Saturday, 22 October 2011

தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.

 
தாய்ப்பால்கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந்தால் கொடுத்து விட்டு போகிறார்கள்என்று நினைக்கத்தோன்றுகிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள்மருத்துவர்கள்.சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லைஎன்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு.சிலர் புட்டிப்பால் கொடுக்கஆரம்பித்துவிடுவார்கள்.இதெல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பைஏற்படுத்தக் கூடியது.தாய்ப்பாலுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனையில் கூட உருவாக்கமுடியாது என்பதே நிஜம்.
 
பால் கொடுக்கும்போது குழந்தையின்தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்குநேராகவும்,அதன் முகம் மார்பக காம்புக்கு எதிர்புறமாகவும் இருக்கவேண்டும்.அடுத்துகுழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்க வேண்டும்.குழந்தையின் கழுத்து,தோள் மட்டுமில்லாமல் முழு உடலையும் தாயின் கை தாங்குவது போல் வைக்கப்படவேண்டும்.
தாய்ப்பால் கொடுக்கமுயற்சிக்கும்போது தாய் குழந்தையின் உதடுகளால் மார்பக காம்பைத் தொடவைக்க வேண்டும்.குழந்தை வாய் திறக்கும் வரைகாத்திருந்து கீழ் உதடு மார்பக காம்பின் அடிப்பகுதியை நன்கு பிடித்துக்கொள்ளுமாறுசெய்யவேண்டும்.
 
குழந்தைமார்பகத்தைநன்கு கவ்வியிருக்கிறதா சரியாக சப்பிக் குடிக்கிறதா என்பதை தாய் கவனிக்கவேண்டும்.குழந்தையின் முகவாய்க்கட்டை மார்பகத்தை தொடவேண்டும்.வாய் நன்றாகதிறந்திருக்க வேண்டும்.கீழ் உதடு வெளியே பிதுங்கியிருக்க வேண்டும்.மார்பக காம்பின்கீழ்பகுதி முழுவதும் குழந்தையின் வாயினால் மூடப்பட்டிருக்க வேண்டும்.
முதல் ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் தவிர குழந்தைக்கு வேறு எந்த திரவமும் தேவைப்படாது.கிரைப்வாட்டர்,தண்ணீர் எல்லாம் அவசியமேயில்லை.தேவையான் தண்ணீர் தாய்ப்பாலில்இருக்கிறது.ஒரு நாளில் எட்டு முறையாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.குழந்தைஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டாலும் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
 
குழந்தைக்கு மாட்டுப்பாலைகொடுப்பதும்,சில நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பதும் பலர் செய்யும் தவறு.இதுகுழந்தையின் ஜீரண மண்டலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.இன்றைய முறையற்றவணிகர்களால் சுத்தமான பால் கிடைப்பது எளிதல்ல! அதிக பாலுக்காக ஹார்மோன் ஊசிபோடுவதாலும் நிறைய பிரச்சினைகள்.
தாய்ப்பாலை விட பாதுகாப்பானதுவேறெதுவும் இல்லை.மருத்துவர் அறிவுரையின் பேரில் மாட்டுப்பால் கொடுத்தாலும் நிறையதண்ணீர் கலக்கவேண்டும்.அதுவும் சுத்தமான நீராக இருக்கவேண்டும்.கடையில் பவுடர்வாங்கினாலும் காலாவதி தேதியை கவனிக்க வேண்டும்.பாலாடை அல்லது தேக்கரண்டிபயன்படுத்துவதே சிறந்த்து.புட்டி பயன்படுத்தும்போது அழுக்கு சேர்ந்து நோய்த்தொற்றைஉருவாக்கலாம்.ஆறு மாதம் கழித்து பிறகு இணை உணவுகள் தர ஆரம்பிக்கலாம்.
(யுனிசெப் பிரசுரம் ஒன்றின் உதவியுடன்)

மகன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார் நடிகர் லூஸ் மோகன்

 
 
 
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ் மோகன் கடந்த 20ந் தேதி கூடுதல் போலீஸ் கமிஷனர் அபய்குமார் சிங்கிடம் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில், தனக்கு தேவையான அளவுக்கு பணம் இருப்பதாகவும், ஆனால், தன்னை கவனிக்க ஆள் இல்லை என்றும், தன்னை கவனிக்காத மகன் மற்றும் மருமகள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
 
