Tuesday, 6 December 2011

ஷகீலா படத்துக்கு சாமியார்கள் எதிர்ப்பு!

 
 
 
போலி சாமியார்களின் அராஜகங்களை தோலுரித்துக் காட்டும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஷகீலா நடித்திருக்கும் ஆசாமி என்ற படத்திற்கு சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏழுமலையான் மூவிஸ், லலிதா பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ஆசாமி. சந்தான பாரதி, ஷகிலா, அனுமோகன், பாண்டு ஆகிய 4 பேர்களும் போலி சாமியார்களாக நடித்துள்ளனர். சட்டத்தில் இருந்தும், சமுதாயத்தில் இருந்தும் தந்திரமாக தப்பிக்கும் இவர்களை, அம்மன் அருள் பெற்ற 16 வயது பெண் அழிப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
 
அம்மன் அருள் பெற்ற பெண்ணாக புதுச்சேரியை சேர்ந்த பிரியங்கா நடித்து இருக்கிறார். ஆண்டாள் ரமேஷ் படத்தை இயக்கியிருப்பதுடன், புதுச்சேரி செந்தாமரை கண்ணனுடன் இணைந்து படத்தை தயாரித்து இருக்கிறார். சென்னை, புதுச்சேரி, வடலூர், நெய்வேலி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது. இந்த படத்துக்கு சாமியார்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். படத்தை திரைக்கு கொண்டுவர விடமாட்டோம் என்று கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



சென்னை திரும்பினார் ஊழல்ராணி... விமான நிலையத்தில் கருணாநிதி வரவேற்பு

 
 
 
கலைஞர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பி.யுமான கனிமொழி, 2ஜி அலைவரிசை வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
 
டெல்லி திகார் சிறையில் 194 நாட்கள் இருந்த அவர் கடந்த மாதம் 28-ந்தேதி ஜாமீனில் விடுதலை ஆனார். அவருடன் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 5 பேர் ஜாமீன் பெற்றனர். கனிமொழிக்கு 28-ந்தேதி டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது என்றாலும் கோர்ட்டு உத்தரவு மற்றும் ஆவணங்கள் பெறுவதில் ஏற்பட்ட தாமதத்தால் 29-ந்தேதி இரவு 7 மணி அளவில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
 
ஆனால் வழக்கு விசாரணை நடைபெறும் நாளில் டெல்லியில் இருக்க வேண்டும் என்பதால் அங்கேயே தங்கி இருந்தார். இன்று சி.பி.ஐ. கோர்ட்டுக்கு விடுமுறை என்பதால் 200 நாட்களுக்கு பிறகு சென்னை திரும்ப முடிவு செய்தார்.
 
அதன்படி இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் கனிமொழி எம்.பி.யை சென்னைக்கு வழியனுப்பி வைத்தனர்.
 
டெல்லி விமான நிலையத்தில் கனிமொழி நிருபர்களிடம் கூறுகையில், "2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் என் மீது குற்றமில்லை என்பதை நிரூபிப்பேன், இந்த வழக்கில் பலரும் விடுதலையானது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
 
மதியம் 1.45 மணி அளவில் கனிமொழி சென்னை வந்து சேர்ந்ததும் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதி விமான நிலையம் சென்று வரவேற்றார். ராஜாத்தி அம்மாளும் உடன் சென்றார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தயாளுஅம்மாள், செல்வி, மு.க. தமிழரசு, மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், பொங்கலூர் பழனிச்சாமி, ஐ.பெரியசாமி, மைதீன்கான், சுப.தங்கவேலன், பூங்கோதை, தமிழரசி, சற்குணபாண்டியன், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், நடிகை குஷ்பு மற்றும் செ. குப்புசாமி, எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயதுரை மற்றும் எப்.எம்.ராஜரத்தினம், கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கனிமொழியை வரவேற்க தி.மு.க. கொடியுடன் விமான நிலையத்தில் குவிந்தனர்.
 
கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது தொண்டர்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். கனிமொழி விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் அவரை வரவேற்கும் வகையில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. தி.மு.க. கொடிகளும் பேனருடன் இடம் பெற்றிருந்தன.
 
