை இன்றளவும் உறுதியாகவும், வலிமை மிக்கதாகவும் விளங்குகிறது.
 
பெரியாறு திட்டத்தின் கீழ், சென்னை மாகாணத்திற்கு தண்ணீரை திருப்பும் வகையில் திருவாங்கூர் மகாராஜாவுக்கும், சென்னை மாகாணத்திற்கும் இடையே 1.1.1886 முதல் 999 ஆண்டுகளுக்கான பெரியாறு குத்தகை உடன்படிக்கை, 29.10.1886 அன்று ஏற்பட்டது.
 
ஒரு ஏக்கர் நிலத்திற்கு, 5 ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில், சுமார் 8,000 ஏக்கர் நிலம் குத்தகைக்கு விடப்பட்டது. இந்த அணையின் நீர் மூலம், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள சுமார் 2.23 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
 
இந் நிலையில், 29.5.1970 அன்று கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே இரண்டு துணை ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அதாவது, 1) 30 ஆண்டுகளுக்கு ஒரு முறை இக்குத்தகை வாடகை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், ஒரு ஏக்கருக்கான, ஆண்டு குத்தகை வாடகையை 5 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்துதல், மற்றும் மீன்பிடி உரிமையை கேரளாவிற்கு விட்டுக் கொடுத்தல் ஆகியவை அடங்கிய ஓர் ஒப்பந்தமும்,
 
2) மின் உற்பத்தி திறனுக்கு ஏற்ப கட்டணம் செலுத்துவதன் அடிப்படையில், புனல் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ள தமிழ்நாட்டை அனுமதிப்பது என்கிற மற்றொரு ஒப்பந்தமும் ஏற்பட்டன.
 
இந்த இரண்டு ஒப்பந்தங்களும், 1886ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அசல் உடன்படிக்கையின் உரிமையாளர் என்ற முறையில் ஏற்படுத்தப்பட்டன.
 
இது போன்ற அணைகள் வலுப்படுத்தப்பட்டதற்கு பல்வேறு எடுத்துக்காட்டுகள் உலக அளவில் உள்ளன. 1911ம் ஆண்டு, அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாநிலத்தில் கட்டப்பட்ட ரூஸ்வெல்ட் அணை வலுப்படுத்தப்பட்டு, அதனுடைய கொள்ளளவு அதிகரிக்கப்பட்டது. 1905ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்ட ஜோக்ஸ் அணை வலுப்படுத்தப்பட்டு 1952ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. இதே போன்று, இங்கிலாந்து நாட்டில் உள்ள மேல் கிளன்டோவல் என்ற புவி ஈர்ப்பு விசை கொண்ட அணையும் வலுப்படுத்தப்பட்டது.
 
இதே போன்று, முல்லைப் பெரியாறு அணையிலும், மத்திய நீர் ஆணையத் தலைவரின் பரிந்துரைகளின் அடிப்படையில், 1980 முதல் 1994 வரை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
 
பழைய அணையில், அணையின் முன் மற்றும் பின் பக்க பகுதிகள் சுண்ணாம்பு சுர்க்கி கலவையால் கருங்கற்கள், அதாவது, stone masonry with lime surkhi mortar கொண்டு கட்டப்பட்டுள்ளன. இது மட்டுமல்லாமல், அணையின் மையப் பகுதி சுண்ணாம்பு சுர்க்கி திண்காரையால், அதாவது, lime surkhi concrete-ஆல் கட்டப்பட்டது. இவ்வாறு கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை, குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில், எவ்வாறு வலுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்கிக் கூறுவது எனது கடமை என்றே கருதுகிறேன்.
 
குறுகிய கால திட்டமாக, அணையின் எடையை அதிகரிக்கும் பொருட்டு, 21 அடி அகலத்திற்கு, மூன்று அடி பருமன் கொண்ட ஆர்.சி.சி. கட்டுமானப் பணி அணையின் முழு நீளத்திற்கு அதன் மேல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, அணையின் எடை ஒரு மீட்டருக்கு 35 டன் அதிகரித்துள்ளது. அதாவது, அதன் கட்டமைப்புடன் மொத்தம் 12,000 டன் எடை கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கிறது. நடுத்தர கால நடவடிக்கையாக, இறுக்கு விசை தொழில்நுட்பத்தின் அடிப்படையில், அணையின் அடித்தளத்துடன் எஃகு கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளன. அணையின் முன் பகுதியிலிருந்து 5 அடி தொலைவில், அணையின் மேற்பரப்பிலிருந்து, அடித்தளப் பாறையில் 30 அடி வரை, 9 அடி இடைவெளியில், 4 அங்குலம் குறுக்களவில், துளைகள் அணையின் முழு நீளத்திற்கும் போடப்பட்டுள்ளன.
 