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், மக்களை சிரிக்க வைத்த எனது நிலை, இன்றும் பலரும் சிரிக்கும்படி ஆகிவிட்டது. என்னிடம் போதுமான அளவு பணம் உள்ளது. என் மனைவி இறந்துவிட்டதால் எனக்கு உதவி செய்ய ஆள் இல்லை. எனது மகனும், மகளும் மருமகளும் என்னை தனி ஆளாக தவிக்கவிட்டு சென்றுவிட்டனர் என்று கண்ணீர் மல்க கூறினார்.
 
 
நடிகர் லூஸ் மோகன் புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூடுதல் போலீஸ் கமிஷனர் அபய்குமார் சிங், மைலாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.
 
 
இதைத்தொடர்ந்து, மைலாப்பூர் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில், தனது மகன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டதாக நடிகர் லூஸ்மோகன் அறிவித்துள்ளார்.
 
 
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 20 ந்தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் என் மகன் மீது புகார் கொடுத்திருந்தேன். இன்று நான் என் குடும்பத்தினருடன் சுமூகமாக சேர்ந்துவிட்டேன். எனவே, அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று மைலாப்பூர் இன்ஸ்பெக்டரிடம் புகாரை வாபஸ் பெற்றுவிட்டேன் என்று கூறி உள்ளார்.



ஆங்கிலம் பேசப்போகும் தமிழ்ப் படம்

 
 
தமிழ்ப் படங்களின் வசூலையே மிஞ்சும் அளவுக்கு ஆங்கிலப் படங்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்துகொண்டு வருகிறது. அதன் விளைவாக ஜுராஸிக் பார் என தொடங்கி அவதார் என்று அத்தனை ஆங்கிலப்படங்களும் தமிழ்ப் பேசுகின்றன. இந்த நிலையை மாற்றி ஆங்கிலம் பேசும் தமிழ்ப் படங்களை நாம் அவர்களுக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் ராஜேஷ் கண்ணா.
 
டீலா நோ டீலா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா, இயக்கும் முதல் படம் 'பெருமான்'. இந்த படத்தின் துணை தலைப்பாக தி ரஜினிகாந்த் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த படத்திற்கும் ரஜினிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறதாம். சொல்லப்போனால் ரஜினிதான் இந்த படத்தின் ஹீரோவாம். இதை ரஜினியிடம் கூறி அவருடைய பெயரை பயன்படுத்த அவரிடம் அனுமதியிம் பெற்ற பின்புதான் இந்த வார்த்தையை இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். அது சரி, ரஜினிக்கும் இந்த படத்திற்கும் என்ன தொடர்பு என்றால், அதை படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். என்று மற்ற இயக்குநர்களைப் போலவே பதிலளித்தார் ராஜேஷ்.
 
தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் இப்படத்தை வெளியிடப்போகிறார்கள். ஆங்கிலத்தில் 'சிக்ஸ் மில்லியன் டாலர்' என்ற தலைப்பில் பல நாடுகளில் இப்படம் வெளியாகப்போகிறது. எதற்கு இந்த முயற்சி என்று இயக்குநரிடம் கேட்டால், "எத்தனை நாள் தான் தமிழ்ப் பேசும் ஆங்கிலப் படங்களை நாம் பார்த்துகொண்டிருப்பது. ஆங்கிலம் பேசும் தமிழ்ப் படங்களை அவர்களுக்கு காட்டுவோம் என்ற எண்ணத்தில்தான் இந்த முயற்சி. இது ஆங்கிலப் படம் என்பதற்காக, கிராமருடன் கூடிய ஆங்கிலத்தில் யாரும் பேச மாட்டார்கள். தமிழ்நாட்டில் இளைஞர்கள் எப்படி ஆங்கிலம் பேசுவார்களோ அதே முறையில் தான் இருக்கும். மேலும் இதில் ஐந்து ஆறு காட்சிகளில் தமிழிலும் பேசுவார்கள். பொதுவாக ஆட்டோ டிரைவர், தெருவில் இட்லி விற்கும் பாட்டி போன்றோர்கள் தமிழில்தான் பேசுவார்கள் அதை அப்படியே ஆங்கிலப் படத்திலும் இணைத்திருக்கிறோம். அவர்களுக்கும், நமக்கும் இடையே கம்யூனிகேசனை வலுப்படுத்த இது உதவும்.
 