மானமிகு கனிமொழி கருணாநிதி அவர்களே வருக, இனமான எழுச்சியே வருக, இரும்பு கூண்டின் பூட்டு திறந்தது.. பாட்டுக்குயிலே... கனிமொழியே வருக, சூழ்ச்சி மேகங்களை சுட்டெரித்து வரும் சூரிய கதிரே வருக, ஆறுதல் கூற வந்தவர்களை நலம் விசாரித்து ஆறுதல் கூறி அனுப்பிய கனிமொழியே வருக, சோதனை பொறுத்தாய்.. தண்டனை பொறுத்தாய்... பொறுத்தார் பூமி ஆள்வார், இயக்கத்தின் தியாகமே, ஏழைகளின் இதயமே வருக... வருக.., எறும்புக்கும் தீங்கு இழைக்காத உனக்கு இத்தனை துயரங்கள் எதற்கு? என்பன போன்ற வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.



நண்பனுக்காக வரும் அமீர்கான் !

 
 
 
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் பொங்கல் 2012ல் வெளியாக இருக்கும் படம் ' நண்பன் '. இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ' 3 இடியட்ஸ் ' படத்தின் ரீமேக் ' நண்பன்' .
 
ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். இலியானா நாயகியாக நடிக்க ஜெமினி நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 14ம் தேதி நேரு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார்கள்.
 
3 இடியட்ஸ் படத்தின் நாயகன் அமீர்கான் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளக்கூடும் என்கிறார்கள்.
 
டிசம்பர் 14ம் தேதி இசை வெளியான உடன் இப்படத்தினை தொடர்ந்து விளம்பரப்படுத்தி ஜனவரி 14ல் உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்கள்.



ஜெ. மீது நடவடிக்கை எடுக்கச்சொன்னால் என்னை மிரட்டுகிறார்: ஸ்டாலின்

 
 
 
சிறுதாவூரிலும், கொடநாட்டிலும் முதல்வர் ஜெயலலிதா நிலத்தை அபகரித்துக் கொண்டிருப்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டால் சட்டத்துறை அமைச்சர் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுகிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 
சிறுதாவூரிலும், கொடநாட்டிலும் ஜெயலலிதா தனது பினாமிகள் பெயரால் நிலத்தை அபகரித்துக் கொண்டிருக்கிறாரே, அதன் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேட்டதற்கு, சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டியிருக்கிறார்.
 
சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது டாக்டர் ராணி என்பவர் புகார் கொடுத்த போது போலீசார் அதனை வாங்க மறுத்ததால், டாக்டர் ராணி நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்து, நீதிபதி உடனடியாக காவல் துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என்றும், அதற்கான அறிக்கையை வரும் 9ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் கூறியிருக்கிறார்.
 
அதற்கு பதில் சொல்ல முடியாத அமைச்சர் தான் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக சொல்லியிருக்கிறார். அதனைச் சட்டப்படியே சந்திக்க தயாராக நான் இருக்கிறேன்.
 
நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் உள்ள தேயிலை எஸ்டேட் அருகே உள்ள அண்ணா நகர், காமராஜர் நகர் பகுதி மக்கள் எஸ்டேட் வழியாகச் செல்லும் சாலையைத் தான் பயன்படுத்தி வந்தார்கள்.
 
ஆனால் ஜெயலலிதா அங்கே வந்து தங்க ஆரம்பித்த பிறகு, அந்த சாலையை மூடி விட்டதால், அதை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது.
 
உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுக்குட்பட்டு சாலையைத் திறந்து விட உத்தரவிட்டும், அதனை ஏற்காததால், 19-3-2011 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குந்தகம் சர்மா, அனில் தவே ஆகியோர் 900 ஏக்கர் பரப்பளவிலான எஸ்டேட்டில், இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலையை கிராம மக்கள் பயன்பாட்டிற்காக 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
 
இதைத் தான் நான் சுருக்கமாக நில அபகரிப்பு என்ற பெயரால் கழகத்தினர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் அதிமுக அரசு, இந்த நில அபகரிப்புகளுக்கும் நடவடிக்கை எடுக்குமா? என்று எனது பேட்டியில் கேட்டிருந்தேன்.
 
