Friday, 9 December 2011

ரஜினியை சந்திக்க போகும் அந்த ஒரு ரசிகர்

 
 
 
 
 
மறு ஜென்மம் எடுத்து வந்திருக்கிறார் ரஜினி. இந்த மறுபிறவிக்கு காரணம் மருத்துவம்தான் என்றாலும் ரசிகர்களின் ஓயாத பிரார்த்தனையும் அன்பும் கூட இன்னொரு காரணம் என்று நம்புகிறார் ரஜினி.
 
அவர் எப்போது ரசிகர்களை சந்திப்பார்? மொத்தமாக அனைவரையும் வரவழைத்து சந்திப்பாரா, அல்லது மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டும்தான் அந்த அதிர்ஷ்டம் இருக்கிறதா என்றெல்லாம் குழம்பிப் போயிருக்கிறார்கள் அதே ரசிகர்கள். இந்த நிலையில் முன்னணி வார ஏடு ஒன்று ரஜினி ஸ்பெஷல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
 
இதில் ரஜினி குறித்த ஏராளமான விஷயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. முக்கியமாக அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது இங்கு அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்ட ரசிகர்களை பற்றியும், அலகு காவடி இழுத்தவர்கள் பற்றியும் கூட அதில் தகவல்கள் அடங்கியிருக்கிறது.
 
இதையெல்லாம் வரி விடாமல் படித்து ஆனந்த கண்ணீர் வடித்தாராம் ரஜினி. இந்த அலகு காவடி இழுத்தவருக்கு மட்டும் இப்போது அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. எங்கிருந்தாலும் அவரை நான் பார்க்கணும். அழைச்சிட்டு வாங்க என்று பணித்திருக்கிறாராம் தனது உதவியாளர்களிடம்.



ராஜபாட்டை பாடல்கள் ஒரு பார்வை;

 
 
 
விக்ரம் தீக்ஷா நடிப்பில் சுசிந்திரன் இயக்கத்தில், யுவன் இசையில், யுகபாரதி வரிகளில் ராஜ பாட்டை படத்தின் பாடல்களை பற்றிய சிறு தொகுப்பு இங்கே,
 
* பொடி பையன் போலவே மனம் இன்று துள்ளுதே - இந்த பாடலை ஹரிசரண் பாடியுள்ளார், சென்னை பீச்சில் படமாக்கி உள்ளனர்

* லட்டு லட்டு ரெண்டு லட்டு சேர்ந்து கிடைச்சா லக்கு லக்கு -இந்த பாடல் இத்தாலியில் படமாக்கி உள்ளனர் ,ஸ்ரேயா ,ரீமாவுடன் விக்ரம் அதிரடி ஆட்டம் போட்டுள்ளார், இந்த பாடலை விக்ரம், சுசித்ரா, பிரியதர்ஷினி பாடி உள்ளனர் ,

* வில்லாதி வில்லன்கள் எல்லாரும் என்னை விலை பேச வந்தார்கள் -இந்த பாடலை 1985 களில் உள்ள கிளப் மாடலை, ஏவிஎம் இல் செட் போட்டு படமாக்கி உள்ளனர் , தெலுகு நடிகை சலோனி விக்ரமுடன் ஆட்டம் போட்டு அசத்தி உள்ளாராம் ,இந்த பாடலில் மட்டும் விக்ரம் 7 கெட்டப்புகளில் வராராம், மனோ, மாலதி பாடி உள்ளனர்,

* பனியே பனிபூவே மனம் ஏனோ பறக்குதே தலை கால் புரியாமல் உன்னை பார்த்து சாமி ஆடுதே -இந்த பாடல் இத்தாலியில் படமாக்கி வந்துள்ளனர். ஜாவத் அலி .ரேணு பாடி உள்ளனர், விக்ரம் தீக்ஷா டூயட் பாட்டு இது, நான் மகான் அல்ல படத்தில் இடம் பெற்ற இறகை போலே என்ற பாடல் வரிசையில் பனித்துளி பாட்டு இருக்கும் என்கிறார் இயக்குனர்,
 
