Thursday, 17 November 2011

தனுஷின் ‘மயக்கம் என்ன' ரிலீஸ் தேதி அறிவிப்பு

 
 
 
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'மயக்கம் என்ன' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் நவம்பர் 25-ஆம் தேதி திரைக்கு வரும் என செல்வராகவன் தெரிவித்தார்.
 
இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் அனைத்துப் பாடல்களையும் தனுஷ் மற்றும் செல்வராகவனும் இணைந்து எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



2வது டெஸ்ட்டில் இந்தியாவுக்கு இன்னிங்க்ஸ் வெற்றி

 
 
 
கொல்கத்தாவில் நடந்த இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்க்ஸ் மற்றும் 15 ரன்களில் வெற்றி பெற்றது.
 
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடந்தது. 'டாஸ்' வென்று முதல் இன்னிங்க்ஸ்சை விளையாடிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 631 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. டிராவிட், லட்சுமணன், டோணி ஆகியோர் சதமடித்து கலக்கினர்.
 
பின்னர் முதல் இன்னிங்சை துவக்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் 2வது நாள் முடிவில் ஏ.பரத் (1), பிரத்வோய்ட் (17) ஆகியோர் ஆட்டமிழந்து, 34 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 3ம் நாள் ஆட்டத்தை இன்று காலையில் துவங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தது.
 
ஆட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் எட்வர்ட் (16) அவுட்டானார். சற்று நிலைத்து ஆடிய பிரவோ (30), சந்தர்பால் (4) சாமுவேல்ஸ் (25), சம்மி (18) ஆகியோரும் அவுட்டாகினர். பின்னர் ரோச் (2), பாக் (13), எட்வேர்ட் (16) என்று வந்தவர்கள் அனைவரும் வரிசையாக பிரிவிலியனை நோக்கி நடையை கட்டினர். காலை 11 மணிக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்த மேற்கிந்திய தீவுகள் 153 ரன்களில் சுருண்டது.
 
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி பாலோ-ஆன்னாக 2ம் இன்னிங்க்சை தொடர்ந்தது. 2ம் இன்னிங்க்சின் முதல் விக்கெட்டாக யாதவ் பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து பரத்வேய்ட் (9) வெளியேறினார். அதன்பின் விக்கெட் இழப்பை தடுக்க போராடிய அட்ரீயன் பரத் (62), கிரிக் எட்வர்ட்ஸ் (60) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
 
அதன்பின் தோல்வியை தவிர்க்கும் நிலையில் டெரன் பிராவோ, சந்தர்பால் ஜோடி பொறுப்பாக விளையாடியது. 3ம் நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 3 விக்கெட்களை இழந்து 195 ரன்களை எடுத்திருந்தது. டெரன் பிராவோ (38), சந்தர்பால் (21) ஆகியோர் களத்தில் இருந்தனர்.
 
4ம் நாள் ஆட்டம் துவங்கிய சில அரை மணி நேரத்தில் சந்தர்பால் (47) ஆட்டமிழந்தார். இதனால் 3 ரன்களில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதன்பிறகு சிறப்பான ஆடிய பிராவோ (136) ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பாக் 3 ரன்களில் ஓஜா பந்தில் கேட்சு கொடுத்து அவுட்டானார். சாமுவேல்ஸ் (84) ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் அளித்தார். 3 சிக்ஸ்கள் அடித்து சற்று நேரம் இந்தியா ரசிகர்களை பயப்படுத்திய சம்மி (32) யாதவ்விடம் போல்டானார்.
 
பின்னர் ரோச் (1), பிஷூ (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மேற்கிந்திய தீவுகளின் 2வது இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்தது. மேற்கிந்திய தீவுகள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 463 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 1 இன்னிங்க்ஸ், 15 ரன்களில் வெற்றி பெற்றது.
 
இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உமேஷ் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார். இஷாந்த் சர்மா, ஓஜா, அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
 
சதமடித்து வெற்றிக்கு உதவிய லட்சுமண் ஆட்டநாயகனாக தேர்வு
 
இந்தியாவின் வெற்றிக்குப் பேருதவி புரிந்த விவிஎஸ் லட்சுமண் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 12 பவுண்டரிகளுடன் 176 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் லட்சுமண் என்பது குறிப்பிடத்தக்கது.



பில்லா-2 வில் அஜித்துடன் மீனாக்ஷி தீட்சித்

 
 
 
அஜீத் நடிப்பில் மெகா ஹிட்டான பில்லா படத்தை தொடர்ந்து, பில்லா 2 படத்தில் அஜித் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜுலை மாதம் தொடங்கியது. இப்படத்தை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி இயக்குகிறார்.
 
