Monday, 24 October 2011

ஒரே பெண்ணுடன் என்னையும் மகனையும் இணைத்து பேசுவதா?

 
 
ஒரே பெண்ணுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவது அறுவறுப்பான ஜர்னலிசம் என்று நாகார்ஜுனா கூறினார். நாகார்ஜுனா மகன் நாக சைதன்யா. இவரும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நாக சைதன்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்று ஆந்திராவில் செய்திகள் வெளியாயின. அதற்கு முன் அனுஷ்காவை நாகர்ஜுனா காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அந்த செய்தியை வெளியிட்ட ஆங்கில பத்திரிகையின் நிருபரை, நாகார்ஜுனா அவதூறாகப் பேசினார் என்று கூறப்பட்டது. இதுபற்றி நாகார்ஜுனா கூறியிருப்பதாவது:
 
சினிமா துறையில் வெள்ளிவிழாவை நெருங்கிக்கொண்டிருக்கிறேன். பல்வேறு நடிகைகளுடன் இணைத்து கிசு கிசு வருகிறது. முதலில் தபு, அனுஷ்கா, சார்மி, இப்போது பூனம் கவுர். பத்திரிகைகளில் இந்த செய்திகளைப் படித்துவிட்டு சிரிப்பதை தவிர வேறும் எதுவும் எனக்கு தெரியாது. ஆனால், இவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள். அனுஷ்கா நடிகை என்பதை தாண்டி என் குடும்பத்தில் ஒருவர். என்னை விட என் மனைவி அமலாவிடம்தான் அதிகம் பேசுவார். சார்மியுடன் 'மாஸ்' படத்தில் நடித்தேன். அவர் சிறந்த நடிகை. ஏதாவது விஷயங்களில் என்னிடம் கருத்துக் கேட்பார். இந்த இடத்தில் அபார்ட்மென்ட் வாங்க போகிறேன். என்ன நினைக்கிறீர்கள் என்றால், வாங்கு என்பேன். உடனே, நாகார்ஜுனா அபார்ட்மென்ட் வாங்கி கொடுத்தார் என்று எழுதிவிடுகிறார்கள்.
 
இதே போல பூனர் கவுருடன் 'பயணம்' படத்தில் நடித்தேன். படத்தில் இருவரும் சேர்ந்து வருவது போல ஒரு ஷாட் கூட கிடையாது. ஆனால் எப்படித்தான் அவருடன் இணைத்து பேசுகிறார்களோ தெரியவில்லை. இப்படி எழுதுவதற்காக, நான் என் நட்பை நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லையே. நான் இப்போதும் அவர்களுடன் நட்பாகத்தான் இருக்கிறேன். இதையெல்லாம் கூட என்னால் விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடிந்தது. ஆனால், அனுஷ்காவுடன் என்னையும் என் மகனையும் இணைத்து எழுதுவதை எப்படி ஏற்க முடியும்? இது அறுவறுப்பான ஜர்னலிஷம். இதுதான் என்னை ரொம்ப அப்செட் பண்ணியது. அப்படியென்றால் இதுவரை நீங்கள் இதுபற்றி கருத்து சொல்லவில்லையே என்கிறார்கள். இதற்கெல்லாம் நான் ஏன் கருத்துச் சொல்லவேண்டும். அது என் தகுதிக்கு குறைவானது. இவ்வாறு நாகார்ஜுனா கூறினார்.



ஐஸ்வர்யா ராயாக ஆசை: அசின்

 
 
 
நடிகை ஐஸ்வர்யா ராய் இத்தனை ஆண்டுகளாகியும் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் போல் ஆக ஆசையாக இருக்கிறது என்று நடிகை அசின் தெரிவித்துள்ளார்.
 
தமிழில் நம்பர் 1 இடத்தில் இருந்த அசினுக்கு பாலிவுட் மோகம் ஏற்பட்டதால் மும்பைக்கு போனார். அவரும் திக்கி, முக்கி முன்னேறத் தான் பார்க்கிறார் முடியவில்லை. இந்நிலையில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இத்தனை ஆண்டுகளாகியும், வயதாகியும் இன்னும் முன்னணி நடிகையாக உள்ளார். அவர் மாதிரி ஆக ஆசையாக உள்ளது. அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அசின் கேட்டுள்ளார்.
 