இதற்கு பதில் அமைச்சர் பரஞ்சோதி தான் சொல்லியிருக்கிறார். தற்போது நான் கேட்டுள்ள இந்த விளக்கங்களின் மீது அந்த அமைச்சரோ, முதலமைச்சரோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறார்களா? என்பது தான் இப்போதும் என் கேள்வி என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.



விஜயின் துப்பாக்கி படத்தில் தனது கேரக்டர் குறித்து காஜல் அகர்வால் !

 
 
 
'எனது ஒரிஜினல் குணம் கொண்ட வேடத்தில் விஜய்யுடன் நடிக்கிறேன்' என்றார் காஜல் அகர்வால்.
விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'துப்பாக்கி' படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: விஜய், முருகதாஸுடன் பணியாற்ற ஆசை. அதற்கான வாய்ப்பு இப்படத்தில் கிடைத்துள்ளது. இது கமர்ஷியல் படம். எனது ஒரிஜினல் கேரக்டர் எப்படி இருக்குமோ அதேபோன்று வேடமும் அமைந்திருக்கிறது. முருகதாஸ் படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும். அதுபோல் இதிலும் அமைந்துள்ளது. மும்பையில் இதன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.




ஒய் திஸ் கொலைவெறிம்மா: ஜெ.வைப் பார்த்து மக்கள் கேட்கிறார்கள்-குஷ்பு

 
 
 
பால் விலை, பேருந்து கட்டணத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து ஏன் இந்த கொலைவெறிம்மா? உங்களுக்கு வாக்களித்தற்காகவா என்று கேட்கிறார்கள் என்று நடிகை குஷ்பு திமுக கண்டன பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
 
பால் விலை, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் தி.நகர் பஸ் நிலையம் அருகே சில தினங்களுக்கு நடந்த கண்டனப் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் குஷ்பு பேசுகையில்,
 
அம்மையார் ஜெயலலிதா சர்வாதிகாரி ஹிட்லர் போன்று ஆட்சி நடத்துறாங்க. ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வித் திட்டத்தில் கை வைச்சாங்க. அதனால குழந்தைகள் எல்லாம் 3 மாதமாக பாடம் படிக்காம சும்மா பள்ளிக்கூடம் போனாங்க.
 
பசங்க படிப்பை 3 மாதம் கெடுத்தது போதாதென்று புத்தகங்களில் சில பக்கங்கள் மீது பேப்பரை ஒட்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் மறுபடியும் வேற பேப்பரை ஒட்டி ரூ.200 கோடிக்கு மேல் செலவு செஞ்சிருக்கீங்க. அந்த வீண் செலவை மிச்சப்படுத்தியிருந்தா பால் விலையை ஏற்றியிருக்க வேண்டாமே.
 
மக்களுடைய வரிப் பணத்தில் கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை தலைவர் கருணாநிதி கட்டியதால் அவருக்கு பெருமை சேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக நான் அந்த கட்டிடத்தில் கால் வைக்க மாட்டேன் என்று சொல்லி, கோட்டைக்கு போனீங்க. புதிய தலைமைச் செயலகத்தில் சட்டமன்றத்தை உங்களால் நடத்த முடியாதா என்ன?, எல்லாம் வாஸ்து படு்ததுற பாடு. படிச்ச காலத்தில வாஸ்து சாஸ்திரம் பார்க்கிறீங்க.
 