தமிழகத்தில் உருவான ஆங்கிலப் படமாக இருந்தாலும், ஆங்கிலப் படங்களில் உள்ள விறுவிறுப்பு இப்படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை இருக்கும். அதே சமயம் கமர்ஷியல் ஃபார்மூலாவில் ஒரு தரமான படமாகவும் ரசிகர்களை திருப்தி படுத்தும்." என்று கூறுகிறார்.
 
இப்படத்திற்காக 'பிம்பிளிக்கா பிளாப்பி' என்ற வார்த்தையை பயன்படுத்தி ஒரு புரோமோசன் பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் அந்த பாடலை படமாக்கியிருக்கும் இயக்குநர் படத்தையும் அப்படித்தான் இயக்கியிருப்பார் என்று நம்பலாம்.



'மக்களே... மக்களே... !' விஜயகாந்தின் அனல் பறக்கும் பிரச்சாரம் அம்போ! காரணம் என்ன?

 
 
 
சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீட்டின் போது தேமுதிக அலுவலகம் முன்பு ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு, தேமுதிக அலுவலகத்தில் மூன்றாவது அணி அமைக்க முயற்சி மேற்கொண்டது போன்ற குளறுபடிகளைத் தாண்டி, அ.தி.மு.க.,வுடன் உடன்பாடு கண்டு 41 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டது. இதில் 29 தொகுதிகளில் தே.மு.தி.க., வெற்றி பெற்று சட்டசபையில் எதிர்க்கட்சியாக அங்கீகாரம் பெற்றது.
 
சட்டசபை தேர்தலின்போது ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிப்பு, மூன்றாவது அணி போன்ற மிரட்டல்கள் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவால் எடுபடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் தனித்துப்போட்டி என அ.தி.மு.க., முடிவெடுத்து, வேட்பாளர்களை அறிவித்ததால், தவிர்க்க முடியாத நிலையில், தே.மு.தி.க., தனித்து போட்டியிட வேண்டி வந்தது. முந்தைய தோர்தல்களில் தனித்து போட்டியிட்டபோது, ""தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் கூட்டணிகளின் காரணமாகவே வெற்றி பெறுகின்றன. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றதில்லை. அதற்கான தைரியம் அவர்களுக்கு இருக்கிறதா என்று சவால் விட்டார் விஜயகாந்த்.
 
 
அவரது சாவலை எதிர்கொள்ளும் வகையில் உள்ளாட்சி தேர்தல் களம் அமைந்தது. அனைத்து பிரதான கட்சிகளும் தனித்து களமிறங்கிய நிலையில், தே.மு.தி.க., மட்டும் கம்யூனிஸ்டுகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. மார்க்சிஸ்ட்டுகளுடன் மாநிலம் முழுவதும் முழுமையான கூட்டணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் கூட்டணி என்ற குழப்பமான உடன்பாட்டுடன் தே.மு.தி.க., போட்டியிட்டது.
 
 
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் பிரதான பேச்சாளர்களாக மாறி, மாநிலம் முழுவதும் சுற்றி வந்தனர். "எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் மக்களே... மக்களே...' 'உங்களை கேட்டுதான் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம், உங்களை கேட்டுதான் அதிமுகவை விட்டு பிரிந்தோம்...' என்ற வேண்டுகோளுடன் துவங்கிய இவர்களின் பிரசாரம், இறுதி கட்டத்தில் "கூட்டணி துரோகம் செய்த அ.தி.மு.க.,விற்கு பாடம் கற்பியுங்கள்' என அ.தி.மு.க., எதிர்ப்பு பிரசாரமாக நிறைவடைந்தது.
 