அதேசமயம், பாலிவுட்டில் என்ன தான் முட்டி, மோதினாலும் ஒன்றும் நடக்கவில்லை என்பதால் மீண்டும் கோலிவுட் பக்கம் செல்லவும் அசின் முடிவு செய்துள்ளாராம். இதையடுத்து பெரிய நிறுவனம், பெரிய நடிகர் நடிக்கும் படங்கள் வந்தால் நடிக்கத் தயார் என்று சென்னைக்கு ஓலை அனுப்பியுள்ளாராம்.
 
ஆனால், அசின் மெசேஜ் அனுப்பியும் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க யாரும் பேரார்வம் காட்டியதாக தெரியவில்லை. ஒரு பக்கம் அசினின் கெரியர் மந்தமாக இருக்க மறுபக்கம் அவரைப் பற்றி சகட்டுமேனிக்கு வதந்திகள் வேறு வருவதால் அவர் அப்செட்டாகியுள்ளாராம்.
 
ஆனால் சேச்சிதான் இதில் பாதி வதந்திகளை கிளப்பி விடுவதாக இன்னொரு வதந்தியும் பின்னாலேயே வருகிறது.



முதல்வரை நகைச்சுவையில் ஆழ்த்தியவர் கருப்பசாமி

 
 
 
அமைச்சர் கருப்பசாமி தமது வெள்ளந்தியான பேச்சினால் முதல்வர் ஜெயலலிதாவின் மனதில் இடம்பிடித்தவர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமைச்சர் கருப்பசாமி.
அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மைக் கிடைத்துவிட்டால் "எம்.ஜி.ஆர்.,சினிமாக்களில் இருந்து ஏதாவது பாடலை பாடாமல் விடமாட்டார்". கச்சேரிகளில் இசையமைப்பாளர்களின் தாளத்திற்கு ஏற்ப பாடுவதில் வல்லவர். சில நேரங்களில் இரண்டு, மூன்று பாடல்கள் கூட தொடரும்.
சென்னையில் அமைச்சராக பொறுப்பேற்றபோது உறுதிமொழி வாசகங்களை கவர்னர் வாசிப்பதற்கு முன்பாகவே விறுவிறுவென வாசித்து மேடையில் இருந்த முதல்வர் ஜெ., தோழி சசிகலா, பத்திரிகையாளர் சோ என அனைவரது மத்தியிலும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியவர்.
மதுரையில் கடந்த ஆட்சியின் போது பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் முதல்வர் ஜெ.,தலைமையில் நடந்தது. அதில் பங்கேற்ற கருப்பசாமி, மத்திய அமைச்சர் அழகிரிக்கு எதிராக சவால் விட்டு பேசிய பேச்சு, முதல்வர் <உள்ளிட்ட அனைவரையும் கவர்ந்தது. நெல்லையிலும் முதல்வர் ஜெ.,பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய கருப்பசாமி, மத்திய அமைச்சர் அழகிரியை குறிப்பிட்டு பேசுகையில், "நீ பெரிய மந்திரியாக இருக்கலாம்... ஆனால், என்னோட ஓட்டப்போட்டியில் பங்கேற்க முடியுமா..' என வடிவேலு பாணியில் நகைச்சுவையாக விட்ட சவால், முதல்வர் உள்ளிட்ட அனைவரையும் நகைப்பில் ஆழ்த்தியது.
நிகழ்ச்சிகளில் அலங்கார சொற்கள் இன்றி, திருநெல்வேலி நடையில் வெள்ளந்தியாக பேசும் அவரது பேச்சு, மக்களையும் கவரும்.
*கருப்பசாமிக்கு முத்துமாரி என்ற மனைவியும் மகள் முத்துலட்சுமி,29, மகன் மாரிச்சாமி, 26, ஆகியோர் உள்ளனர். முத்துலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது. மகன் மாரிச்சாமி, ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார்.
*தென்மாவட்டங்களில் அமைச்சர் அந்தஸ்தில் இருந்தாலும், மிக குறைவான சொத்துப்பட்டியலை காண்பித்தவர் அமைச்சர் கருப்பசாமி தான்.
 



