Thursday, 20 October 2011

மகன் சாப்பாடு போட மறுக்கிறார் : நடிகர் லூஸ்மோகன் கமிஷனரிடம் புகார்

 
 
 
 
 
 
சாப்பாடு போட மகன் மறுக்கிறார் என நடிகர் லூஸ்மோகன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
லூஸ்மோகன் மயிலாப்பூரில் வசித்து வருகிறார். இன்று காலை போலீஸ் நிலையத்துக்கு ஆட்டோவில் வந்த அவர் போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்தார்.
அதில் எனது மகன் கார்த்திக், மனைவியுடன் சேர்ந்துகொண்டு சாப்பாடு போட மறுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நான் வேறு எதுவும் கேட்க வில்லை. மூன்றுவேளை சாப்பாடு கொடுத்தால் போதும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
புகார் அளித்துவிட்டு வெளியேவந்து செய்தியாளர்களிடம் லூஸ்மோகன் கூறியதாவது:
சினிமாவில் பலரை சிரிக்க வைத்த எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று நினைத்துக் கூட பார்க்க வில்லை. எனக்கு 3 மகள்களும், கார்த்திக் என்ற மகனும் உண்டு. மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகனுக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது.
எனது மனைவி 2004-ம் ஆண்டு இறந்து விட்டார். மகனுடன் நான் தங்கி இருக்கிறேன். அவரை நான்தான் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டேன். கடந்த 3 நாட்களாக மனைவி பேச்சை கேட்டு அவர் வீட்டுக்கு வருவதில்லை. எனக்கு சாப்பாடு வாங்கி தருவது இல்லை. வயதாகி விட்டதால் காலையில் 2 இட்லியும், இரவு 2 இட்லியும் மட்டுமே சாப்பிடுகிறேன். அதைக் கூட தர மறுக்கிறார். எனக்கு சொந்தமாக வீடு உள்ளது. அதனால் தங்குவதற்கு பிரச்னை இல்லை. என் பையன் என்னை கவனித்து சாப்பாடு மட்டும் கொடுத்தால் போதும்.
இவ்வாறு லூஸ்மோகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கமிஷனரிடம் இவர் அளித்த புகார் மயிலாப்பூர் போலீசாருக்கு அனுப்பப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.



கொச்சியில் குட்டித்தீவு வாங்கியிருக்கும் நயன்தாரா

   
 
 
 
 
 
நடிகை நயன்தாரா கொச்சி அருகே குட்டித் தீவு ஒன்றை வாங்கியுள்ளாராம்.
 
நடிகை நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்துகொள்ளப் போகின்றனர் என்பது அனைவரும் தெரிந்ததே. அவர்கள் திருமணத்திற்குப் பிறகு மும்பையில் செட்டிலாகின்றனர். அதற்காக ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறார் நயன். எப்பொழுது ஷாப்பிங் சென்றாலும் தனக்கு டிரெஸ் எடுக்கிறாரோ இல்லையோ, தவறாமல் பிரபுதேவாவுக்கு டிரஸ் எடுத்துவிடுவார்.
 
இந்நிலையில் கொச்சியில் இயற்கை எழில் கொஞ்சும் குட்டித் தீவு ஒன்றை வாங்கியுள்ளாராம் நயன்தாரா. இது தவிர திருவல்லா, எர்ணாகுளம், தேவரா ஆகிய இடங்களிலும் வீடு வாங்கியுள்ளாராம்.
 
சம்பாதித்த பணத்தை எல்லாம் நயன் பிரபுதேவாவுக்காக செலவளித்துவிட்டார். தான் ஆசை, ஆசையாக வாங்கிய பிஎம்டபுள்யூ காரைக் கூட விற்றுவிட்டார் என்றெல்லாம் ஒரு காலத்தில் செய்திகள் வந்தது என்பது குறிப்பிடத்தகக்து.



'காதல்' சந்தியாவுக்கு திருமணம்

   
 
 
 
 
 
தமிழ் சினிமாவில் பெரிதாக வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்டவர் நடிகை சந்தியா. அவர் நடித்த காதல் படம் ஓடிய ஓட்டம் அப்படி.
 
ஆனால் அடுத்தடுத்த படங்கள் பெரிதாக கைகொடுக்காததால், சந்தியாவுக்கு தமிழில் பெரிய வெற்றிப் படங்கள் அமையவில்லை. கடைசியாக இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் சின்ன வேடத்தில் வந்து போனார்.
 