ராஜ பாட்டை படம் நில அபகரிப்பு பிரச்னையை சொல்ல போகும் படமாகவும் ,தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையே உள்ள உறவையும் உணர்வையும்
எல்லாம் கலந்த கலவையாக்கி கொடுக்க முயற்சி செய்துள்ளார் சுசி , டிசம்பர் 23ம் தேதி படம் திரைக்கு வர உள்ளது,
 

 


'மம்பட்டியான்'க்கு தடை கோரும் மம்பட்டியான் மகன்!

 
 
 
'மம்பட்டியான்' என்ற சினிமா படத்தை வெளியிட தடைக்கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் மம்பட்டியான் மகன் நல்லப்பன்.
 
சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில், சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த நல்லப்பன் தாக்கல் செய்த மனுவில், "என் தந்தை மம்பட்டியான் என்ற அய்யாத்துரையை முன்விரோதம் காரணமாக கருப்பன் என்பவர் 1964-ம் ஆண்டும் கொலை செய்தார். ஆனால் போலீசார்தான் என் தந்தை மம்பட்டியானை பற்றி தவறான தகவல்களை வெளியிட்டனர். தான் சார்ந்த சமுதாயத்துக்காக பாடுபட்டவர் அவர்.
 
தமிழக அரசு என் தந்தையை பிடிக்க மலபார் போலீஸ் உட்பட பல தனிப்படையை அமைத்தது. என் தந்தை மம்பட்டியான், தமிழகத்தில் பிரபலமானவர். லட்சக்கணக்கான மலைசாதியினராலும், சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களாலும் தலைவனாக போற்றப்படுபவர் அவர்.
 
இந்த நிலையில் என் தந்தையை பற்றிய உண்மைக்கு புறமான தகவலுடன் லட்சுமி சாந்தி மூவிஸ் உரிமையாளர் தியாகராஜன் சினிமா எடுப்பதாக தெரிகிறது. என் தந்தையை பற்றி தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் அது ஏற்படுத்திவிடும்.
 
இதனால் என்னையும், எங்களது குடும்பத்தினரையும் இந்த சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் சூழ்நிலை ஏற்படும். எந்த தவறும் செய்யாத நானும், என் குடும்பத்தாரும் பாதிக்கப்படக்கூடும். எங்கள் சொத்துக்களை பிறர் சேதமடையச் செய்யக்கூடும்.
 
'மம்பட்டியான்' சினிமாவை வியாபார நோக்கத்துடன் தியாகராஜன் எடுத்து வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அவர் எங்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதியை பெறாமலேயே எனது தந்தையின் பெயரில் அவரைப் பற்றி படம் எடுத்து வருகிறார்.
 
எனவே தியாகராஜன் தயாரிப்பில், நடிகர் பிரசாந்த் நடிக்கும் `மம்பட்டியான்' படத்தை வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும். என் தந்தை மம்பட்டியானின் பெயர் அல்லது அவரது வாழ்க்கை பற்றிய எந்த அடையாளங்களையும் வைத்துக்கொண்டு அந்தப் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த மனு சென்னை 8-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி வினோபா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக 12-ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தியாகராஜனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.



கிரிக்கெட்டில் சச்சின் கடவுள்: ஆனால் சேவாக்... ரஜினிகாந்த்!!

 
 
வட இந்திய ஊடகங்களில் இப்போதைய லேட்டஸ்ட் 'ரஜினி கமெண்ட்' இதுதான்.
 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஷேவாக் வெளுத்துக் கட்டிய 219 ரன்கள்தான் இந்த கமெண்டுக்குக் காரணம்.
 
இந்த இரட்டை சதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் உலகிலேயே அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை ஷேவாக் பெறுகிறார். 40ஆண்டுகால ஒரு நாள் போட்டி வரலாற்றில் இதுவே அதிகபட்ச தனிமனித ஸ்கோர். 147 பந்துகளில் 25 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என ரன் மழைதான், இந்தூர் ஸ்டேடியத்தில்.
 