அரசாங்கம் வருடத்திற்கு ஒரு முறை தான் பட்ஜெட் போடும். ஆனால் குடும்பத் தலைவிகள் மாதாமாதம் பட்ஜெட் போடுவாங்க. ரூ.1000க்கு வாங்கிய பால் தற்போது ரூ.1500 ஆகவும், ரூ.1300 ஆக இருந்த பஸ் கட்டணம் ரூ.1,800 ஆகவும் உயர்ந்துவிட்டது. 5,10 வேண்டும் என்று அக்கம்பக்கத்தில் வாங்கிவிட்டு அடுத்த மாசம் கொடுத்திடலாம். ரூ.200 தேவைப்பட்டால் சொந்தக்காரங்க, நண்பர்கள்கிட்ட கேட்கலாம். ஆனால் ரூ.2,000, 3,000 அல்லவா பட்ஜெட்டில் இடிக்கிறது. மாதம் ரூ.5,000, 6,000 சம்பளம் வாங்குகிறவர்கள் எல்லாம் எங்க போறது?.
 
குழந்தைகளுக்கு ஒரு வேலை சோறு கொடுக்க முடியாட்டியும் பால் கொடுத்து தூங்க வைக்கலாம். ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் தாய்மார்கள் கண்ணீர் அதுவும் ரத்தக் கண்ணீர் வடிக்கிறாங்க. வெளியே போயிட்டு வீட்டுக்கு வர்ற ஆண்கள் ஒரு டம்ளர் காபி கேட்க பயப்படுகிறாங்க. அதற்கு காரணம் ஜெயலலிதா அம்மையார் தான். அவங்களுக்கு என்ன ஏசி வண்டில சுத்திக்கிட்டு, கொடநாடு போய் ஜாலியாக இருப்பாங்க. கஷ்டப்படுவது எல்லாம் தமிழக மக்கள் தான்.
 
அந்த அம்மையார் கர்நாடக நீதிமன்றத்திற்கு போய் 1,400 கேள்விகளுக்குப் பதில் சொல்லிட்டு வந்தாங்க. ஆனால் தமிழக மக்கள் அந்த அம்மாவைப் பார்த்து ஒரேயொரு கேள்வி கேட்டுக்கிட்டே இருக்காங்க. அந்த அம்மா அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டார்கள். பதில் தெரிந்தால் தானே சொல்வதற்கு.
 
அந்த அம்மாவைப் பார்த்து தமிழக மக்கள் ஏன் எங்களை இப்படி பழிவாங்குறீங்க என்ற ஒரு கேள்வியைத் தான் கேட்கிறாங்க. நாங்களும் அதைத் தான் கேட்கிறோம்.
 
பொய் வழக்கு போட்டு திமுகவினரை கைது செய்து அவர்கள் மீது மேல் மேலும் பல வழக்குகளைப் போடுறீங்க. எல்லாம் பொய் வழ்ககுகள். கடந்த 6 மாதமா இதைப் பார்த்து பார்த்து தமிழக மக்களுக்கும் போர் அடிச்சிடுச்சு.
 
தினமும் காலையில எழுந்து பேப்பரைப் பார்த்தா யாராவது திமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்திருப்பாங்க. அதைப் படிக்கும் மக்கள் இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்லையான்னு நினைக்கிறாங்க. அவங்களுக்கு வேலை எதுவும் இல்லைன்னு தான் நானும் நினைக்கிறேன்.
 
காலை எழுந்து காபியைக் குடிச்சதும் இன்றைக்கு யாரை கைது செய்யலாம், என்ன பொய் வழக்கு போடலாம் என்று தான் நினைக்கிறாங்க.
 
கருணாநிதி ஆட்சியில் நிம்மதியா, சந்தோஷமா இருந்த தமிழக மக்கள் அந்த அம்மா ஆட்சியில் கண்ணீர் வடிக்கிறாங்க. ஏன் இந்த கொலைவெறி?- இதுதான் தமிழக மக்கள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்துக் கேட்கும் கேள்வி.
 
ஒய் திஸ் கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறிமா என்று கேட்கிறாங்க. ஏன் இப்படி மக்களை பழிவாங்குகிறீங்க என்று நான் ஒரு அதிமுகவைச் சேர்ந்தவரிடம் கேட்டேன். அதற்கு அவர், 1996, 2006 தேர்தல்களில் எங்களுக்கு வாக்களிக்காததற்கு பழிவாங்க வேண்டாமா என்றார். பழிவாங்குறத்துக்கா மக்கள் வாக்களித்தனர்.
 