சொந்த மொழியான மலையாளப் பக்கம் போனார். சில படங்களும் நடித்தார். ஆப்தரக்ஷகா கன்னடப்படத்திலும் நடித்தார்.
 
இப்போது தமிழில் நூற்றுக்கு நூறு என்ற படத்திலும் மலையாளத்தில் டி 17 என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
 
இந்த நிலையில் நடித்தது போதும், திருமணம் செய்து செட்டிலாகும் வழியைப் பார் என்ற அவரது அம்மாவின் அட்வைஸ்படி, திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.
 
மாப்பிள்ளையும் பார்த்தாகிவிட்டது என்கிறார்கள். ஆனால் இன்னும் அதுகுறித்த விவரங்களைச் சொல்லாமல் ரகசியம் காத்து வருகின்றனர்!



இந்தி நடிகை கீதா பஸ்ராவை மணக்கிறார் ஹர்பஜன் சிங்?

 
 
 
இந்தி நடிகை கீதா பஸ்ராவை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மணக்கப் போவதாக கூறப்படுகிறது.
 
இங்கிலாந்தில் வசித்து வரும் பஞ்சாபிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் கீதா. தற்போது மும்பையில்தான் வசித்து வருகிறார். தில் தியா ஹை மற்றும் தி டிரெயின் ஆகிய இரு படங்களில் மட்டும் நடித்துள்ளார். டிரெயின் படத்தில் கள்ளக்காதலில் ஈடுபடும் பெண் வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் கீதா. திரைப்படங்கள் தவிர ரஹத் பதே அலிகான் மற்றும் சுக்சீந்தர் ஷின்டாவின் கும் சம் கும் சம் என்ற வீடியோ பாடலுக்கு ஆடியுள்ளார் கீதா.
 
கிஷோர் நமீத் கபூரின் நடிப்புப் பள்ளியில் நடிப்புப் பயிற்சி முடித்தவர் கீதா. இருப்பினும் தற்போது படங்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில் கீதாவுக்கும், ஹர்பஜனுக்கும் இடையே காதல் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை வெறும் நட்பு என்று கீதா கூறியிருந்தார். ஆனால் இந்த நட்பு தற்போது காதலாக மாறி கல்யாணத்தை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
 
கீதா, ஹர்பஜன் திருமணம் எப்போது என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக விரைவில் முறைப்படி இரு வீட்டாரும் அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.



திருச்சி மேற்கு: வெற்றி வித்தியாசம் அதிகம்- வாங்கிய வாக்குகள் குறைவு!

 
 
 
திருச்சி மேற்குத் தொகுதியில் கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் வென்றதை விட இந்த முறை அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதிமுகவும் சரி, திமுகவும் சரி கடந்த தேர்தலை விட இந்த முறை குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளன.
 
இல் அதிமுகவை விட திமுகவுக்குத்தான் அதிகஅளவிலான வாக்குகள் குறைந்துள்ளன.
 
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரியம் பிச்சை 77,890 வாக்குகள் பெற்றார். திமுகவின் கே.என்.நேரு 70,711 வாக்குகள் பெற்றார். வெற்றி வித்தியாசம் 7179 ஆகும்.
 
இந்த முறை அதிமுக வேட்பாளர் பரஞ்திசோதி 69,029 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். அவருக்கு அடுத்து வந்த கே.என்.நேரு 54,345 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் இரு கட்சிகளுமே கடந்த தேர்தலை விட குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளன. அதேசமயம், கடந்த தேர்தலை விட இந்த முறை அதிமுகவின் வெற்றி வித்தியாசம் அதிகரித்துள்ளது. அதாவது இரட்டிப்பாகியுள்ளது.
 
கடந்த தேர்தலை விட இந்தத்தேர்தலில் அதிமுகவுக்கு 8961 வாக்குகளும், திமுகவுக்கு 16,366 வாக்குகளும் குறைவாக கிடைத்துள்ளன.
 
வெற்றி வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் கூட வாங்கிய ஓட்டுக்கள் குறைந்திருப்பது அதிமுகவை கவலையுறச் செய்துள்ளது.
 
 


'கிரண் லோக்பால் பேடி'யின் அல்பத்தனம் அம்பலம்!!

 
 
அரசு தரும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் செய்யும் கிரண்பேடி, தன்னை அழைப்பவர்களிடம் முழுக் கட்டணத்தையும் வசூலித்து வந்துள்ளது அம்பலமாகியுள்ளது.
 