 
இருவரும் பிரசாரத்திற்கு செல்லுமிடத்தில் கூடிய கூட்டம் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. ஆனால், கூட்டத்திற்கு ஏற்ப வெற்றி வாய்ப்பு கிடைக்காததால், தே.மு.தி.க., தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சட்டசபை தேர்தலில் எதிர்பாராத வெற்றி கிடைத்ததை கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் மற்றக் கட்சிகளை விட ஓட்டுக்கு அதிக பணம் கொடுத்து நம்பிக்கையுடன் இருந்த தேமுதிக வேட்பாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
 
 
தே.மு.தி.க.,வின் இந்த பின்னடைவிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சட்டசபையில் எதிர்கட்சித்தலைவர் என்ற பதவி, கிடைத்தும், அதை அவர்கள் முறையாக பயன்படுத்தவில்லை. கூட்டணி மூலம், தங்களது தனித்தன்மையை தொலைத்ததோடு, மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் தே.மு.தி.க., இழந்துள்ளது.
 
 
தே.மு.தி.க.,வின் தேர்தல் தோல்வி குறித்து பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், ""ஒரு அரசியல் கட்சி தலைவராக இருப்பவர் தேர்தல் காலத்தில் அனல் பறக்க பிரசாரம் செய்தால் மட்டும் வெற்றிக்கனி வந்துவிடாது. பொதுமக்கள் நலன் சார்ந்த அனைத்து விஷயங்களிலும், தினந்தோறும் தனது ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், விஜயகாந்த் அதைச் செய்யத் தவறிவிட்டார்.
 
சட்டசபை கூட்டத்தொடரில் அவரது பங்களிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. சமச்சீர் கல்வி, புதிய சட்டமன்ற கட்டிடம், திமுக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்தியது உள்ளிட்ட பொதுமக்கள் தொடர்புடைய விஷயங்களில் தங்களது கட்சியின் கருத்தை அவர் அழுத்தமாக வெளிப்படுத்தவில்லை.
 
சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வாங்கியதைப் போல், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிக இடங்களை வாங்க வேண்டும், பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே தேமுதிக தலைமை இருந்தது.
 
அதிமுக தனித்து போட்டியிட முடிவு எடுத்தததால் தான், தேமுதிக வேறு வழியில்லாமல் வெளியேறிதே தவிர, மக்களுக்குக்காக அல்ல. இப்போது அதிமுகவை குற்றம் சாட்டும் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா, கடந்த 4 மாதமாக வாய் திறக்காமல் இருந்தது ஏன்?
 
 
சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், பொதுமக்களோடு தொடர்பை ஏற்படுத்தும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் தே.மு.தி.க., ஈடுபடவில்லை. தேர்தல் அனுபவமில்லாத தே.மு.தி.க., நிர்வாகிகளை, இரு கழகங்களும் எளிதாக பின்னுக்குத் தள்ளி வீழ்த்தி விட்டன,'' என்றார்.



நான் மிரர் மாதிரி... சிம்புவின் 'டெரர்' விளக்கம்

 
 
 
நான் 'மிரர்' மாதிரி. எங்கிட்ட எப்படி நடந்துக்கிறாங்களோ, அதை மாதிரிதான் நானும் நடந்துப்பேன் என்றார் சிம்பு. ஒஸ்தி படம் ஒரே ஷெட்யூலில் முடிந்திருக்கிறதல்லவா, இந்த வியத்தகு விஷயம் பற்றி மூக்கில் விரல் வைக்கும் இன்டஸ்ட்ரிக்கு சிம்பு அறிவித்திருக்கும் மெசேஜ்தான் இது.
 
படப்பிடிப்பில் இவரை குழந்தை போல பார்த்துக் கொண்டார்களாம் இயக்குனர் தரணியும், கூட நடிக்கும் ஆர்ட்டிஸ்டுகளும். இதனால்தான் இப்படத்தை 70 நாட்கள் நான்-ஸ்டாப்பாக எடுக்க முடிந்தது. இவ்வளவு சீக்கிரம் படம் முடிந்ததற்கு நான் காரணமல்ல, இவர்கள்தான் என்றார் சிம்பு.
 