சின்ன சின்ன சினிமா செய்திகள்: சிம்புவின் புது நாயகி

 
 
 
சிம்புவின் புது நாயகி
 
வெற்றி மாறனும் சிம்புவும் சேர்ந்து படம் பண்ணுகிறார்கள். வட சென்னை என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் முக்கிய கேரக்டர் கொடுக்கின்றனர்.
 
சிம்பு ஜோடியாக அமலாபாலை தேர்வு செய்கின்றனர். ராணா ஜோடியாக ஆண்டரியா வருகிறார். ஒஸ்தி முடிந்ததும் பட வேலையை துவக்குகின்றனர்.
புது வீட்டில் நயன்தாரா
 
 
பிரபுதேவா நயன்தாரா திருமண ஏற்பாடுகள் மும்முரமாகியுள்ளன. அடுத்த வருடம் ஜனவரியில் மும்பையில் திருமணத்தை நடத்த முடிவாகியுள்ளதாம். அதன் பிறகு அங்கேயே தனிக்குடித்தனம் நடத்தப் போகிறார்களாம் இதற்காக மும்பையில் புது வீடு விலை பேசியுள்ளனர்.


ஸ்ருதிக்கு பதில் காஜல்


தெலுங்கில் ஜுனியர் என்.டி. ஆருடன் தம்மு என்ற படத்தில் கமல் மகள் ஸ்ருதியை ஜோடியாக சேர்த்தனர். ஏனோ அப்படத்தில் இருந்து ஸ்ருதி விலகிவிட்டார்.
 
அவருக்கு பதில் டாப்சி, கார்த்திகா, காஜல் அகர்வால் ஆகிய மூவரை பரிசீலித்தனர். இறுதியில் காஜல் அகர்வால் தேர்வாகியுள்ளாராம்.




தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு தமிழுக்கு வருகிறார். வெற்றிமாறன், சேரன் இருவரிடமும் கதை கேட்டுள்ளாராம்.

சேரன் கதை ரொம்ப பிடித்து போனதாம். அப்படத்தில் நடிப்பார் என்கின்றனர்.






ஆன்ட்ரியாவைப் பார்த்து பயப்படுகிறேனா..? - சோனியா அகர்வால் கோபம்

 
 
"சினிமாவில் யாரைப் பார்த்தும் நான் பயந்ததில்லை. குறிப்பாக ஆன்ட்ரியாவைப் பார்த்து நான் பயப்பட மாட்டேன். அவருக்காக எந்த வாய்ப்பையும் உதறிவிட மாட்டேன்," என்றார் நடிகை சோனியா அகர்வால்.
 
மலையாளத்தில் ஒரு படத்தில் மோகன்லாலுடன் நடிக்க சோனியா அகர்வாலுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் இந்தப் படத்தில் ஆன்ட்ரியாவும் ஒரு நாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். முதலில் ஒப்புக் கொண்ட சோனியா அகர்வால், பின்னர் நடிக்க மறுத்துவிட்டாராம்.
 
ஆன்ட்ரியா நடிப்பதால்தான் சோனியா நடிக்க மறுத்தார் என்று செய்தி பரவியது. ஆன்ட்ரியா குறுக்கிட்டதால்தான் சோனியா - செல்வராகவன் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததாக ஒரு பேச்சு உள்ளது. எனவே திருமண வாழ்க்கையைக் கெடுத்த ஆன்ட்ரியா, இப்போது சினிமா வாழ்க்கையையும் கெடுக்கப் பார்க்கிறார் என்ற ரீதியில் செய்தி வெளியாகின.
 
இந்த நிலையில், சோனியா அகர்வாலிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர்.
 
அவர் கூறுகையில், "பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்றுதான் இப்போது மிகவும் விரும்புகிறேன். ஆனால், இந்தப் படத்தின் கதையில் என் பாத்திரத்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. நமக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காத ஒரு படத்தில் நடித்து என்ன ஆகப்போகிறது. அதனால்தான் நடிக்கவில்லை.
 
ஆனால் ஆன்ட்ரியாவுக்காக நான் நடிக்கவில்லை என்பது தவறு. சினிமாவில் யாரைப் பார்த்தும் நான் பயப்படமாட்டேன். அதிலும் ஆன்ட்ரியாவைப் பார்த்து நிச்சயம் நான் பயப்பட மாட்டேன்," என்றார்.