ஹஸாரே குழுவில் முக்கிய அங்கம் வகிப்பவர் கிரண் பேடி. ரமோன் மக்சாசே விருதுபெற்றவர். இந்திய அரசின் உயர்ந்த கேலன்டரி விருதை குடியரசுத் தலைவரிடம் பெற்றவர். இதனால் அவர் வாழ்நாள் முழுவதும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் மேற்கொள்ள அரசு வகை செய்துள்ளது.
 
ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி விருப்ப ஓய்வு பெற்று, டீம் அன்னா பெயரில் டிவிக்களில் குழாயடிச் சண்டை நடத்தி வருகிறார். ஹஸாரேவின் கூட்டங்களில் இவர்தான் பிரதான பேச்சாளர். ஊழலை எதிர்ப்பு என்ற பெயரில், இவரது பேச்சில் தெறிக்கும் அராஜகமும் சர்வாதிகார மனோபாவமும் பலரையும் முகம் சுழிக்க செய்து வரும் நிலையில், கிரண் பேடியின் அல்பத்தனத்தை தோலுரித்துக் காட்டியுள்ளன ஆங்கில நாளிதழ்கள்.
 
ஓய்வில் உள்ள கிரண் பேடியை, பல்வேறு என்ஜிஓக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பொரேட் நிறுவனங்கள் சொற்பொழிவாற்ற அழைக்கின்றன.
 
இந்த சொற்பொழிவுக்காக அவருக்கு பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட், ஐந்து நட்சத்திர தங்குமிடம் என சகல வசதிகளும் செய்து தருகிறார்கள். தனி அன்பளிப்புகளும் உண்டு.
 
ஆனால் கிரண்பேடியோ, இந்த நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தனக்கு அரசு வழங்கும் சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம் செய்துள்ளார். ஆனால், தனியார் அமைப்புகளிடமிருந்து முழுக் கட்டணத்தையும் வசூலித்துள்ளார். அதுமட்டுமல்ல, பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு, எகானமி வகுப்பில் பயணம் செய்துள்ளார்.
 
கிரண்பேடி கேலன்டரி விருது பெற்றவர். இவருக்கு அனைத்து ஏர் இந்தியா விமானங்களிலும் 75 சதவீத சலுகை வழங்கப்படும். இவரது கேலன்டரி விருது எண் 433. இந்த சலுகையை முழுதாக அனுபவிக்கும் கிரண்பேடி, பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டுக்கான பணத்தை முழுவதுமாகப் பெற்று வந்துள்ளார் பல ஆண்டுகளாக.
 
அவர் பயணம் செய்த எகானமி விமான டிக்கெட்டுகள், என்ஜிஓக்களிடம் பிஸினஸ் கிளாஸுக்காக பணம் வசூலித்ததற்கான ரசீதுகள் என 12-க்கும் மேற்பட்ட ஆதாரங்களும் வெளியாகியுள்ளன. கடைசியாக கடந்த செப்டம்பர் 29-ம் தேதி, இதுபோல பயணம் செய்து அதிகப்படியாக கட்டணத்தை வசூலித்துள்ளார் கிரண் பேடி.
 
2006-ம் ஆண்டு இவர் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் இருந்தபோதே இதுபோன்ற ஏமாற்று வேலையைச் செய்துள்ளார். அரசு அதிகாரியான இவர், இதுபோல செய்திருப்பது சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். நேரடியாக லஞ்சம் பெற்றதற்கு சமமான இந்தக் குற்றச்சாட்டுக்கு பிசிஏ எனப்படும் அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு சட்டப்படி தண்டனை உண்டு!
 
இந்த டிக்கெட்டுகள் மற்றும் பில்களுக்கான தொகையை கிரண் பேடி, தான் தலைவராக உள்ள இந்தியா விஷன் பவுண்டேஷன் பெயரில் காசோலைகளாகப் பெற்றுள்ளார். இவரது கணக்காயர் வியாஸ் இதுகுறித்துக் கூறுகையில், கிரண்பேடி தனது சொற்பொழிவுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு வசூலித்த தொகையை விட மிகக் குறைவாகத்தான் செலவிட்டுள்ளார். இதனால் அவரது கணக்கு பொருந்தி வரவில்லை. ஆனால் இது ஒரு சேமிப்பாக காட்டப்பட்டுள்ளது, என்றார்.
 