இப்படத்தில் தெலுங்கு திரைப்பட உலகில் 'தூக்குடு' படத்தின் மூலம் பிரபலமான மீனாக்ஷி தீட்சித் அஜித்துடன் சேர்ந்து ஒரு குத்தாட்டம் ஆடியுள்ளார். பில்லா படத்தில் யுவன் சங்கர் இசையில் நமீதா ஆடிய 'ஏதாவது செய்' என்ற குத்துப்பாடல் மெகா ஹிட்டானது. அதேபோல் பில்லா 2 விலும் மீனாக்ஷி தீட்சித் ஆடிய குத்தாட்டம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


போப்ஆண்டவர்-இமாம், ஒபாமா-சீன அதிபர் தலைவர்கள் முத்தமிட்ட படங்களால் சர்ச்சை

 
 
 
இத்தாலியை சேர்ந்த நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் போப்பும், இமாமும் உதட்டில் முத்தம் கொடுத்துக் கொள்வது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இது பெரும் பரபரப்புக்கும், கண்டனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது.
 
இத்தாலியை சேர்ந்த "பெனட்டான்" என்ற நிறுவனம் உலக மக்களை கவருவதற்காக வித்தியாசமாக யோசித்து 6 வகையான விளம்பரங்களை தயாரித்தது. "அன்ஹேட்" (வெறுப்பில்லை) என்ற தலைப்பில் பிரபலமான உலக தலைவகள் 6 பேரின் போட்டோக்கள் இந்த விளம்பரத்தில் பயன் படுத்தப்பட்டுள்ளன. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஆட்சேபகரமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள அந்த விளம்பரம் பெருத்த சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
 
ஒரு விளம்பரத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், சீன அதிபர் ஹஜிண்டாவோவும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுத்துக் கொள்வது போன்று உள்ளது. இதுகூட பரவாயில்லை. மற்றொரு விளம்பரம்தான் பலரின் கோபத்தை கிளறி விட்டுள்ளது. போப் 16-ம் பெனடிக், எகிப்து நாட்டைச் சேர்ந்த இமாம் அகமது எல் தய்யேப் இருவரும் வாயுடன் வாய் வைத்து முத்தமிட்டுக் கொண்டு இருப்பது போன்று மற்றொரு விளம்பரத்தில் உள்ளது.
 
அதேபோல இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெடன்யாகு, பாலஸ்தீன தலைவர் முகம்மது அப்பாஸ் ஆகியோர் முத்தமிட்டப்படி இருப்பது போன்று மற்றொரு விளம்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உலக பிரபலங்கள் ஆறு பேரை வைத்து 6 விதமான விளம்பரங்களை தயாரித்து, பெனட்டன் நிறுவனம் முக்கிய இடங்களில் வைத்துள்ளது. உலகம் முழுவதும் இந்த விளம்பரத்தை கொண்டு செல்ல அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
இந்த விளம்பரங்கள் பலத்த சர்ச்சையையும், பெருத்த கண்டனங்களையும் சம்பாதித்துள்ளது. குறிப்பாக முஸ்லிம் நாடுகளும், தலைவர்களும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். இந்த விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும், மேற்கொண்டு வேறு எங்கும் இந்த விளம்பரத்தை பயன்படுத்தக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். விளம்பரங்களில் இந்த உலக தலைவர்களின் படங்களை பயன்படுத்திக் கொள்ள சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெனட்டான் நிறுவனம் அனுமதி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.
 
எனவே சில அமைப்புகளும், நபர்களும், அந்த நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்த பிரச்சினையை எவ்வாறு சமாளிப்பது என்று பெனட்டான் நிறுவனமும் தனது வக்கீல் களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. முன்னதாக பாரீசில் நடந்த இந்த விளம்பர வெளியீட்டு நிகழ்ச்சியில் இந்நிறுவன அதிகாரி ஒருவர் பேசும்போது, இதை ஆபாசமாக பார்க்க கூடாது. இந்த காட்சிகள் மிகவும் பலம் வாய்ந்தவை. இதன்மூலம் மக்களுக்கு நல்ல செய்தியை கொண்டு செல்ல உள்¢ளோம்,
 
தலைவர்கள் யாரையும் அவமரியாதை செய்ய வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல. சகோதரத்துவத்தை வலியுறுத்தவே தலைவர்கள் முத்தமிட்டுக் கொள்வது போன்று தோற்றத்தை உருவாக்கினோம் என்று குறிப்பிட்டார். எனினும் எதிர்ப்பு வலுத்துள்ளதால் இந்த விளம்பரங்களின் கதி என்னவாகும்? என்று கேள்வி எழுந்துள்ளது.
 