கனிமொழிக்கு தீபாவளி சென்னையிலா, திஹாரிலா?

 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக கனிமொழி எம்.பி. கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டிலும், டெல்லி ஐகோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டன.
 
கனிமொழி அடுத்தக் கட்டமாக சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு, அந்த கோர்ட்டிலேயே ஜாமீனுக்கு விண்ணப்பிக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
 
இந்த நிலையில் கனிமொழி மீது சி.பி.ஐ. மேலும் ஒரு வழக்கு தொடுத்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 409-வது பிரிவின் கீழ் நம்பிக்கைத் துரோக வழக்கு அவர் மீது தொடரப்பட்டது. நேற்று முன்தினம் இந்த புதிய பிரிவு வழக்கை சி.பி.ஐ. சிறப்புக் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது. இதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 17 பேர் மீது நம்பிக்கைத் துரோக வழக்கு பாய்ந்துள்ளது.
 
குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதால் இன்று (திங்கட்கிழமை) கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற உள்ளது. கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், ஷாகித் பல்வாவின் சகோதரர் ஆசிப்பல்வா, சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் கரீம் மொரானி, குசேகான் ரியா லிட்டி நிறுவனத்தை சேர்ந்த ராஜீவ் அகர்வால், ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா ஆகியோரது ஜாமீன் மனுக்களும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
 
சி.பி.¢ஐ. கோர்ட்டுக்கு நாளை (செவ்வாய்) முதல் வெள்ளிக்கிழமை வரை தீபாவளி விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்றே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
கனிமொழி எம்.பி.யின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது சி.பி.ஐ. வக்கீல்கள் தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படமாட்டாது. எனவே கனிமொழி எம்.பி. விடுதலை ஆவதில் எந்த சிக்கலும் இருக்காது. 43 வயதாகும் கனிமொழி எம்.பி. கடந்த 156 நாட்களாக திகார் ஜெயிலில் உள்ளார். ஒருவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு அவரை ஜாமீனில் விடு விக்கலாம் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் 437 செக்சன் 6ல் கூறப்பட்டுள்ளது. இதன்படி கனிமொழி விடுதலை ஆகிறார்.
 
2ஜி வழக்கில் ஏற்கனவே ஜாமீன் கோரி மனு செய்த கனிமொழி தனது மனுவில், நான் ஒரு பெண், எனக்கு பள்ளிக்கூடம் செல்லும் வயதில் மகன் இருக்கிறான். அவனை நான் தான் கவனித்துக் கொள்ள வேண்டும். எனவே என்னை விடுவிக்க வேண்டும் என்று கூறி இருந்தார். ஜாமீனில் விடுதலை செய்தால், எந்த சாட்சிகளையும் கலைக்க மாட்டேன் என்று ஏற்கனவே அவர் உறுதிமொழி அளித்துள்ளார்.
 
எனவே இவற்றின் அடிப்படையிலும் கனிமொழி விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அவரது விடுதலையை எதிர்நோக்கி தி.மு.க. தலைவர் கருணாநிதி டெல்லியில் தங்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி சென்ற அவருடன் அவரது துணைவியார் ராசாத்தி அம்மாள், கனிமொழியின் மகன் ஆதித்யா ஆகியோரும் சென்றுள்ளனர்.
 
கனிமொழி விடுதலை ஆனதும், அவரை தங்களுடன் சென்னை அழைத்து வர கருணாநிதி திட்டமிட்டுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந் தேதி தொடங்குகிறது. குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் விசாரணை நடக்கும் என்பதால் இந்த வழக்கு விசாரணை பல மாதங்கள் நீடிக்க வாய்ப்புள்ளது.