இந்த துளைகளுக்குள், 7 மி.மீ. பருமன் கொண்ட மிக வலுவான 34 எஃகு கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளன. அஸ்திவாரத்தில் உள்ள கருங்கல் பாறைகளுடன், இந்த கம்பிகள் உறுதியாக பொருத்தப்பட்டுள்ளன. முதலில் 20 அடி ஆழத்திற்கு திண்காரைக் கட்டுகள், அதாவது, Concrete போடப்பட்ட பிறகு கம்பிகள் செலுத்தப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன. 120 டன் சக்தி கொண்ட இக்கம்பிகள், மேற்பரப்பிலிருந்து இழுத்துக் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், துளையை அடைக்கும் வகையில், சிமிட்டிக் கலவை போடப்பட்டு மேற்பரப்பு மூடப்பட்டது. இதன் காரணமாக, அஸ்திவார பாறைகளுடன் 120 டன் விசை கொண்டு, அணையை வலுவாக இறுக்குக் கம்பிகள் பிடித்துக் கொள்ளும். நில அதிர்வு உட்பட பல்வேறு விசைகளைத் தாங்கிக் கொள்ளும் வகையில், அணையின் முழு நீளத்திற்கும், 9 அடி இடைவெளியில், 95 கம்பிகள் செலுத்தப்பட்டு சிமிட்டிக் கலவை போடப்பட்டு இருக்கிறது.
 
நீண்ட கால நடவடிக்கையாக, அணையின் பின்புறத்தில் 10 அடி ஆழம், 32 அடி அகலத்திற்கு, தரை மட்டத்திலிருந்து 145 அடி உயரத்திற்கு ஆர்.சி.சி. கட்டுமானம் அணையின் தலைப் பகுதியுடன் இணையும் வகையில், மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தற்போதுள்ள அணை மற்றும் புதிய கட்டுமானம் ஆகியவை ஒரே அணை போல் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

மத்திய நீர் ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, கட்டுமானத்தை வலுப்படுத்தும் அதே சமயத்தில், புதிய கட்டுமானத்தில் 10 அடி மற்றும், 45 அடி உயரத்திற்கு இரண்டு வடிகால் மாடங்கள், அதாவது Drainage Galleries அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், அணையிலிருந்து கசியும் நீர் அன்றாடம் கணக்கிடப்படுகிறது. அணை பாதுகாப்பாக, வலுவாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், ஒரளவு நீர் கசிவு அணையிலிருந்து வெளியேறுவது அவசியம் என்பது விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விழைகிறேன்.
 
மேலும், அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான, 152 அடிக்கும் மேலாக உயர்கையில், அணையை பாதுகாக்கும் பொருட்டு உபரி நீர், ஏற்கெனவே உள்ள 36 x 16 அடி கொண்ட 10 மதகுகள் வழியாக வெளியேற்றப்படும். இதன் மூலம், ஒரு வினாடிக்கு 86,000 கன அடி நீரை வெளியேற்ற முடியும். இது மட்டுமல்லாமல், மத்திய நீர் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில், கூடுதலாக வினாடிக்கு 36,000 கன அடி நீரை வெளியேற்றும் திறன் கொண்ட 40 x 16 அடி அளவுள்ள மூன்று மதகுகள் கட்டப்பட்டுள்ளன. எனவே, தற்போது அணையிலிருந்து தோராயமாக வினாடிக்கு 1,22,000 கன அடி உபரி நீரை வெளியேற்ற முடியும்.
 
இதிலிருந்து, அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்பதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு எடுத்துள்ளது என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.
 
இந்தச் சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு தொடர்பாக, ஏற்கெனவே நிலுவையில் இருந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகள் எடுத்துரைத்த வாதங்களின் அடிப்படையிலும்; வல்லுநர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையிலும்; முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்றும்; அணையை வலுப்படுத்துவதற்கான எஞ்சிய பணிகளை தமிழ்நாடு மேற்கொள்ளலாம் என்றும்; மத்திய நீர் ஆணையம் திருப்தியடையும் வகையில், அணை பலப்படுத்தப் படுவதற்கான எஞ்சிய பணிகள் முடிவடைந்த பிறகு, அணையின் நீர்மட்டத்தை 152 அடி அளவுக்கு உயர்த்தப்பட அனுமதிப்பதற்கு முன்னர், தனிப்பட்ட வல்லுநர்கள் அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வார்கள் என்றும்; உச்ச நீதிமன்றம் 27.2.2006 அன்று தீர்ப்பளித்தது.
 
இந்த ஆணையில், அணை பாதுகாப்பாக உள்ளது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளவற்றை இங்கு எடுத்துக் கூறுவது பொருத்தமாக அமையும் என கருதுகிறேன்.
 
"… Regarding the issue as to the safety of the dam on water level being raised to 142 ft. from the present level of 136 ft., the various reports have examined the safety angle in depth including the view point of earthquake resistance. The apprehensions have been found to be baseless. …"
 
அதாவது, "தற்போதுள்ள 136 அடியிலிருந்து 142 அடி வரை அணையின் நீர் மட்டத்தை உயர்த்தும் போது, அணையின் பாதுகாப்பை பொறுத்த வரையில், நிலநடுக்கத்தினை எதிர்க்கும் சக்தி உட்பட அனைத்து பாதுகாப்பு கோணங்களையும் பல்வேறு அறிக்கைகள், ஆழமாக ஆராய்ந்துள்ளன. இதன்படி, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்ற கவலை, ஐயப்பாடு ஆகிய அனைத்தும் ஆதாரமற்றவை ..." என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருக்கிறது.
 