கிரண்பேடியின் தில்லு முல்லு - சில ஆதாரங்கள்:
 
செப்டம்பர் 29, 2011: டெல்லி - ஹைதராபாத் பயணம் - ஏர் இந்தியா ஃப்ளைட் எண் ஏஐ 560- எகானமி க்ளாஸ். அடுத்த நாள் ஏஐ 539 விமானத்தில் டெல்லி திரும்பியுள்ளார். இதற்கு அவர் செலவிட்ட தொகை ரூ 17134 மட்டுமே.
 
ஆனால் கிரண்பேடி கணக்கு காட்டியுள்ள தொகை ரூ 73,117!
 
டெல்லி - ஹைதராபாத் - சென்னை விமானத்தில் வந்த கிரண் பேடி, மீண்டும் டெல்லி - சென்னை - டெல்லி விமானத்தில் திரும்பியுள்ளார். சலுகைக் கட்டணத்தில் பயணம் செய்த அவர், பிஸினஸ் கிளாஸ் டிக்கெட்டுக்கான முழுத் தொகையை வசூலித்துள்ளார்.
 
மே 30, 2011: டெல்லி - புனே கிங்பிஷர் விமானத்தில் பயணம் செய்த அவர், ஜெட் ஏர்வேஸில் திரும்பியுள்ளார். இதற்கு மொத்த பயணக் கட்டணம் ரூ 12458. ஆனால் கிரண்பேடி வசூலித்துள்ளது ரூ 26386.
 
நவம்பர் 25, 2010: டெல்லி - மும்பை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்ற அவர் அடுத்த நாள் ஏர் இந்தியா விமானத்தில் திரும்பியுள்ளார். இதற்கான பயணக் கட்டணம் ரூ 14097. கிரண்பேடி வசூலித்த தொகை ரூ 42109.
 
2009, 2008, 2007 மற்றும் 2006-ம் ஆண்டுகளிலும் இதுபோல பல முறை சிக்கன வகுப்பில் பயணித்த கிரண்பேடி, தான் செலவழித்ததை விட 5 மடங்கு அதிக தொகையை வசூலித்துள்ளார்.
 
ஊழல் ஒழிப்பு பற்றி வாய்கிழிய பேசும் கிரண் பேடி, தனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்த அளவு முறைகேடு செய்துள்ளது எந்த வகையில் சேரும் என கேள்வி எழுப்பியுள்ளனர் ஹஸாரே எதிர்ப்பாளர்கள்.
 
 


காலைக் கட்டி பந்தயத்தில் விட்டால் எப்படி ஜெயிப்பார் நேரு?- கருணாநிதி

 
 
காலைக் கட்டி விட்டு, பந்தயத்தில் ஓடச் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் கே.என்.நேருவின் நிலை இருந்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
 
திருச்சி இடைத் தேர்தல் முடிவு குறித்து இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் கருத்துக் கேட்டபோது, ஓட்டப் பந்தயத்தில் காலைக் கட்டி விட்டு ஓடச் சொன்னால் எப்படி இருக்குமோ அதே நிலையில்தான் இருந்தார் கே.என்.நேரு. பிறகு எப்படி அவரால் வெல்ல முடியும் என்றார் கருணாநிதி.
 
பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் முதல்வர் ஜெயலலிதா ஆஜரானது குறித்த கேள்விக்கு அவர் பதிலலிக்கையில், நீதிக்குத் தலை வணங்கியுள்ளார் ஜெயலலிதா. நேற்று கூட அவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நேரில் ஆஜராவதைத் தவிர்க்கும் நோக்கத்தில்தான் என்றார் கருணாநிதி.
 
ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்று கோருவீர்களா என்று கேட்டதற்கு, அவர் தான் எதற்கெடுத்தாலும் பதவியில் இருப்பவர்களை ராஜினாமா செய்யக் கோருவார் என்றார்.
 
 


உலகமெங்கும் 100 டாலர் 'ஃப்ரீ'...ப்ளாக்பெர்ரி

 
 
கடந்த வாரம் தொடர்ந்து மூன்று தினங்கள் ப்ளாக் அவுட் ஆனது ப்ளாக்பெர்ரி. இந்த நாட்களில் அந்த செல்போன் வைத்திருந்த வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
 
காரணம், மின்னஞ்சல், வங்கிப் பரிவர்த்தனைகள், ஃபேஸ்புக் என பல்வேறு பயன்பாடுகளுக்கும் இவர்கள் இந்த ப்ளாக்பெர்ரியை மட்டுமே நம்பியிருந்ததுதான்.
 