நீங்கள் எல்லாம் கருணாநிதி ஆட்சியில் அனைத்தையும் பார்த்ததால் ஒரு மாற்றம் வேண்டி அவங்களுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சீங்க. மாற்றம் வேண்டியவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டும் தான். அந்த அம்மா தேர்தல் நேரத்தில எவ்வளவு பொய் சொன்னாங்க. அத தர்றேன், இத தர்றேன், அத செய்வேன், இத செய்வேன்னு ஏதாவது செய்தாங்களா. இந்த 6 மாதத்தில் மக்களுக்கு உதவுகிற மாதிரி ஏதாவது ஒரு நலத்திட்டம் கொண்டு வந்தாங்கன்னு யாராவது சொல்ல முடியுமா?.
 
காவல்துறை மேலிடத்து உத்தரவுபடி திமுகவினரை கைது செய்வதில் பிசியாக இருக்கு. அதனால் மக்களைப் பாதுகாக்க அவர்களுக்கு நேரமில்லை.
 
வெய்யிலின் அருமை நிழலில் தெரியும் என்பது போல கருணாநிதி ஆட்சியின் அருமையை மக்கள் தற்போது தான் உணர்கின்றனர். தலைவரின் அருமை, பெருமையை மக்கள் உணரக் காரணமா இருக்கும் அதிமுகவுக்கு நன்றி.
 
இந்த அம்மா சமீபத்தில் தான் கொடநாடு போனாங்க, இப்ப ஏன் மீண்டும் போகனும். கருணாநிதி என்னைக்காவது லீவு எடுத்துக்கிட்டு எங்காவது போனாரா? 24 மணி நேரமும் மக்களுக்காக பாடுபடும் ஒரே தலைவர் அவர் தான்.
 
பம்பரம் கூட சாட்டை இருந்தால் தான் சுத்தும். ஆனால் நம்ம தளபதி பதவி என்னும் சாட்டை இல்லாமலே தமிழகத்தை சுற்றி வருகிறார். யாருக்காக, எல்லாம் மக்களுக்காக.
 
புத்திசாலித்தனமா உள்ளாட்சித் தேர்தல் முடிந்த கையோடு வரியை ஏத்திட்டாங்க. அதுவே முன்னாடி செய்திருந்தா ஒரு ஓட்டு கூட கிடைத்திருக்காது. பெரிய புத்திசாலின்னு நெனப்பு. ஆனால் தமிழக மக்கள் கேள்வி கேட்கப் போகிறார்கள். அந்த நேரம் கூடிய சீக்கிரம் வரும். அதற்காக 5 வருஷம் காத்திருக்க வேண்டாம்.
 
கஷ்டத்தில் இருக்கையில் குரல் கொடுத்தா உதவ கோபாலபுரம் இருக்கு. கஷ்டத்தில் ஆறுதல் தரும் ஆலயம் போல அண்ணா அறிவாலயம் என்னைக்குமே இருக்கு. நம்ம தலைவரும், தளபதியும் மூச்சிருக்கும் வரை தமிழக மக்களை கைவிடமாட்டார்கள் என்றார்.



கொலவெறிக்கு தங்க மெடல் !

 
 
 
தனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் இதுவரை பல்வேறு சாதனைகளை கடந்து உள்ளது.
 
புதிய சாதனையாக YOUTUBE இணையதளம் RECENTLY MORE POPULAR என்கிற பிரிவில் WHY THIS KOLAVERI வீடியோ பதிவிற்கு தங்க மெடல் கொடுத்து கெளரவித்துள்ளது.
 
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமா பாடலொன்று YOUTUBE இணையத்தின் மூலம் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. உலகத்தின் பல பகுதிகளில் இப்பாடல் பிரபலமாகி விட்டது. YOUTUBE இணையத்தில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 1.5 கோடியை தாண்டியுள்ளது.
 