மன்மோகன் சும்மா, எல்லாம் 'அம்மா' சோனியாதான்-அத்வானி தாக்கு

 
 
 
பெயருக்குத்தான் பிரதமராக இருக்கிறார் மன்மோகன் சிங். மற்றபடி முடிவெடுப்பது உள்ளிட்ட அனைத்தையும் சோனியா காந்திதான் செய்கிறார் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
 
38 நாள் யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி, ஒரிசா மாநிலம் பர்கார் என்ற இடத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், டாக்டர் மன்மோகன் சிங்தான் நான் கண்ட பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமானவர். பெயருக்குத்தான் பிரதமராக இருக்கிறார் மன்மோகன் சிங். மற்றபடி அனைத்து முடிவுகளையும் சோனியா காந்திதான் எடுக்கிறார்.
 
மன்மோகன் சிங் அரசைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால் மன்மோகன் சிங்கின் 'செயல்திறன்'தான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. அதிகாரப்பூர்வமாக அவர் பிரதமராக இருந்தாலும், அவர் எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றே நான் கருதுகிறேன். அனைத்து முடிவுகளையும் காங்கிரஸ் தலைவர்தான் எடுக்கிறார் என்றார் அத்வானி.
 
கடந்த வாரம்தான் நாட்டிலேயே மிகவும் பலவீனமான பிரதமர் மன்மோகன் சிங் என்று கடுமையாக சாடியிருந்தார் அத்வானி. இதற்குப் பதிலளித்த பிரதமர், அத்வானி தனது பேச்சின்போது கடுமையாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
 
இந்த நிலையில் பெயருக்குத்தான் பிரதமராக இருக்கிறார் மன்மோகன், முடிவுகளை சோனியாதான் எடுக்கிறார் என்று அத்வானி சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.



நடிகை மினிஷாவின் பாஸ்போர்ட் பறிப்பால் பரபரப்பு

 
 
காஷ்மீரைச் சேர்ந்தவர் இந்தி நடிகை மினிஷா லம்பா (26). பொழுதுபோக்கிற்காக மாடலிங் செய்ய வந்த இவர் பின்னர் இந்திப் படவுலகில் நுழைந்து `யஹான்', `கிட்னாப்', `வெல்டன் அப்பா' போன்ற படங்களில் நடித்து பிரசித்தி பெற்றார்.
 
கடந்த மே மாதம் இவர் பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்து மும்பை விமான நிலையம் வந்திறங்கியபோது, ரூ.50 லட்சம் நகைகளுடன் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்தி பின்னர் விடுவித்தனர்.
 
இப்போது மறுபடியும் அவர் விமான நிலையத்தில் சிக்கலில் மாட்டிக்கொண்டார். இம்முறை அவர் மாட்டிக்கொண்டது மும்பையில் அல்ல. துபாய் விமான நிலையத்தில்.
 
 
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் துபாய் விமான நிலையத்தில் போய் இறங்கியபோது குடியுரிமை அதிகாரி ஒருவர், அவர் துபாயில் தங்க உள்ள லாட்ஜ் பற்றிய விவரங்களை கேட்டார்.
 
அதற்கு அவர், "எனக்கு நினைவில் இல்லை. விமான நிலையத்தில் காத்திருக்கிற எனக்கு வேண்டிய ஒரு நபருக்கு அது தெரியும்'' என கூறிவிட்டு செல்போனில் உள்ள விவரங்களை காட்ட முயற்சித்தார்.
 
 
ஆனால் அந்த அதிகாரியோ அவரிடம் இருந்த பாஸ்போர்ட்டையும் பறித்துக்கொண்டார். அத்துடன் அங்கிருந்த ஒரு நாற்காலியை காட்டி, நீ அதில் போய் உட்கார் என்று கூறி விட்டார்.
 
 
அங்கு இருந்த மூத்த அதிகாரி, அவரை சமாதானப்படுத்தி ஒரு வழியாய், நடிகையின் பாஸ்போர்ட்டை பெற்று ஒப்படைத்தார்.
 