ஒஸ்தி பிரஸ்மீட்டுக்கு முடிந்தவரை காலதாமதமாக வந்த சிம்பு, அந்த தாமதத்திற்கான காரணத்தை மயில்சாமியை விட்டு சொல்ல வைத்தாரே தவிர, அவரே சொல்லவில்லை. அதற்காக வருந்தவும் இல்லை. (அரசியல்ல பெரிய எதிர்காலம் இருக்கு பிரதர்)
 
இந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக் கொண்டபோது சிக்ஸ்பேக் வைக்கிற எண்ணமெல்லாம் இல்லை. ஏனென்றால் நான் மற்ற படங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது. உடல் அளவில் மாற்றம் வந்தால் கன்ட்டினியுடி மிஸ் ஆகும். ஆனால் ஒஸ்தி படப்பிடிப்பு துவங்கிய சிறிது நாட்களுக்குள்ளேயே பத்திரிகைகளில் நான் தினந்தோறும் ஜிம்முக்கு போவதாகவும், இரண்டு மணி நேரம் வொர்க் அவுட் செய்வதாகவும் எழுத ஆரம்பிச்சிட்டீங்க. சரி, இப்படியே விட்டால் இதே பார்வையோடு உள்ளே வரும் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக போய்விடுமே என்றுதான் வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்தேன்.
 
காலையில் மூணு மணி நேரம், மாலையில் மூணு மணிநேரம் வொர்க் அவுட் பண்ணினேன். உங்க புண்ணியத்தால் என் உடலும் மனசும் இப்போ ஆரோக்கியமா இருக்கு. நன்றி என்றார் சிம்பு.
 
பொதுவாக சிம்பு படம் என்றால் பாடல்கள் பட்டைய கிளப்பும். இந்த படத்திலும் அதற்கான அறிகுறிகள் இப்பவே தெரிய ஆரம்பித்திருக்கிறது. யுவன்சங்கர்ராஜாதான் சிம்புவின் பெஸ்ட். இந்த படத்தில் தமன். எப்படி நடந்தது இந்த வித்தை?
 
ஒரே மியூசிக் டைரக்டருடன் வொர்க் பண்ணும் போது லேசா மாற்றம் வந்தால் நல்லாயிருக்குமேன்னு தோணும். யுவனிடம் இதை சொல்லி ஒஸ்தியில் யாரை இசையமைக்க வைக்கலாம்னு யோசிக்கிறேன் என்று சொன்னேன். அவர்தான் தமன் நல்லா மியூசிக் பண்ணுறார். அவரை ட்ரை பண்ணுங்களேன் என்றார். இப்போ வர்ற யங் ஜெனரேஷன் அவ்வளவு ஃபிரண்ட்லியாவும் ஈகோ இல்லாமலும் இருக்காங்க என்றார் சிம்பு.
 
 

 


கிஸ் பண்ணாத டி.ஆர் மிஸ் பண்ணாத எஸ்.டி.ஆர்

 
 
 
ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை. ஆடியோ ரிலீஸ் வரைக்கும் வந்துவிட்டது சிம்பு நடித்த ஒஸ்தி. 'சிம்பு நடித்தும் சீக்கிரம்' என்பதுதான் இந்த செய்தியின் விசேஷம். அவர் எப்பவோ துவங்கிய போடா போடி, கெட்டவன், வேட்டை மன்னன் ஆகிய படங்கள் எல்லாம் இன்னும் ஆமை வேகத்தில் நகர்ந்து கொண்டிருப்பதை கவனிக்க...
 
ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கும் இமேஜ் ஆடிட்டோரியத்தில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. அடிப்படையில் அஜீத் ரசிகரான சிம்பு, இந்த விழாவுக்கு விஜய்யை அழைத்திருந்ததுதான் ஆச்சர்யம். படத்தின் இயக்குனர் தரணி என்பதால் இந்த கில்லி மேட்டர் நடந்திருக்கலாம். ஒரு காலத்தில் எதிரும் புதிருமாகவும் ஈக்வல் திறமைசாலிகளாகவும் இருந்த டி.ராஜேந்தரும், கே.பாக்யராஜும் ஒரே மேடையில் இருப்பது எவ்வளவு கண் கொள்ளாக் காட்சி? தனக்கேயுரிய பாணியில் அரட்டை அடித்தார் பாக்யராஜ்.
 
டி.ஆருக்கும் சிம்புவிற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது என்னவென்று தெரியும? என்று கேட்க, ரசிகர்கள் "தாடி தான் அது" என்றனர். அதற்கு அவர் "இல்லை.... டி.ஆர் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்கியது இல்லை. ஆனால் சிம்பு கிசுகிசுக்களில் அடிக்கடி சிக்கி கொள்கிறார்" என்று கூற பறந்ததே விசில்.
 