உச்ச நீதிமன்றம் மேலும் தனது தீர்ப்பில், "… The experts having reported about the safety of the dam and the Kerala Government having adopted an obstructionist approach, cannot now be permitted to take shelter under the plea that these are disputed questions of fact. There is no report to suggest that the safety of the dam would be jeopardized if the water level is raised for the present to 142 ft. …"
 
அதாவது, "அணை பாதுகாப்பாக உள்ளது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ள நிலையில், இவைகள் எல்லாம் சர்ச்சைக்குரிய விஷயங்கள் என்ற சாக்கு போக்கை வைத்து, அதற்குத் தடை ஏற்படுத்தும் விதமான அணுகுமுறையை கேரள அரசு கடைபிடிப்பது அனுமதிக்க முடியாது. அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தினால், அணையின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று எந்த அறிக்கையும் சுட்டிக்காட்டவில்லை ..." என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
 
உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையை முடக்கும் வகையில், "கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006", கேரள சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு; இந்தத் திருத்தச் சட்டம் 18.3.2006 முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, முல்லைப் பெரியாறு அணையின் முழு நீர்மட்டம் 136 அடியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திருத்தச் சட்டம், அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த சிவில் வழக்கு இன்னமும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 
இவ்வழக்கில், கேரள அரசின் 2006-ஆம் ஆண்டைய சட்டத் திருத்தம் செல்லத்தக்கதா என்பது உட்பட சட்ட மற்றும் அரசமைப்பு ரீதியான அம்சங்களை தவிர, ஏனைய நிலைகளை பரிசீலிக்கும் பொருட்டு உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதியரசர் டாக்டர் ஏ.எஸ். ஆனந்த் தலைமையில், அதிகாரம் படைத்த குழு, அதாவது Empowered Committee ஒன்றை உச்ச நீதிமன்றம் 18.2.2010 அன்று நியமித்தது.
 
தமிழ்நாடும், கேரளாவும் தங்கள் மாநிலங்களின் சார்பாக இரண்டு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர்களை நியமித்தன. தற்போது, இந்த அதிகாரம் படைத்த குழு, முல்லைப் பெரியாறு அணை பகுதி மற்றும் பரிசோதனைக் கூடங்களில் பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளை மேற்கொள்வதற்காக மத்திய நீர் ஆணையம் (Central Water Commission); மத்திய நீர் மற்றும் மின்சார ஆராய்ச்சி நிலையம் (Central Water and Power Research Station); இந்திய புவியியல் அளவைத் துறை (Geological Survey of India); பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) மற்றும் மத்திய மண் மற்றும் கட்டுமான பொருள்கள் ஆராய்ச்சி நிலையம் (Central Soil and Material Research Station) போன்ற அமைப்புகளின் சேவைகளை பயன்படுத்திக் கொண்டு வருகிறது. இந்தக் குழு தனது அறிக்கையை 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தின் முன் அளிக்க இருக்கிறது.
 
இந்தச் சூழ்நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்ற புரளியை கிளப்பி, கேரள மக்களை பீதியடையச் செய்யும் வகையில், விஷமப் பிரச்சாரத்தை, கேரள அரசு மேற்கொண்டு வருவது மிகவும் வருந்தத்தக்கது என்று கூறிய முதல்வர் ஜெயலலிதா, பின்னர் தீர்மானத்தை முன் மொழிந்தார்.


 


தமிழர்களுக்கு கெடு எதிரொலி:மதுரையில் கேரளா நிறுவனங்களை மூட வேண்டும்: மதுரை மக்கள் எச்சரிக்கை

 
 
 
முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரளாவில் வசிக்கும் தமிழ் மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது .இதனை தொடர்ந்து கேரளாவில் சேத்துகுழி, சாஸ்தான் ஓடை, மங்கலம் ,உடும்பன்சோலை ஆகிய பகுதிகளை விட்டு 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று தமிழர்களுக்கு கெடுவும் விடுக்கப்பட்டுள்ளது.இதனால் அங்கிருந்து தமிழர்கள் மலை பாதை வழியாக வந்த வண்ணம் உள்ளனர் .
 
இதற்க்கு பதிலடியாக, மதுரை தல்லாகுளத்தில் உள்ள கேரள நிதி நிறுவனங்கள் மீது இன்று சட்டக்கலூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர்.
 