 
இது தொடர்பாக நடிகை மினிஷா கூறுகையில், "இந்த ஆண்டு விமான நிலையங்களில் எனக்கு நேரமே சரியில்லை. மும்பைக்கு நான் திரும்பியபிறகு துபாய் சம்பவம் பற்றி புகார் செய்வேன்'' என்றார். இந்தச் சம்பவத்தால் துபாய் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 



வேதாரண்யம் மீனவரை கத்தியால் வெட்டி இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

 
 
 
நாகை மாவட்ட்வேதாராண்யத்தைச் சேர்ந்த மீனவர்களைத் தடுத்து இலங்கை மீனவர் தாக்கி அட்டூழியம் செய்துள்ளனர். இதில் ஒருவரது கையில் கத்தியால் குத்திக் காயப்படுத்தியுள்ளனர். இதனால் நாகை மாவட்ட மீனவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
 
இலங்கை கடற்படைதான் ரவுடித்தனமாக நடந்து கொள்கிறது என்றால் இப்போது இலங்கை மீனவர்களும் மிருகத்தனமாக தமிழக மீனவர்களைத் தாக்கி அட்டூழியம் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்த இரு காலிப் படையினரின் அட்டூழியங்களைத் தட்டிக் கேட்க ஒரு நாதியும் இல்லாததால், தமிழக மீனவர்கள் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். கடலுக்குப் போனால் பத்திரமாக திரும்புவது சாத்தியமில்லாததாகி வருகிறது.
 
சமீப காலமாக அடுத்தடுத்து இலங்கைக் கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி காயப்படுத்தி வருகின்றனர். மீன்களை எடுத்து கடலில் வீசுவது, மீன்பிடி வலைகளை அறுப்பது, ஜிபிஎஸ், செல்போன் போன்றவற்றை திருடுவது என மகா மோசமாக நடந்து கொள்கின்றனர் இவர்கள். இதனால் தமிழக மீனவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
 
இந்த நிலையில், நாகை மாவட்டம் வேதாராண்யத்தைச் சேர்ந்த அர்ஜூனன், விஜயபாலன், கந்தன் மற்றும் இன்னொரு மீனவர் என நான்கு பேர் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று காலை கடலுக்குப் போன இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு இலங்கை மீ்னவர்கள் வந்தனர்.
 
வந்தவர்கள், தமிழக மீனவர்களின் படகை மறித்து நிறுத்தி உள்ளே இறங்கி தாக்கத் தொடங்கினர். அப்போது ஒரு இலங்கை மீனவர் கத்தியால், அர்ஜூனனை குத்தியதில் அவரது கையில் படுகாயம் ஏற்பட்டது. மற்ற மூவரையும் சரமாரியாக அடித்துள்ளனர்.
 
இதையடுத்து நான்கு மீனவர்களும் படகுடன் வேகமாக கரைக்குத் திரும்பினர். ஆனால் கடல் சீற்றமாக காணப்பட்டதால் அவர்கள் கரைக்கு வர முடியாமல் தடுமாறினர். பின்னர் கரையில் உள்ள மீனவர்களுக்குத் தகவல் கொடுக்கவே கரையிலிருந்து மீனவர்கள் வேகமாக விரைந்து சென்று நால்வரையும் மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்தனர்.
 
படுகாயமடைந்த நிலையில் இருந்த அர்ஜூனனை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அர்ஜூனின் உறவினர்களும், சக மீனவர்களும் பெருமளவில் மருத்துவமனையில் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.



பெங்களூர் கோர்ட்டுக்கு தண்ணி காட்டிய ஜெயலலிதா

 
 
 
தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், சென்னையில் வேறு சில முக்கிய நிகழ்ச்சிகள் உள்ளன என்று பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதியிடம் கூறிய முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை நவம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைக்க வைத்து விட்டார். ஆனால் சொன்னபடி அவர் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்துக்கு போகாமல் ஓ.பன்னீர்செல்வத்தை மட்டும் அனுப்பி வைத்து விட்டு டபாய்த்து விட்டார்.
 
கடந்த 14 வருடங்களாக பெங்களூர் தனி கோர்ட்டில் நிலுவையில் இருந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு முறை கூட ஆஜராகமல் இருந்து வந்தார் முதல்வர் ஜெயலலிதா. சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த கண்டிப்பான உத்தரவுக்குப் பின்னர்தான் அவர் அக்டோபர் 20ம் தேதி முதல் முறையாக ஆஜரானார். அவரிடம் 2 நாள் விசாரணை நடத்தியது பெங்களூர் கோர்ட். பின்னர் நவம்பர் 8ம் தேதிக்கு வழக்கை நீதிபதி மல்லிகார்ஜூனய்யா ஒத்திவைத்தார்.
 