மூன்று நாட்களுக்குப் பிறகு படிப்படியாக ப்ளாக்பெர்ரி சேவைகள் பழைய நிலைக்குத் திரும்பின. ஆனால் இந்த மூன்று நாட்களும் பட்ட அவதியை எப்படி ஈடுகட்டுவது? வாடிக்கையாளர்கள் பொறுமையோடு இதை சகித்துக் கொண்டதற்கு என்ன பரிசு?
 
இதற்கு உடனடியாக ஒரு திட்டத்தை அறிவித்தது ப்ளாக்பெர்ரியைத் தயாரித்து வழக்கும் ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம். அதன்படி உலகமெங்கும் உள்ள தங்களின் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 100 டாலர்கள் இழப்பீடாக வழங்குவதாகக் கூறியது. இந்த இழப்புத் தொகை பணமாக இல்லாமல், செல்போனில் சார்ஜ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஸ்பெயினில் ப்ளாக்பெர்ரி சேவை வழங்கும் டெலிபோனிகா நிறுவனம் ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் கட்டணத்தைக் கணக்கிட்டு வாடிக்கையாளர் கணக்கில் சேர்த்துவிட்டது.
 
யுஏஇ நாட்டில் இந்த சேவையை அளிக்கும் எடிசாலட், சேவை பாதிக்கப்பட்ட மூன்று தினங்களுக்கான கட்டணத்தை ரத்து செய்துள்ளதோடு, கூடுதலாக மூன்று தினங்களுக்கு இலவசமாக சேவை அளிப்பதாக அறிவித்துள்ளது.
 
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் மூன்று நாட்களுக்கு இலவச சேவை வழங்கியுள்ளன.
 
ஆனால், ப்ளாக்பெர்ரி சேவைகளை வழங்கும் இந்திய நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் போன்றவர்கள் மட்டும் இந்த இழப்பீடு பற்றி வாயைத் திறக்க மறுக்கிறார்கள்!
 
இத்தனைக்கும் யுஏஇ போன்ற நாடுகளில் உள்ளதை விட இரு மடங்கு ப்ளாக்பெர்ரி வாடிக்கையர் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏர்டெல் சேவையைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட மூன்று தினங்களுக்கு எந்த வகையில் நஷ்ட ஈடு தரப்போகிறார்கள் என்பதை இதுவரை அறிவிக்கவே இல்லை.
 
இதுகுறித்து ப்ளாக்பெர்ரி நிறுவனத்திடம் விசாரித்தபோது, பதில் கூறாமல் மழுப்பியுள்ளனர். எங்கள் பார்ட்னர் நிறுவனங்களோடு தொடர்புடைய விஷயங்களை பேசுவதாக இல்லை என்று மட்டும் பதில் கூறிவிட்டது அந்த நிறுவனம்.
 
வோடபோன் நிறுவனமும் இதுகுறித்து எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த பிரச்சினை குறித்து தங்களிடம் சண்டைபோட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துக்கு மட்டும் இழப்பீடாக மூன்று ப்ளாக்பெர்ரி செட்களை கொடுத்து அமைதியாக்கிவிட்டார்களாம். அந்த நிறுவனம் அதிக அளவில் வோடபோன் ப்ளாக்பெர்ரியை பயன்படுத்தியதால் இந்த சலுகையாம்!
 
ஏர்செல், ரிலையன்ஸ் போன்றவையும் ப்ளாக்பெர்ரி சேவை அளித்தாலும், குறைந்த எண்ணிக்கையிலான வாடிக்கையர் இருப்பதால் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளன.
 
ப்ளாக்பெர்ரியின் வருமானம் அமெரிக்கா - கனடா போன்ற நாடுகளில் குறைந்தாலும், இந்தியா போன்ற நாடுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் வருவாயைக் கொட்டும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அந்த நிறுவனம் பெப்பே காட்டியுள்ளது எந்த வகை நியாயம் என்கிறார்கள் ப்ளாக்பெர்ரி வாடிக்கையாளர்கள்!



மத்திய அரசுக்கு திமுக ஆதரவை வாபஸ் பெற வேண்டும்-கூடங்குளம் போராட்டக் குழு

 
 
 
கூடங்குளம் பிரச்சனையை முன்வைத்து மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும் என போராட்டகுழு வலியுறுத்தியுள்ளது.
 