இதுபோல் புதுச்சேரியிலும் கேரள வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தபட்டது. மேலும் ,மதுரையில் செயல்பட்டு வரும் கேரள நிறுவனங்கள் அடுத்த 24 மணிநேரங்களுக்குள் மூட வேண்டும் இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



ஆசிரியையை ஆபாச படம் எடுத்த மாணவர் கை-கால்களை கட்டி கொலை

 
 
சேலம் உத்தம சோழபுரத்தில் தனியார் மேலாண்மை கல்லூரி உள்ளது. இங்கு ராமகிருஷ்ணன் (23) என்ற மாணவர் எம்.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவரது சொந்த ஊர் தாரமங்கலம் அத்திக்கட்டானூர். தந்தை பெயர் சீனி வாசன்.
 
நேற்று காலை மாணவர் ராமகிருஷ்ணன் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றார். ஆனால் கல்லூரிக்கு வரவில்லை. இதுபற்றி மற்ற மாணவர்கள் அவரது தந்தைக்கு போன் செய்து கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மகன் எங்கே என்று தேடினார்.
 
நேற்று பகலில் அத்திக்கட்டானூர் ஏரி பகுதியில் தேடிய போது அங்கு கரையில் மாணவர் ராமகிருஷ்ணனின் சட்டை, பேண்ட் கிடந்தது. சட்டைப்பையில் இருந்த அவரது செல்போன் ஒலித்தவாறு இருந்தது. இதைப்பார்த்த பஞ்சாயத்து தலைவர் மோகன் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
 
போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். ஏரிக்குள் மாணவர் பிணம் இருக்கிறதா? என்று மீன்பிடி தொழிலாளர்களும், தீயணைப்பு படையினரும் தேடினார்கள். ஒரு மணி நேரத்துக்குப்பின் மாணவர் ராமகிருஷ்ணன் பிணம் மீட்கப்பட்டது.
 
இவரது கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது. ஒரு கண் கம்பியால் குத்தி நெம்பியது போல் இருந்தது. எனவே அவரை யாரோ கை-கால்களை கட்டியும் கண்ணை தோண்டியும் கொடூரமாக கொலை செய்து ஏரியில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள். அவரது உடலில் வேறு ஏதும் காயம் இருக்கிறதா? என்பது பற்றி அறிய பிரேத பரிசோதனைக்கு பிணம் அனுப்பி வைக்கப்பட்டது.
 
போலீசார் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் கொலை வழக்காக மாற்றப்படும். மாணவர் ராமகிருஷ்ணன் எப்படிப்பட்டவர் என்று அவருடன் படிக்கும் மற்ற மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
 
சில நாட்களுக்கு முன்பு வகுப்பில் பாடம் நடத்திய பேராசிரியை ஒருவரை பின்பக்கமாக செல்போனில் ஆபாச படம் எடுத்து அந்த படத்தை மற்ற மாணவர்களுக்கு அனுப்பினார். அந்த படத்தை இன்டர்நெட் பேஸ்புக்கிலும் வெளியிட்டார்.
 
இந்த தகவலை கேட்ட பேராசிரியை அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் கல்லூரி முதல்வர் மற்றும் இதர பேராசிரியர்களிடம் கூறினர். அவர்கள் மாணவர் ராமகிருஷ்ணனை கண்டித்தனர். பெற்றோரை அழைத்து வருமாறு கூறினர்.
 
அதன் பிறகு மாணவர் ராமகிருஷ்ணன் மற்ற மாணவர்களுக்கு தனது செல்போனில் இருந்து மெசேஜ் ஒன்று அனுப்பி உள்ளார். அதில் அவர் "டேய் நான் போலீசுக்கு போறேண்டா, அவனுங்க ஓவரா டார்ச்சர் பண்ணுவானுங்க" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் மாணவர் கொலை செய்யப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகள் பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.



காதலருடன் ஒரே அறையில் தங்க அனுமதிக்காததால் ரிச்சா தகராறு!!

 
 
 
காதலருடன் ஒரே அறையில் தங்குவதற்கு அனுமதிக்க மறுத்ததால், நட்சத்திர ஓட்டலில் நடிகை ரிச்சா தகராறு செய்தார்.
 
'மயக்கம் என்ன,' 'ஒஸ்தி' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர், ரிச்சா கங்கோபாத்யாய். மும்பையை சேர்ந்த இவர்தான் தமிழில் இப்போதைய ஹாட் ஹீரோயின். தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடிக்கிறார்.
 
பொதுவாக மும்பை நடிகைகள் படப்பிடிப்புக்கே தங்கள் பாய் பிரண்டோடுதான் வருவார்கள். ரிச்சாவுக்கும் அப்படி ஒரு பாய் பிரண்ட் உண்டு. வெறும் பாய் பிரண்ட் மட்டுமல்ல... இவர் ரிச்சாவின் காதலரும்கூட.
 
அவர் பெயர், சுந்தர். ரிச்சா தமிழ் படப்பிடிப்புக்காக சென்னை வரும்போது, அவரை கவனித்துக் கொள்பவர், காதலர் சுந்தர்தான்.
 