முன்னதாக அக்டோபர் 22ம் தேதி ஜெயலலிதாவை ஆஜராகுமாறு உத்தரவிட்டார் நீதிபதி மல்லிகார்ஜூனய்யா. அப்போது குறுக்கிட்ட ஜெயலலிதா, அன்று தேசிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடப்பதாகவும், தான் அன்று அங்கு போயாக வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதையடுத்து நவம்பர் 4ம் தேதியன்று ஆஜராகுமாறு நீதிபதி கூறவே அன்று சென்னையில் சில முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவித்தார் ஜெயலலிதா. இதையடுத்து வேறு வழியில்லாமல் நவம்பர் 8ம் தேதியன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார் நீதிபதி.
 
ஆனால் நீதிமன்றத்தில் கூறியபடி அவர் தேசிய ஆலோசனைக் கூட்டத்திற்குப் போகவில்லை. தனக்குப் பதிலாக ஓ.பன்னீர் செல்வத்தை அனுப்பி வைத்தார். அவரும் போய் ஜெயலலிதாவின் உரையை படித்து விட்டு வந்தார்.
 
அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய இரு நாட்கள் நடந்த விசாரணையின்போது ஜெயலலிதாவிடம் 567 கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றுக்குப் பதிலளித்தார் ஜெயலலிதா. மொத்தம் உள்ள 1339 கேள்விகளில், இந்தக் கேள்விகள் போக மிச்சக் கேள்விகளுக்கு அவர் நவம்பர் 8ம் தேதி பதிலளிக்கவுள்ளார்.
 
முதல் முறையாக பெங்களூர் கோர்ட்டுக்கு வந்த ஜெயலலிதா படு அமர்க்களமாக தனது பெங்களூர் விஜயத்தை மேற்கொண்டார். தனி விமானத்தை வாடகைக்கு அமர்த்தி அவர் இரு நாட்களும் பெங்களூர் வந்து சென்றார். அவருக்காக வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகளை கர்நாடக அரசும், காவல்துறையும் மேற்கொண்டிருந்தன. சாதாரண வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா படு ஆடம்பரமாக வந்து போனதை பெங்களூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
 
ஜெயலலிதா கோர்ட்டுக்கு வந்ததை நாட்டில் உள்ள அத்தனை முன்னணி சானல்களும், இணையதளங்களும் ஒவ்வொரு நிமிட நடவடிக்கையையும் ஒளிபரப்பு செய்து அசத்தினர். ஜெயலலிதாவின் இந்த 2 நாள் கோர்ட் வருகைக்காக 2000 போலீஸார் பாதுகாப்பு கொடுத்தனர்.
 
இதற்கிடையே டெல்லி தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கோர்ட்டில் தெரிவித்த ஜெயலலிதா, ஏன் சொன்னபடி டெல்லிக்குப் போகவில்லை என்பது மர்மமாக உள்ளது. கோர்ட்டுக்கு வருவதைத் தவிர்க்க இவ்வாறு அவர் சொன்னாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
ஒருவேளை அன்றைய தினம் திமுக தலைவர் கருணாநிதி டெல்லியில் இருந்ததால் தனது டெல்லி பயணத்தை ஜெயலலிதா தவிர்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
இதற்கிடையே நவம்பர் 8ம் தேதியும் ஜெயலலிதா கோர்ட்டுக்கு வருவது சந்தேகம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அவரது வக்கீல் பி.குமார் பேச்சிலிருந்து இது புரிகிறது. இதுகுறித்து பி.குமார் கூறுகையில், 2 நாள் விசாரணை நடத்தி ஜெயலலிதாவிடம் வாக்குமூலம் வாங்குமாறு உச்சநீதிமன்றம் கூறியது. அதன்படி ஜெயலலிதாவும் 2 நாட்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்து விட்டார். மறுபடியும் ஜெயலலிதாவிடம் விசாரணை நடத்தப்பட மாட்டாது. அவரை மீண்டும் பெங்களூர் கோர்ட் விசாரிக்க முடியாது. மேல் உத்தரவுக்காக நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்றார்.
 
இதன் மூலம் பெங்களூர் கோர்ட்டுக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையிலான இழுபறி மீண்டும் நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.