அதேநேரம், அதிகபட்சம் ஸ்கோர் (418 ரன்கள்) செய்த அணி என்ற பெருமையும் இந்திய அணிக்கு கிட்டியுள்ளது.
 
தனது இந்த சாதனை மூலம் கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் ஷேவாக்.
 
ஒருநாள் போட்டியில் மட்டுமல்ல... டெஸ்ட் போட்டியிலும் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமை ஷேவாக்குக்குதான். 319 ரன்கள். (உலக அளவில் இந்த சாதனை லாராவுக்கு மட்டுமே. )
 
இதன் மூலம் டெண்டுல்கரை விட அதிகம் பேசப்படும் கிரிக்கெட் வீரராக ஷேவாக் மாறியுள்ளார்.
 
வட இந்திய மீடியாவில், 'கிரிக்கெட் உலகில் சச்சின் கடவுள் என்றால்... ஷேவாக் தி ரஜினிகாந்த்' என எழுத ஆரம்பித்துள்ளனர்.
 
இந்த கமெண்ட் குறித்து ஒரு கிரிக்கெட் விமர்சகர் கூறுகையில், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் அதிகபட்ச சாதனைகளை வைத்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர்தான். ஒரே ஒரு சதம் அடித்துவிட்டால் 100 சதங்களை பூர்த்தி செய்துவிடுவார். ஆனால் இதற்காக அவர் 17 போட்டிகளை வீணடித்திருக்கிறார். அந்த கோபத்தில் இப்படி கமெண்ட் அடித்துள்ளனர் என்று நினைக்கிறேன்.
 
ஆனால் அடுத்த போட்டியிலேயே தனது 100வது சதத்தை சச்சின் பூர்த்தி செய்துவிட்டால், கடவுளுக்கு மீண்டும் மவுசு வந்துவிடும்," என்றார்.
 
ஒரு கிரிக்கெட் ரசிகர் இதுபற்றிக் கூறுகையில், "இந்த சாதனையெல்லாம் கிடக்கட்டும்.... இந்தியாவில் வெளுத்துக் கட்டுவதா பெரிய விஷயம். வெளிநாடுகளில் சாதனை என்றல்ல... குறைந்தபட்ச வெற்றியையாவது நமது அணி எட்டுகிறதா... இங்கிலாந்தில் பட்ட உதை கொஞ்சமா... இதோ அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார்கள். அங்கே காட்டட்டும் இந்த வீரத்தை!" என்று கொந்தளித்துள்ளார்.
 
நூத்துல ஒரு வார்த்தை!



பல சாதனைகளை படைத்து மேற்கு இந்தியத் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா

 
 
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஷேவாக் விளாசிய 219 ரன்களுடன், அந்த அணியை 153 ரன்களில் வீழ்த்தியதோடு, பல சாதனைகளையும் படைத்து ஒரு நாள் தொடரை வென்றுள்ளது இந்தியா.
 
இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இதில் 2 அணிகளுக்கும் இடையிலான 4வது ஒருநாள் போட்டி நேற்று இந்தூரில் நடைபெற்றது. போட்டியின் 'டாஸ்' வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்து அதிரடியாக ரன்களை குவித்தனர்.
 
துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷேவாக், கம்பிர் ஜோடி துவக்கம் முதலே அதிரடியாக ரன்களை குவித்தனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களை துவஷம் செய்த ஷேவாக் 69 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம் ஷேவாக் கேப்டனாக இருந்து முதல் சதமும், ஒருநாள் அரங்கில் 28வது சதத்தையும் கடந்தார்.
 
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 176 ரன்கள் சேர்த்த போது, காம்பிர் (67) ரன்-அவுட்டானார். அதன்பிறகு வந்த ரெய்னா, ஷேவாக் உடன் ஜோடி சேர்ந்து அரைசதம் கடந்து 55 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டானார். விக்கெட்கள் வீழந்தாலும் ஷேவாக் தொடர்ந்து களத்தில் இருந்ததால், ரன் ரேட் 8 ரன்களை குறையாமல் இருந்தது.
 