சமீபத்தில் 'ஒஸ்தி' படத்தின் விளம்பரத்துக்காக ரிச்சா, சென்னை வந்திருந்தார். அவரும், காதலர் சுந்தரும் சென்னை நந்தனத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று இருவருக்கும் ஒரே அறையை ஒதுக்கும்படி கேட்டார்கள்.
 
அதற்கு, ஓட்டல் நிர்வாகம் மறுத்துவிட்டது. ரிச்சா மட்டும் தங்குவதற்கு அறை தருவதாக ஓட்டல் நிர்வாகி கூறினார். அதற்கு, 'இவர் என் நண்பர். இவருக்கு என் கம்ப்யூட்டரில் கொஞ்சம் வேலை இருக்கிறது. அதற்காகவே என் அறையிலேயே தங்க அனுமதிக்கவும்' என்று ரிச்சா கூறினார்.
 
என்றாலும் ரிச்சாவுக்கும், அவருடைய காதலருக்கும் ஒரே அறையை ஒதுக்குவதற்கு ஓட்டல் நிர்வாகி பிடிவாதமாக மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த ரிச்சா அவருடன் தகராறு செய்தார்.
 
ஆனாலும் நிர்வாகம் பிடிவாதமாக இருந்ததால், இருவரும் தியாகராய நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஒரே அறையில் தங்கினார்கள்!



பெங்களூருக்கு சென்று டேம் 999 படம் பார்த்தேன்: விஜயகாந்த்

 
 
 
வாதத்திற்கு மருந்துண்டு, ஆனால் பிடிவாதத்திற்கு இல்லை என்று முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவோம் என்று தீர்மானமாக உள்ள கேரள அரசு பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேனியில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார்.
 
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில மோதல்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசையும், பிடிவாதமாக இருந்து வரும் கேரள அரசையும் கண்டித்து தேனியில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
 
அப்போது அவர் கூறியதாவது,
 
தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்கள் நமக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆந்திராவில் பாலாறு பிரச்சனை, கர்நாடகாவில் காவிரி பிரச்சனை, கேரளா மூலம் முல்லை பெரியாறு பிரச்சனை உள்ளது. இவ்வாறு இருந்தால் தேசிய ஒருமைப்பாடு எவ்வாறு வரும்
 
கடந்த 2006ம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த அனுமதி கிடைத்தது. ஆனால் கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்தவில்லை. அப்போது பதவியில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி கேரள அரசை எதிர்த்துக் கேட்காமல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த பிரச்சனைகளுக்கு மத்திய அரசுதான் காரணம். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தான் தீர்வு காண வேண்டும். ஆனால், பிரதமர் இரு மாநிலங்களுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி மேற்கொள்கிறார்.
 
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக நான் ஆர்ப்பாட்டம் நடத்துகிறேன் என்று தெரிந்ததும் என்னை இங்கு வரவிடாமல் தடுத்தனர். போராடி வந்துள்ளேன். கருணாநிதி எனது கல்யாண மண்டபத்தை இடித்தார். ஜெயலலிதா எனக்கு பல்வேறு தொல்லைகளை கொடுத்து வருகிறார். அதை பொருட்படுத்தாமல் மக்கள் வளமாகவும், மண் செழிப்பாகவும் இருக்க போராடி வருகிறேன்.
 
கேரள அரசு, மக்கள் பிரச்சனைக்காக என்றுமே பொறுத்துப் போனதில்லை. நாம் அனைவரும் இந்தியர் என்று பார்க்கிறோம். ஆனால் கேரளா தான் மக்களைப் பிரித்துப் பார்க்கிறது. இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டிய மத்திய அரசு அதை தீர்த்து வைத்ததா? இல்லையே. மத்திய அரசு மக்களை ஏமாற்றுகிறதா?.
 
தமிழக மக்கள் ஏமாளிகள் என கேரள அரசு நினைத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மோசமாக உள்ளதால் கேரள மக்கள் உயிரிழப்பார்கள் என்று கேரள அரசு கூறி வருகிறது. அவர்களுக்குத்தான் மக்களின் உயிர்களுக்கு அக்கறை உள்ளதுபோலும், எங்களுக்கு அக்கறை இல்லாததுபோலும் பேசி வருகின்றனர்.
 
சர்ச்சைக்குரிய படம் என்பதால் டேம் 999ஐ நான் பெங்களூருக்கு சென்று பார்த்தேன். தமிழகத்தில் வெளியிட்டாலும் அது ஓடாது. கேரளாவுக்கு காய்கறி அனுப்பாததால் காய்கறி விலை குறைந்துள்ளது. இதனால் தேனி மக்கள் சந்தோஷமாக உள்ளனர்.
 
கேரள அமைச்சர் ஜோசப் தமிழகத்திற்கு தண்ணீர் தருகிறோம். ஆனால் அணையை இடித்துக் கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்கிறார். எவ்வளவு தண்ணீர் தருவார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. பிறகு மழை வந்தால் தண்ணீர் தருகிறோம் என்பார்கள்.
 
முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அந்த அணையின் தண்ணீர் அடுத்துள்ள இடுக்கி அணைக்கு செல்லும். இடுக்கி அணை முல்லை பெரியாறு அணையைவிட 10 மடங்கு பெரியது. எனவே எந்த ஆபத்தும் ஏற்படாது. மேலும் மக்கள் வசிக்கும் ஊர்கள் அணையைவிட சில ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. எனவே அணை உடைந்தாலும் மக்களுக்கு ஆபத்து ஏற்படாது. இதை நான் சொல்லவில்லை. அணை உடைந்தால் அந்த தண்ணீரை இடுக்கி அணை ஏற்றுக் கொள்ளும் என்று கேரள அரசின் வக்கீல் தண்டபாணியே கூறியுள்ளார்.
 
ஆளுங்கட்சி அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கூட்டாக பதவியை ராஜினாமா செய்யட்டுமே பார்க்கலாம். அடுத்த ஆண்டு என்னவெல்லாம் விலை ஏறுகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
 
இந்தப் பிரச்சனையில் தமிழகத்தை சேர்ந்த 39 எம்.பிக்களும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.



இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் மீது கொலை வெறி தாக்குதல்

 
 
இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலத்தோட்டங்களில் வேலை செய்யும் தமிழர்கள் மீது கேரளாவைச் சேர்ந்தவர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்துகிறார்கள். இதனால் அப்பாவி தமிழர்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு தப்பி வருகிறார்கள்.
 
கேரளா மாநிலத்தில் உள்ள உடுப்பஞ்சோலை, ஆணைக்கல்மெட்டு, ஆட்டுவாரை, மணத்தோடு, தலையங்கம், சதுரங்கப்பாறை, நெடுங்கண்டம், உள்பட பல இடங்களில் 10 ஆயிரம் தமிழ் குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்கள் ஏலத்தோட்டங்கள், காப்பித்தோட்டங்கள், மிளகு தோட்டங்களில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் கேரள அரசு முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கேரளாவில் ஏலத்தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் விரட்டி அடிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்துகிறார்கள். இதில் சிலர் காயம் அடைந்து உள்ளனர்.
 
இதைத்தொடர்ந்து ஏராளமான தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கேரளாவில் இருந்து தமிழக பகுதிக்கு இரவோடு, இரவாக தப்பி வருகிறார்கள். அப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக வசித்த செல்வி (வயது 48), தங்கம் (24), முனீஸ்வரி (26), ஈஸ்வரன் (33), இவருடைய மனைவி காமுத்தாய் (30), மகேஸ்வரி (27), அபர்ணா (4), சக்திகுமார் 2 மாத கைக்குழந்தை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த கங்கா (7), சக்தி பங்காரு (10), சங்கீதா (7) ஆகிய 11 பேர் கேரளாவில் இருந்து தப்பி வந்து உள்ளனர்.
 
இவர்கள் சதுரங்கபாறை மெட்டு வழியாக தமிழகத்திற்கு வந்தனர். அவர்கள் போடி தாலுகா அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கு வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இது பற்றி போடி தாசில்தார் நா.நாகமலை கூறும் போது,
 
கேரள மாநிலத்தில் இருந்து தப்பி ஓடி வந்த தமிழர்கள் 11 பேர் இங்கு தஞ்சம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு உள்ளது. தங்கவும் வசதி செய்து கொடுத்து உள்ளோம். இவர்களில் காமுத்தாய் என்பவரின் கைக்குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அந்த குழந்தைக்கு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.
 
கேரளாவில் தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதல் பற்றி தப்பி வந்தவர்கள் கூறியதாவது: எங்களில் செல்வி, தங்கம், முனீஸ்வரி ஆகியோர் 3 தலைமுறையாக கேரளாவில் வசித்து வருகிறோம். நாங்கள் கஞ்சிகலயம் பகுதியில் உள்ள ஏலத்தோட்டங்களில் கூலி வேலை செய்து வந்தோம்.
 
கேரள அரசு தாக்கல் செய்த மனு கோர்ட்டில் தள்ளு படி செய்யப்பட்டதால், ஏலத்தோட்டங்களில் தங்கி வேலை செய்துவரும் தமிழ் குடும்பத்தினர் மீது கேரளாவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எங்களை அடித்து விரட்டுகிறார்கள். எங்களை தாக்கும் போது விளக்குகளை அணைத்து விடுகிறார்கள். கேபிள் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன.
 
பாரத்தோடு, மைலாடும்பாறை, ஆட்டுவாரை, ஆடுகூந்தல், நெடுங்கண்டம், பாம்பன்பாறை உள்பட அப்பகுதியில் உள்ள ஏலத்தோட்டங்களில் மலையாளிகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து உயிர் பிழைப்பதற்காக நாங்கள் இரவிலேயே தோட்டப்பகுதியில் பதுங்கி இருந்தோம். காலை 7 மணிக்கு வனப்பகுதி வழியாக மாலையில் தேவாரம் வந்து போடி தாலுகா அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தோம்.
 