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நண்டு ஜெகன் திடீரென்று குறுக்கே புகுந்து 'எனக்கு ஒரு வித்தியாசம் தெரியுமே.. டி.ஆர் இதுவரைக்கும் கிஸ் பண்ணதே இல்லை.. எஸ்.டி.ஆர் இதுவரைக்கும் எந்த கிஸ்ஸையும் மிஸ் பண்ணியதே இல்லை " என்று கூற, அரங்கினுள் மறுபடியும் விசிலும் சிரிப்பும் களை கட்டியது.



பட முன்னோட்டம் : ஏழாம் அறிவு

 
 


'கஜினி' படத்தினை தொடர்ந்து சூர்யா - ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து இருக்கும் படம் 'ஏழாம் அறிவு'. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார்.

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த போதிதர்மன் என்ற துறவிக்கு சீனாவில் கோவில் கட்டி சாமியாக வணங்கி வருகிறார்கள். அவரது வாழ்க்கையை தற்காலத்தில் நடக்கும் ஒரு கதையுடன் இணைந்து கூறி இருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

சூர்யா போதிதர்மன் என்ற துறவி, சர்க்கஸ் கலைஞர் என இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார். இந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து இருந்தாலும் தமிழில் நாயகியாக கமல் மகள் ஸ்ருதிஹாசன் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

படத்தில் வில்லனாக Johnny Tri Nguyen என்பவரை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். இவர் SPIDER MAN படத்தில் நாயகனுக்கு டூப் போட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரவி.கே.சந்திரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரையுலகின் பல்வேறு பிரமுகர்கள் இணைந்து இருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் " படத்தின் முதல் 15 நிமிடங்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒவ்வொரு கோடி செலவழித்து இருக்கிறோம். உதயநிதி ஸ்டாலினின் RED GIANT நிறுவனத்திற்கு முதல் மெகா ஹிட்டாக அமைய இருக்கிறது. இது மாதிரி ஒரு படத்தை இன்னும் ஒரு 5 வருடங்களுக்கு சூர்யாவும் செய்ய முடியாது. என்னாலும் செய்ய முடியாது. " என்று கூறினார்.

'WHO IS BODHIDHARMAN?' என்று ஆரம்பிக்கும் இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியான போது சூர்யாவின் நடிப்பும், JOHNNY TRI NGUYENவின் வில்லத்தனமான பார்வையும் பலரைக் கவர்ந்தது. படத்தின் டிரெய்லர் வெளியான உடன் WIKIPEDIA இணையத்தில் இருக்கும் போதிதர்மன் தகவல்கள் அடங்கிய பக்கத்தை பலர் பார்த்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
7ம் அறிவு பட டிரெய்லர்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "ஒ.. ரிங்கா","யம்மா யம்மா","எலேலேயம்மா" போன்ற பாடல்கள் வரவேற்பை பெற்று இருக்கிறது. தீபாவளி வெளியீடு என்று முடிவு செய்த முதல் படம் என்பதால் தற்போது அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் இது. 1100 திரையரங்களுக்கு மேல் இப்படம் வெளியாக இருக்கிறது.

தீபாவளி வெளியீடுகளில் டிக்கெட் புக்கிங் முதலில் ஆரம்பிக்கப்பட்ட படம் ஏழாம் அறிவு தான். டிக்கெட் புக்கிங் ஆரம்பித்த சுமார் ஒரு மணி நேரத்தில் 5 நாட்களுக்கு டிக்கெட்டுகள் விற்றுவிட்டன. இதனால் தீபாவளிக்கு முந்தின நாள் மாலையே சென்னையில் இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

அந்த ப்ரீமியர் ஷோவுக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டன. சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ருதிஹாசன், ஹாரிஸ் ஜெயராஜ், ரவி.கே.சந்திரன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது பலமான கூட்டணியில் இப்படம் வெளிவர இருப்பது இப்படத்திற்கு மிகப் பெரிய பலம்.

உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் படத்தினை முழுநேரமும் விளம்பரப்படுத்தி வருகிறார்.