ஒன்று உலகம் முழுவதும் இந்த விளம்பரத்தை கொண்டு செல்லும் திட்டம் சில நாடுகளுடன் நிறுத்திக் கொள்ளப்படும். அல்லது இந்த விளம்பரங்கள் திரும்ப பெறப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சர்ச்சைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று "பெனட்டான்" நிறுவனம் அறிவித்துள்ளது.



சச்சினுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும்: அன்னா ஹசாரே பரிந்துரை

 
 
இந்தியாவின் உயரிய விருதான பாரத் ரத்னா கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
 
அன்னா ஹசாரேவின் சொந்த ஊரான ராலேகான் சித்தியில் அவரது தாயின் நினைவாக நடத்தப்படும் டென்னிஸ் போட்டியை நேற்று அவர் துவங்கி வைத்தார். பின்னர் அவர் பிடிஐயிடம் கூறியதாவது,
 
இளைய சமுதாயத்தினர் போற்றும் நபர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். அவர் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்து இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார். அப்படிப்பட்ட அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.
 
சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளிலும் சரி, ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் சரி புதிய சாதனைகள் படைத்துள்ளார். இந்த இரண்டு வகையான போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்தவர் மற்றும் அதிக சதம் அடித்தவர் என்ற பெருமை சச்சினுக்கே உரியது. ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் சச்சின் தான். அவர் சர்வதேசப் போட்டிகளில் 99 சதம் அடித்துள்ளார். இன்னும் ஒரேயொரு சதம் அடித்தால் 100 சதம் அடித்து புதிய சாதனை படைத்துவிடுவார்.
 
தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் சச்சின் விளையாடி வருகிறார். இதில் எப்படியும் அவர் சதம் அடித்துவிடுவார் என்று அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
 
சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் முதல் பல பெரும்புள்ளிகள் வரை பரிந்துரைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



தன்னைவிட சின்னவயசு பையனுடன் கஸ்தூரியின் ரொமான்ஸ்!

 
 
 
'நாங்க' என்ற படத்தில் தன்னை விட வயது குறைந்த இளைஞனுடன் ரொமான்ஸ் பண்ணும் கேரக்டரில் நடித்துள்ளார் கஸ்தூரி.
 
செல்வா இயக்க, சினிமா கொட்டகை நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மொத்தம் 5 காதல் கதைகள் இடம்பெறுகின்றன.
 
இதில் ஒரு காதல்தான் சின்ன வயசு இளைஞன் உதய்க்கும், கல்யாணத்துக்கு காத்திருக்கும் கஸ்தூரிக்கும் இடையில் வரும் பொருந்தாக் காதல்.
 
கதைப்படி உதய் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் பெண் கஸ்தூரி. உதய்யைவிட மூத்தவர். ரொம்ப அன்னியோன்னியமாக பழகும் கஸ்தூரியிடம் ஒரு கட்டத்தில் தன் காதலைச் சொல்ல, அதை அவர் மறுத்துவிடுகிறார். இதனால் ஆத்திரமடைந்த உதய், கஸ்தூரியை கற்பழிக்க முயற்சிக்கிறார்... என்று போகிறது இந்தக் காதல் கதை.
 
இடையில் கஸ்தூரிக்கும் உதய்க்கும் மகா கவர்ச்சியான கனவுக் காட்சி வேறு வருகிறதாம். இதில் கஸ்தூரி ஏக கவர்ச்சி காட்டியுள்ளாராம்.
 
இதுகுறித்துக் கேட்டபோது, கதைக்குத் தேவை என்பதால் இந்தக் காட்சிகளில் அதிகபட்ச கவர்ச்சி காட்டி நடித்ததாக தெரிவித்தார் கஸ்தூரி.
 
பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, பாலபாரதி இசையமைத்துள்ளார்.



குலதெய்வம் கோயிலில் படபூஜை!

 

புதிய பட பூஜையை தனது குலதெய்வம் கோயிலில் தொடங்கினார் பாரதிராஜா.



பொம்மலாட்டம் படத்துக்குப்பிறகு பாரதிராஜா இயக்கும் புதிய படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். இந்த படத்தில் டைரக்டர் அமீர் நாயகனாக நடிக்கிறார். இனியா, கார்த்திகா நாயகிகளாக நடிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை இன்று காலை தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் இனிதே துவங்கியது. பாரதிராஜாவின் குலதெய்வமான அய்யனார் கோயிலில் கிடா வெட்டி பொங்கல் வைத்து பூஜை தொடங்கப்பட்டது.

இந்த விழா காரணமாக, அல்லிநகரமே விழாக்கோலம் பூண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.