நாங்கள் கேரள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தால் அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. போலீசாரும் எங்களை தாக்குகிறார்கள். மேற்கண்டவாறு கேரளாவில் இருந்து தப்பி வந்த தமிழர்கள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் உடும்பன்சோலை பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் 25&க்கும் மேற்பட்ட தமிழர்கள் தேவாரம் பகுதிக்கு தப்பி வந்தனர். கேரளாவில் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து தேவாரம் வந்த தமிழர்கள் அப்பகுதிகளில் இருக்கும் அவரவர் உறவினர்களின் வீடுகளுக்கு சென்றனர். இதுகுறித்து தப்பி வந்த தமிழர்கள் கூறியதாவது:
 
வசந்தா (பெருமாள்குளம் எஸ்டேட்) : நான் சிறுவயதில் இருந்தே கேரளாவில் உள்ள எஸ்டேட்களில் தங்கி வேலை செய்கிறேன். முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையினால் எங்களை நேரடியாக தாக்கும் மலையாளிகள் கும்பல் வாய்க்கு வந்தபடி திட்டினார்கள். 1 மணிநேரத்தில் வீட்டை காலி செய்யவேண்டும் இல்லா விட்டால் என்ன நடக்கும் என்றே கூறமுடியாது. என்று மிரட்டினார்கள்.
 
இரவில் கற்களை வீடுகளுக்குள் எறிந்து மனிதாபிமானமே இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். ஆண்டிச்சாமி (பெருமாள் குளம் எஸ்டேட்) : உடுப்பஞ்சோலையில் தமிழர்கள் வாழும் இடங்களில் ஆட்டோக்களில் கும்பலாக வந்த மலையாளிகள் வயதானவர் என்று கூட பார்க்காமல் திட்டி அடித்தனர். உனது ஊருக்கு ஓடுடா என்று விரட்டினார்கள். பஸ்சில் ஏறினால் கேரளாக்காரர்கள் டிக்கெட் தர மறுக்கின்றனர். கம்பம் மெட்டு வழியே பஸ்கள் இல்லாததால் நான் தங்கியுள்ள எஸ்டேட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தூரம் நடந்து சதுரங்கப்பாறை வழியே வந்தேன்.
 
கடந்த 3 நாட்களில் மட்டும் குறைந்தது 1000 தமிழ்க்குடும்பங்கள் வெளியேறி உள்ளன. பலநாட்கள் வேலைசெய்த எஸ்டேட்களில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறி வந்தேன்.
 
தமிழர்களையும், தமிழ்ப்பெண்களையும் மிரட்டுவது குறித்து அங்குள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தேன். போலீசார் வந்து பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நினைத்தால், அவர்கள் உங்கள் ஊருக்கு சென்றுவிடுங்கள் என்றனர். அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.விடம் கூட்டமாக சென்று கூறினோம். தமிழர்கள் தேர்தல் நேரத்தில் உங்களுக்கு தானே ஓட்டுப்போட்டோம் என்றோம். உங்களை மிரட்டத்தானே செய்கிறார்கள். அடித்தால் வந்து சொல்லுங்கள் என்றார்.
 
உயிருக்கு பயந்து மலைப்பாதையின் வழியே ஓடிவந்து தப்பித்தேன். அங்குள்ள தமிழர்கள் கடந்த 3 நாட்களில் அதிகமாக தாக்கப்பட்டுள்ளனர். அங்கு இருக்கும் தமிழர்களும் பாதுகாப்பில்லாமல் இருக்கிறார்கள்.
 
முருகேஸ்வரி (உடுப்பஞ்சோலை): எஸ்டேட்களில் வேலைசெய்து தான் எங்களது வாழ்க்கையே ஓடுகிறது. வயதானவர்கள் முதல் சிறுகுழந்தைகள் வரை விரட்டி அடிக்கப்படுகின்றனர். எஸ்டேட்களுக்குள் புகுந்து, வேலை பார்த்தது போதும் சொந்த ஊருக்கு போங்கள் என்கின்றனர். இரவில் பாதையே தெரியாமல் கற்களையும், முட்களையும் கடந்து தட்டுத்தடுமாறி மலைப்பாதையில் நடந்து வந்தோம்.
 
தமிழர்கள் என்றாலே இழிவாக நடத்துகின்றனர். அங்குள்ள தமிழ்க் குடும்பங்களை காப்பாற்றிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்டவாறு தப்பி வந்த தமிழர்கள் தெரிவித்தனர்.

 


''சுயநலத்துக்காக அணை பகுதியை கேரளத்துடன் இணைத்த டி.என்.பணிக்கர்''

 
 
 
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை தீர்க்க கேரள பகுதியில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உறுமண்சோலை ஆகிய பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
 
நிருபர்களிடம் அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என கேரள அரசு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தொடரும் வழக்குகளை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து வருவது வரவேற்கத்தக்கது.
 