தீபாவளி தினமான அக்டோபர் 26ம் தேதி தமிழ் திரையுலகம் போதிதர்மன் யார் என்று தெரிந்து கொள்வதில் பெரும் ஆர்வமாக இருக்கிறது

நன்றி -விகடன்




கமலை இயக்கும் வெங்கட் பிரபு?

 
 
 
விஸ்வரூபம் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன், எந்த இயக்குநர் படத்தில் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மலையாளப் படம் ஒன்றை ரீமேக் செய்யப்போகிறார் என்ற தகவலும் கசிந்தது. இதற்கிடையில் இயக்குநர் வெங்கட் பிரவும் கமல்ஹாசனும் சந்தித்திருக்கிறார்கள். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று கூறப்பட்டாலும், விரைவில் இச்சந்திப்புக்கு பின்னால் முக்கிய காரணம் இருப்பது தெரிய வரும் என்றும் கூறுகிறார்கள்.
 
இந்த சந்திப்பு நிகழ்ந்ததே கமல்ஹாசனுக்கு வெங்கட் பிரபு ஒரு கதையை சொல்லத்தான் என்றும் தகவல்கள் கூறுகிறது. வெங்கட் பிரபு சொல்லிய கதையும் கமலை ஈர்த்திருக்கிறதாம். அதனால் விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமலை வெங்கட் பிரபு இயக்கத்தில் எதிர்பார்க்கலாமாம்.
 
சகலகலா வல்லவன் போல ஒரு முழு நீள கமர்ஷியல் ஃபார்மூலா படமாக இருக்க வேண்டும் என்ற கமலின் விருப்பத்தை வெங்கட் பிரபுவின் கதை பூர்த்தி செய்து இருக்கிறதாம்




அ.தி.மு.க. ஆட்சி மீது வாக்காளர்கள் நம்பிக்கை: பல்டி அடிக்கும் விஜயகாந்த்

 
 
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 
தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். நான் சென்ற ஒவ்வொரு இடத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களை சந்தித்து எனது கருத்துக்களை எடுத்துச்சொல்லும் வாய்ப்பினை பெற்றேன். இதன் மூலம் தமிழ்நாட்டில் தே.மு.தி.க. ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து வருகிறது என்பதும், அதனுடைய சின்னமான முரசு சின்னம் தமிழ் நாட்டில் மூலை, முடுக்குகளில் எல்லாம் ஒலிக்க ஆரம்பித்து விட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.
 
இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் ஓயாது உழைத்த கழகக் கண்மணிகளுக்கும், ஆதரவாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது இதயமார்ந்த பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
பொதுவாக ஆளும் கட்சி உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவது வாடிக்கை. அரசின் நலத் திட்டங்களுக்கும், உள்ளாட்சி மன்றங்களுக்கு அளிக்கின்ற நிதியுதவியும் அப்பொழுது தான் வந்து சேரும் என்று மக்கள் எதிர்பார்ப்பதில் நியாயம் உண்டு. அதுவும் இந்த ஆட்சிப்பொறுப்பேற்று 5 மாதங்கள் கூட ஆக வில்லை. இந்தச் சூழ்நிலையில் இந்த ஆட்சியின் மீது உள்ளாட்சி மன்றத்தேர்தலில் வாக்காளர்கள் நம்பிக்கை வைப்பதும், அரசின் நலத்திட்டங்கள் தங்களுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கைதான்.
 
ஆகவே, இந்தத் தேர்தல் முடிவுகளில் எந்த வியப்பும் இல்லை. தமிழ்நாட்டு அரசியலில் தே.மு.தி.க. தனக்கென ஒரு அரசியல் பாதையை வகுத்துக் கொண்டுள்ளது என்பதும், தே.மு.தி.க. துவங்கப்பட்ட நாளில் இருந்து கடந்த சட்டமன்றத் தேர்தல்களைத் தவிர, பல தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டே பழக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
 
தமிழ்நாட்டு மக்களிடையே அங்கீகாரம் பெற்ற அரசியல் சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதும், இன்றைய இளைஞர்களின் மாபெரும் இயக்கமாக மலர்ந்து வருகிறது என்பதும் வரலாறாகும். விவசாயி தனது விளை நிலத்தில் பயிரிடுகிறபொழுது ஒரு மகசூல் பொய்த்துப் போகிறது என்பதாலேயே, விளைநிலமும் கெட்டு விடுவதில்லை. விவசாயியும் நம்பிக்கையை இழந்து விடுவதில்லை. அடுத்த மகசூலுக்கு அவர் தயாராவது இயற்கையே.
 