பின்னர் வந்த ஜடேஜா 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். மறுபக்கம் ஷேவாக் 170 ரன்கள் எடுத்த போது கொடுத்த எளிய கேட்சை சம்மி கோட்டை விட்டார். அதனால் உஷாரான ஷேவாக் அதிரடி ரன் குவிப்பை தொடர்ந்தார்.
 
7 சிக்ஸ், 25 பவுண்டரிகள் அடித்த ஷேவாக் ஒருநாள் அரங்கில் இரட்டை சதம் கடந்த 2 வீரராக சாதனை படைத்தார். அத்தோடு நில்லாமல் 219 ரன்களைத் தொட்டு புதிய உலக சாதனையையும் படைத்தார்.
 
அவர் 206 ரன்களை கடந்த போது, ஒருநாள் அரங்கில் 8,000 ரன்களை கடந்த 24வது வீரரானார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஷேவாக் 6வது இடத்துக்கு முன்னேறினார். ஷேவாக் 219 ரன்களில் ஆட்டமிழந்தார்.
 
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்களை இழந்து 418 ரன்களை எடுத்தது. இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் 400 ரன்களை 4 முறை கடந்த அணி மற்றும் அதிகபட்ச ரன்கள் எடுத்த அணி உள்ளிட்ட சாதனைகளை இந்திய அணி படைத்தது.
 
பின்னர் ஆடவந்த மேற்குஇந்தியத் தீவுகள் அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 265 ரன்களில் வீழ்ந்தது. அந்த அணியின் ராம்தின் மட்டுமே சிறப்பாக ஆடி 96 ரன்களைக் குவித்தார்.
 
இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ராகுல் சர்மா, ஜடேஜா உள்ளிட்டோர் தலா 3 விக்கெட்களை எடுத்தனர்.
 
இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதிரடியாக இரட்டை சதமடித்து இந்திய வெற்றிக்கு வித்திட்ட ஷேவாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 
சாதனை மழை:
 
டெஸ்ட் போட்டியில் டிரிபிள் சதமும், ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ஷேவாக் படைத்துள்ளார். இவர் டெஸ்ட் போட்டியில் எடுத்த 319 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து அதிரடி வீரர் ஷேவாக் கூறியதாவது,
 
'இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைப்பேன் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. சமீபகாலமாக சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த போதும், எனது பேட்டிங் முறையை நான் மாற்றிக் கொள்ளவில்லை. நான் கொடுத்த எளிமையான கேட்சை, சம்மி கோட்டைவிட்டதை பார்த்த போதே கடவுள் என் பக்கம் இருப்பதாக உணர்ந்தேன், என்றார்.



பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

 
 
பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியரை மாவட்ட கல்வி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
 
கடலூர் அருகே சங்கொலிக்குப்பத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் புதுவை தவளக்குப்பத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (46) ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக சுந்தரமூர்த்தி பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி வந்துள்ளார்.
 
இந்த தகவல் ரகசியமாக இருந்த நிலையில், சில மாணவிகள் மூலம் கசிந்து வெளியே வந்துள்ளது. இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியும், ஆவேசமும் அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள், ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் செல்போனை பறித்து அதனை சோதனை செய்தனர்.
 
அப்போது அதில் பல ஆபாச படங்கள் இருந்தது. ஆத்திரமடைந்த மாணவியரின் பெற்றோர், ஆசிரியர் சுந்தரமூர்த்தியை தாக்க முயன்றனர். அதற்குள் சுந்தரமூர்த்தி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
 
இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் மாணவிகளின் பெற்றோர் தெரிவித்தனர். இதனையடுத்து தொடக்க கல்வி அலுவலர், ஆசிரியர் சுந்தரமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.