YOUTUBE இணையத்தில் சோனி நிறுவனம் பதிவேற்றம் செய்த வீடியோ பதிவு மட்டுமல்லாமல் பலர் தங்களது வயலின் வெர்ஷன், கிட்டார் வெர்ஷன், பெண்கள் வெர்ஷன் என தாங்களாக பாடி இப்பாடலை பதிவேற்றம் செய்துள்ளார்கள்.
 
உலகம் முழுவதும் சாதனை செய்து வரும் இப்பாடல் வரிகளுக்கு கவிஞர் யுகபாரதி மற்றும் இந்தியில் முன்னணி பாடலாசிரியராக திகழும் ஜாவித் அக்தர் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.



பிரசன்னாவுடன் திருமணம் எப்போது? சினேகா பேட்டி

 
 
 
சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனை பிரசன்னா சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறும்போது, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது இருவருக்கும் தொழில் ரீதியான நட்பு இருந்தது. அதன் பிறகு சினேகா நடவடிக்கைகளில் ஈர்ப்பானேன். அவர் பெரிய நடிகை ஆனாலும் தலைக்கனமோ, பந்தாவோ இல்லாமல் பழகினார். அந்த குணங்கள் எனக்கு பிடித்தது.
 
மூன்றரை வருடங்கள் எங்களுக்குள் காதல் இருந்தது. அவசரப்படாமல் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள கால அவகாசம் எடுத்தோம். நிறைய யோசித்தோம். இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். இரு வீட்டு குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டனர். திருமணம் மற்றும் நிச்சயதார்த்த தேதிகளை அவர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
 
திருமணம் குறித்து சினேகா இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார்.
 
திருமணம் எப்போது என்று அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டோம் என்றார். ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் முடிந்ததும் திருமணம் நடக்கும் என தெரிகிறது.



மீண்டும் ஷங்கர்-ரஜினி

 
 
 
நமது வாசகர்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் நியூஸ் இது. மறுபடியும் ஒன்று சேர்ந்து ஒரு மெகா ஹிட்டுக்கு அஸ்திவாரம் போட்டுவிட்டார்கள் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும், சூப்பர் ஸ்டார் ரஜினியும். 'நண்பன்' படத்தில் மூழ்கியிருந்த ஷங்கர் கடந்த சில வாரங்களாக முழுக்க முழுக்க இந்த ரஜினி படத்திற்காக நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறார். இதையடுத்து ஏராளமான கேள்விகள் எழுந்திருக்கிறது கோடம்பாக்கத்தில்.
 
அப்படியென்றால் ராணா என்னவாகும் என்பதுதான் முதல் கேள்வி. கோச்சடையான் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு நேரடியாக ஷங்கர் படத்திற்குதான் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் ரஜினி. கோச்சடையான் படத்தில் கூட ரஜினி சில காட்சிகளில்தான் தோன்றப் போவதாகவும் தகவல். அதாவது இவரே கோச்சடையான் கெட்டப்பில் தோன்றி தனது கதையை கூற ஆரம்பிப்பாராம். சில வார்த்தைகளில் இவர் கதையை சொல்லிக் கொண்டிருக்கும் போதே சட்டென்று அனிமேஷன் உருவத்திற்கு தாவ ஆரம்பித்துவிடும் காட்சிகள். இப்படி இடையிடையே ரஜினி தோன்றி தோன்றி முழு கதையையும் நகர்த்திச் செல்வதாக திட்டமாம்.
 
அதுமட்டுமல்ல, இந்த கோச்சடையானுக்காக ரஜினி அதிகபட்சமாக பத்தே நாட்கள்தான் ஒதுக்கப் போகிறாராம். இப்படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு ஷங்கர் படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார் ரஜினி என்கிறது சில தகவல்கள்.
 
இந்த புதிய படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்கிறார். அவரிடமும் பேசி கதை சுருக்கத்தை சொல்லியிருக்கிறாராம் ஷங்கர்.
 
அப்படியென்றால் கே.எஸ்.ரவிகுமார்? ராணா வரும் வரும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஒருவேளை வந்தால், ரவிகுமார் இருப்பார் அதில்.