1956ம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பு முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தில்தான் இருந்தது. ஆனால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மாநில எல்லைக்குழு உறுப்பினராக கேரளாவை சேர்ந்த டி.என். பணிக்கர் இருந்தார். அவருக்கு சொந்தமான சொத்துக்கள் இடுக்கி மாவட்டத்தில் இருந்தன.
 
அவை தமிழக பகுதிக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக அந்த பகுதிகளை கேரள மாநிலத்துடன் இணைத்துவிட்டார். அப்போது தமிழர்கள் அதிகம் வாழும் இந்த 3 பகுதிகளையும் தமிழகத்துடன் இணைத்திருந்தால் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஏற்பட்டிருக்காது. அந்த பகுதி மக்கள் தற்போது தமிழகத்துடன் இணைய வேண்டும் என போராடி வருகிறார்கள்.
 
இதனால் இந்தபபிரச்சனைக்கு ஒரே தீர்வு முல்லைப் பெரியாறு அணை பகுதியில் அமைந்துள்ள தேவிகுளம், பீர்மேடு, உறுமண்சோலை ஆகிய வட்டங்களை மீண்டும் தமிழகத்துடன் இணைப்பதுதான். இது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
 
இந்த பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என தமிழக எம்.பிக்கள் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வற்புறுத்தி உள்ளனர்.
 
2006ம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்த போது, அவரால் முன்வைக்கப்பட்ட விவாதங்களை ஏற்றுக்கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வந்த போது தமிழகத்தில் திமுக தான் ஆட்சி நடத்தியது.
 
அப்போது திமுக அரசு நினைத்திருந்தால் அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தி இருக்கலாம். ஆனால் கருணாநிதிக்கு மட்டுமே தெரிந்த காரணத்தினால் அணையின் நீர் மட்டத்தை உயர்த்தவில்லை.
 
தமிழகத்தின் ஆற்று நீர் பிரச்சனைகளில், முல்லைப் பெரியாறு, பாலாறு, காவேரி ஆகிய நதிகளின் உரிமை பிரச்சனைகளில் தமிழக மக்களுக்கு திராவிட கட்சிகள் செய்த துரோகம் மன்னிக்க முடியாதது.
 
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அனைத்து அணைகளிலும் ராணுவத்தினரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது நல்ல யோசனைதான்.
 
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் கேரள அரசிற்கு பொருளாதார தடை ஏற்படும் அளவிற்கு தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் 10 வழிகளையும் ஒரு வாரத்திற்கு மூட வேண்டும். இதனையும் சட்டசபை தீர்மானத்தில் நிறைவேற்றினால் நல்லதுதான். அப்போதுதான் கேரள மக்களுக்கு உண்மை நிலை புரியும்.
 
சகோதர மாநிலங்கள் என கூறி பிரச்சனைகளை கருணாநிதி தட்டி கழித்து வந்தார். ஆனால் அவர்கள் தமிழகத்தை சகோதர மாநிலமாக நினைக்கவில்லை.
 
இந்தப் பிரச்சனையில் தேனி மாவட்டத்தில் தினந்தோறும் 50,000, 1 லட்சம் என மக்கள் வீராவேசத்தோடு தன்னிச்சையாக போராடி வருவது ஒவ்வொரு தமிழனையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. எந்த அரசியல் கட்சிகள் அமைப்புகளின் தூண்டுதல் இல்லாமல் தமிழக மக்கள் தன்னிச்சையாக நடத்தும் இந்தப் போராட்டம் தமிழக வரலாற்றில் பதிவாகும் என்றார் ராமதாஸ்.



பிளஸ்-2 தேர்வு அட்டவணை : தேர்வுத்துறை அறிவிப்பு

 
 
 
 
 
 
பிளஸ்-2 தேர்வுகள் மார்ச் 8-ந் தேதி தொடங்குவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு கால அட்டவணை பின்வருமாறு:-
 
மார்ச்-8-மொழித்தாள் ஒன்று.
 
மார்ச்-9-மொழித்தாள் இரண்டு.
 
மார்ச்-12-ஆங்கிலம் முதல் தாள்.
 
மார்ச்-13-ஆங்கிலம் இரண்டாம் தாள்.
 
மார்ச்-16- இயற்பியல்,பொருளியல்,உளவியல்.
 
மார்ச்-19-கணிதம்,விலங்கியல்,நுண்ணுயிரியல்.
 
மார்ச்-20-வணிகவியல்,புவியியல்,மனையியல்.
 
மார்ச்-22- வேதியியல்,கணக்குப்பதிவியல்,சுருக்கெழுத்து.
 
மார்ச்-26- உயிரியியல்,வரலாறு,தாவரவியல்,அடிப்படை அறிவியல்,வணிகக் கணிதம்.
 
மார்ச்-28- கணினி அறிவியல்,உயிரி வேதியியல்,இந்திய கலாச்சாரம், தொடர்பு ஆங்கிலம், தட்டச்சு,சிறப்பு மொழி.
 
மார்ச்-30- தொழில்கல்வி,தியரி அரசியல், மற்றும் அறிவியல் தேர்வுகள், நர்சிங்,மற்றும் புள்ளியியல்.