இதுகுறித்து கூடங்குளத்தில் இன்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில்,
 
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக அணுசக்தி துறையினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசி வருகின்றனர். அணுமின் நிலையத்தில் டிசம்பர் மாதம் மின் உற்பத்தி தொடங்கும் என்று அணுமின் நிலைய அதிகாரிகள் முன்பு தெரிவித்திருந்தனர். ஆனால் இப்போது நவம்பரில் மின் உற்பத்தி தொடங்கும் என அணு சக்தி ஆணைய தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூறுகிறார்.
 
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து மத்திய அரசும் சரி, அணுமின் நிலைய அதிகாரிகளும் சரி தெளிவான நிலையில் இல்லை. மக்களின் உயிர் போராட்ட பிரச்சனையில் பொறுப்பற்ற முறையில் பேசுவது வேதனைக்குரியது. இந்த நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையும் பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்ததையும் நாங்கள் வரவேற்கிறோம்.
 
''முதல்வர் காப்பாற்றுவார்-திமுக செயல்பட வேண்டும்''
 
எங்களை முதல்வர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில் திமுகவும் இந்த விஷயத்தில் செயல்பட வேண்டும். தமிழக மக்களை காப்பாற்றுவதற்காக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி்முக வாபஸ் பெற வேண்டும்.
 
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். அந்தக் குழுவை ஏற்றுக்கொள்ள முடியாது. அணு சக்திக்கு ஆதரவானவர்கள் எப்படி மக்கள் நலன் குறித்து சிந்திப்பார்கள் என்றார்.



நடிகையோடு அதுவா...! - ஆவேசம் பார்த்திபன்

 
 
 
சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்த வித்தகன் படத்தின் இசைவெளியீடு பிரமாண்டமான முறையில் நடந்தது. விழாவுக்கு பல நடிகைகள் வந்திருந்தும் படத்தின் நாயகி பூர்ணா வரவில்லை. அதே போல் படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரும் வரவில்லை.
 
ஆனால், பூர்ணா வராதது தான் விழாவுக்கு வந்த பலரால் பேசப்பட்டது. அதை தொடர்ந்து, படம் நடித்து முடிப்பதற்குள் படாதபாடு படுத்திவிட்டார் இயக்குனர், அதனால் தான் பூர்ணா வரவில்லை என்று செய்திகள் எழுதப்பட்டது.
 
இதைப்பார்த்து ஆவேசம் அடைந்த, 'வித்தகன்' நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், நான் நடிகைகள் எல்லோரையும் மிகவும் மதிப்பேன். நடிகை தொழில் என்பது அழகான ஒரு விஷயம். நம்முடைய விருப்பத்திற்கு எத்தனை பெண்கள் வேண்டுமானாலும் இடம் கொடுப்பாங்க, ஆனால் அவர்கள் எல்லோரையும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க முடியாது. நடிப்பது என்பது ஒரு ஸ்பெஷலான விஷயம்.
 
நான் நடிகைகளிடம் நடிப்பை தவிர எந்த விஷயத்தையும் எதிர்பார்ப்பதில்லை. இதை உண்மையாகவே சொல்கிறேன். ஆசாபாசங்களை நிறைவு செய்துகொள்ள வசதிகள் நிறைய இருக்கிறது. அதை போய் ஒரு நடிகையிடம் எதிர்பார்ப்பது என்னை மாதிரி இந்த தொழிலை கௌரவமாக நேசிக்கிற இயக்குனர்களிடம் இல்லாத ஒரு விஷயம்.
 
இதை நிறைய இயக்குனர்கள் சார்பாகவே சொல்கிறேன். நடிகையிடம் நடிப்பை தவிர மற்ற விஷயங்களை எதிர்பார்த்தால் அவர் ஒரு சரியான இயக்குனர் இல்லை என்பதே என்னுடைய கருத்து.
 
அந்த மாதிரி ச்சீப்பான அபிப்பிராயம் எனக்கு கிடையாது. இதை அந்த நடிகையிடமே கேட்டு தெரிந்துகொள்ளளாம். பூர்ணாவை ஷூட்டிங்கில் யாரோ கையை பிடித்து இழுத்த மாதிரியும்... இல்லை, இழுக்க முயற்சி செய்த மாதிரியும்... இந்த செய்திகள் ரொம்ப ரொம்ப அறுவருப்பாக இருக்கிறது.
 
அப்படிப் பார்த்தால் படத்தின் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரும் தான் விழாவுக்கு வரவில்லை. அவரையும் நான் கையை பிடித்து இழுத்தேனா என்ன? பூர்ணா வராததால் வித்தகன் விழாவுக்கு எந்த பாதிப்புமே இல்லை என்றார்.