அதுபோல் தே.மு.தி.க. தமிழ்நாட்டு மக்களுக்காக, அதுவும் குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களுக்காக தொடர்ந்து தொண்டாற்ற தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பண பலம், படை பலம், ஆசாபாசங்களுக்கு ஆட்படுதல் போன்றவற்றையெல்லாம் மீறி, தே.மு.தி.க. அணியினருக்கு வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு எனது இதய மார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



மரணத்தின் விளிம்பில் சிகரெட் பிடித்தபடி உயிரை விட்ட கடாபி மகன்

 
 
 
சிர்த்நகரில் பதுங்கியிருந்தபோது கடாபி கொல்லப்பட்டார். இந்த சண்டையின் போது அதை வழிநடத்தி சென்ற அவரது மகன் முட்டாசிம் கடாபியும் புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடலை பொது மக்கள் பார்வைக்காக புரட்சிப்படையினர் வைத்திருந்தனர். அப்போது அவர் பேண்ட் மற்றும் பனியன் அணிந்திருந்தார்.
 
கழுத்தில் குண்டுகள் துளைத்ததால் காயம் இருந்தது. இதனால் உடல் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சி அளித்தது. சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்பு அவர் ஒரு மறைவிடத்தில் பதுங்கி இருந்தார். இதை அறிந்த புரட்சி படை அங்கு சென்றது. அப்போது அவர் வலது கையில் பாட்டிலை பிடித்து தண்ணீர் குடித்து கொண்டிருந்தார். இடது கையில் சிகரெட்டை பிடித்தபடி புகைத்து கொண்டிருந்தார்.
 
அந்த நேரத்தில் புரட்சி படை வீரர்கள் அவரை சுட்டுக்கொன்றனர். எனவே, அவர் பிணமாக கிடந்த இடத்தில் பாதி தண்ணீர் பாட்டிலும், பாதி நிலையில் எரிந்த சிகரெட்டும் கிடந்தது. இறுதி கட்ட சண்டையின் போது கடாபி அவரது மகன் மற்றும் ஆதரவாளர்கள் பலர் பலியாகினர். இதற்கிடையே கடாபியின் நெருங்கிய ஆதரவாளர் சயீப்- அல்-இஸ்லாம் குண்டு காயங்களுடன் உயிருடன் பிடிபட்டார்.
 
தற்போது அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது போட்டோ விரைவில் வெளியிடப்படும் என இடைக்கால அரசு அல்- அரேபியா டெலிவிஷனில் அறிவித்தது. கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரம் இவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இவர்தான் ராணுவத்தை வழி நடத்தி சென்றார்.



தமிழக அமைச்சர் கருப்பசாமி மரணம்

 
 
 
தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சி கருப்பசாமி இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 56.
 
இரத்த புற்று நோயால் அவதிப்பட்ட அவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்ற இன்று மரணமடைந்தார். இவர் சங்கரன்கோவில் (தனி) தொதிகு எம்.எல்.ஏ.
 
ஜெயலலிதா தலைமையிலான புதிய அரசில் அவர் கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். கடந்த ஜூன் 15-ம் தேதி நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது இவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரானார்.
 
தலித் இனத்தைச் சேர்ந்த விவசாயியான இவர், சங்கரன்கோயில் தொகுதி்யில் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றவர் கருப்பசாமி.
 
ரத்தப் புற்று நோயால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த கருப்பசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சமீபத்தில் அவர் உடல்நிலை மோசமடைந்தது. எனவே அவரது பொறுப்புகளை அமைச்சர் சிவி சண்முகம் கவனித்து வந்தார்.
 
அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற ஒரே அமைச்சர் கருப்பசாமியாகத்தான் இருக்கும். நோய் தீவிரமடைந்துவிட்டதால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையி்ல் அவர் இறந்தார்.