சூடு பிடித்த எந்திரன் கதைத் திருட்டு வழக்கு! சிக்கலில் கலாநிதி மாறன்!

 
 
 
எந்திரன் கதைத் திருட்டு வழக்கு விறுவிறுப்பான திருப்பத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது என்ன? முதலில் வழக்கின் விபரத்தைப் பார்ப்போம்.
 
நக்கீரன் குழும வெளியீடான 'இனிய உதயம்' இலக்கிய பத்திரிகையில் 96ல் வெளியான ஜூகிபா என்கிற ரொபாட் தொடர்பான தனது கதையை அப்பட்டமாகத் திருடி ரஜினியின் 'எந்திரன்' படம் எடுக்கப்பட்டிருக்கிறது என புகார்க் குரல் கொடுத்த எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஆரூர் தமிழ்நாடன், கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகர கமிஷனர் ராஜேந்திரனிடம் எந்திரன் படத்தயாரிப்பாளர் சன் டி.வி.கலாநிதி மாறன் மீதும் படத்தின் இயக்குநர் சங்கர் மீதும் குற்றவியல் புகாரைக் கொடுத்தார்.
 
ஜூகிபா கதையையும் எந்திரன் படத்தையும் ஒப்பிட்டுப்பார்த்த காவல்துறை அதிகாரிகள், புகாரில் நம்பகத்தன்மை இருக்கிறது என்று தெரிவித்ததோடு ஆளும்கட்சியின் செல்வாக்குள்ள கலாநிதி மாறன் பெயரை மட்டும் புகாரில் இருந்து நீக்கிவிடுங்கள் என்று வலியுறுத்தினர். இதை தமிழ்நாடனும் அவரது வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொள்ளாததால் புகாரை ஏற்கமறுத்துவிட்டது அன்றைய காவல்துறை.
 
 
இதைத் தொடர்ந்து கதைத் திருட்டு மூலம் மோசடி செய்ததாகவும் இந்திய பதிப்புரிமை சட்டத்திற்கு முரணாக நடந்துகொண்டதாகவும் கலாநிதி மாறன், சங்கர் ஆகியோர் மீது எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததோடு, இவர்களிடம் நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கையும் தமிழ்நாடன் தரப்பு தொடர்ந்தது.
 
 
தமிழ்நாடன் சார்பாக சீனியர் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் மற்றும் எட்விக், சிவகுமார் ஆகியோர் ஆஜரானார்கள். சாட்சிகளை விசாரித்து, ஆவணங்களை பரிசீலனை செய்த பிறகு எழும்பூர் 13வது நீதிமன்றம் கலாநிதி மாறனையும் சங்கரையும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அதிரடியாக சம்மனைப் பிறப்பித்தது.
 
 
இதைத் தொடர்ந்து அவசர அவசரமாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய கலாநிதி மாறனும் சங்கரும், கோர்ட்டில் ஆஜராகாமல் இருக்க இடைக்காலத் தடையை வாங்கினர்.
 
 
இந்த நிலையில் இவர்களது தடையை நீக்கும்படி தமிழ்நாடனின் வழக்கறிஞர்களான பி.டி.பெருமாள், எட்விக், சிவகுமார் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கலாநிதி மாறன் சார்பாக மூத்த வழக்கறிஞரும் முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான பி.எஸ்.ராமன் ஆஜரானார். வழக்கை நீதியரசர் ஆறுமுகசாமி விசாரித்தார்.
 
 
அப்போது கலாநிதி தரப்பு, கால அவகாசம் கேட்க, நீதியரசரோ இதற்கு மேல் கால நீட்டிப்பு தரமுடியாது என்றபடி ஒரு வார காலம் மட்டும் அவகாசம் கொடுத்து வழக்கை டிசம்பர் 9ந் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார். அன்று விசாரணை தொடங்குகிறது.
 
 
வழக்கு எப்படி போகும் என்பதைத் தீர்மானிக்கும் நாள் அது என்பதால், இருதரப்பும் அந்த நாளை பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.
 
 
இணையதள நேயர்களான நாமும் பலத்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.